Saturday, August 27, 2005

105 ஒன்பது மாத கருவின் கொலை

ஒன்பது மாதக் கருவின் கொலை.

காரணம் ஜாதி, குடும்ப மானம், ஊர் கட்டுப்பாடு, திருமணத்திற்கு முன் கர்ப்பமானது..

இந்த செய்தி படித்ததிலிருந்து மனது மிகவும் நிலையில்லதிருக்கிறது.

இதில் எழும் கேள்விகள் சில விடைஇல்லாதவை.

கற்பென்பது என்ன.. ஒரு கணவனுடன் மட்டும் இருந்தால் கற்புடையவளா.. அப்படியானால் நம் நாட்டின் பெரும்பாலான பெண்கள் கற்புக்கரசிகள் தானே. யாரும் அப்படி ஏன் சொல்வதில்லை.

பல கணவர்களுடன் இருந்தாலும் கற்புடையவர் அல்லவா..திரௌபதி எந்தக் கணக்கில் கற்புகரசி ஆனாள்.. அதே வகையில் கைம்பெண்மணம் கற்பைக் கெடுக்குமே.. அப்போது பல கணவர்கள் இருந்தாலும் கற்புடையவளே.

அப்படியானால் , ஒரு பெண்ணுடைய விருப்பமுடன் பலருடன் இருந்தால் அவள் கற்பிழந்தவளா.. திரும்ப திரௌபதி கேள்வி..

வண்புணர்ந்தால் கற்பிழந்தவளா.. இதில் அவளது தவறு என்ன.. ஆணல்லவா கற்பிழந்தவன் என்று கூறப்பட வேண்டும்..

ஏன் இத்தனை ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா?

கீழே தரப்பட்டிருக்கும் ஆ. வி கட்டுரையைப் படியுங்கள்..

என்ன அலட்சியமாக சொல்கிறார்கள்.. ஒரு பெண்ணை எரித்ததைப் பற்றி. வி எம் எழுதிய கதையில் (http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html )ஒரு பெண் தோற்று ஜாதி ஜெயிக்கக் கூடாது என்று ஒரு கதை முடிவை மாற்றினேன்..
(http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_17.html)

அய்யோ.. இது கதை அல்ல நிஜம்.. எதில் என்னதை மாற்ற...

திருந்துவார்கள்ள்.. திருந்துவோமா?

அன்புடன் விச்சு

தப்பு வழிக்கு போன தாயம்மா... எரித்துக் கொன்ற தாய்மாமன்கள்!

"தப்பான வழிக்கு பொண்ணுங்க போனா... தாய்மாமனுங்க சும்மா இருக்க மாட்டானுங்க. அதுக்கு உதாரணம்தான் இந்த தாயம்மா..." கீழத்தூவல் கிராமத்தில் எச்சரிக்கும் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பேச்சு.


தாய்மாமன்களால் ஓட ஓட விரட்டி ஊர்க்காரர்களின் ஒத்துழைப்போடு கொல்லப்பட்டதோடு... தீ வைத்தும் எரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்தான் தாயம்மாள். இவள் செய்த பாவம்... திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதுதான்!

விஷயத்தை விசாரிக்கப்புகுந்தால்... இந்த ஏரியாவுல இதெல்லாம் சகஜம் என்கிற ரீதியில் பதில் வந்து நம்மை பகீரிட வைத்ததது!
எரித்த இடம்...

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த சுசீலா என்பவரின் இரண்டாவது மகள் தாயம்மா. சற்றே வெகுளிப் பெண்ணான தாயம்மா, எல்லோரிடமும் வெள்ளந்தி யாகப் பழக, அதுவே அவளை ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது. திருமண வயதிலிருந்த தாயம்மாவுக்கு சபலத்தை உண்டாக்கி, இளைஞர்கள் பலரும் தங்கள் இஷ்டம்போல அவளை அனுபவித்திருக்கின்றனர். இதனால் அடிக்கடி கர்ப்பமாகியிருக்கிறார் தாயம்மா. நான்கு முறை கரு கலைத்துவிட்ட நிலையில், ஐந்தாவது முறையாகவும் கர்ப்பமாகியிருக்கிறார் தாயம்மா.

இத்தனை முறையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிராமத்துக்கு, ஐந்தாவது முறை அவள் கர்ப்பமானதும் கோபம் பொத்துக் கொண்டிருக்கிறது. நான்கு தடவைகளாக தாயம்மாவின் கர்ப்பத்துக்கு, அவளுடைய சாதியைச் சேர்ந்த ஆண்களே காரணமாக இருக்க... ஐந்தாவது முறை கர்ப்பத்துக்கு முடிவெட்டும் தொழில் செய்யும் ஒரு நபர் காரணம் என்று தெரிய வந்ததுதான் கோபத்தைக் கிளப்பியிருக் கிறது. இந்த விஷயம் ஊருக்குள் தொடர்ந்து பற்றி எரிந்தபடி இருக்க, இது தொடர்பாக அடிக்கடி கட்டப்பஞ்சாயத்துக்களும் நடந்திருக்கின்றன. இந்தச் சூழலில் தாயம்மா ஒன்பது மாத கர்ப்பிணியாக நிற்க, மதுரையிலிருந்து ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறார், தாயம்மாளின் தாய்மாமன் அண்ணாதுரை!

ஊரே கூடி, "அசிங்கமாயிருச்சுடா" என அண்ணாதுரையை சூடேற்ற... அவர், மறுநாள் காலை 8.00 மணிக்கு தாயம்மாவை அரிவாளோடு விரட்டியிருக்கிறார். ஒன்பது மாத சிசுவை சுமந்திருந்த தாயம்மா, அலறி அடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள காலனிக்குள் நுழைந்திருக்கிறாள்...

மேற்கொண்டு நடந்ததைப் பற்றி பேசும் காலனிவாசிகள் சிலர், ÔÔஅந்தத் தாயம்மா பாவம்.... வெகுளி... ஆனது ஆயிப்போச்சுனு விடாம, பட்ட பகல்ல அரிவாளோட துரத்தித் துரத்தி அவளை வெட்டுனாங்க. ரத்தம் சொட்டச் சொட்ட ஓடி, கம்மா பக்கம் விழுந்து செத்துட்டா. அப்படியே சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போய் எரிச்சு, கதையை மூடி மறைச்சுட்டாக.

அவ ஓடினது... அவங்க துரத்துனது... எல்லாமே காலையில பசங்க பள்ளிக்கூடம் கிளம்பற நேரத்துலதான். இதையெல்லாம் பார்த்துப் பயந்துபோன எங்க புள்ளைக பேயடிச்ச மாதிரியாகிப் போச்சுதுங்க. அதுங்களோட பயம் தெளிய ÔகொழுமோருÕ காய்ச்சிக் கொடுத்திருக்கோம்ÕÕ என்றார்கள், தாங்களும் பயத்திலிருந்து மீளாதவர்களாக!

ஊருக்குள் போய் தாயம்மாவை பற்றிக் கேட்டதுமே நம்மிடம் பேசுவதைத் தவிர்த்து விலகிச் சென்றனர் கிராமத்தினர். ஒரு வழியாக சிலரை நம்மிடம் பேச வைத்தோம். ÔÔபெயர்களை வெளியிடக்கூடாதுÕÕ என்ற நிபந்தனையோடு பேசியவர்கள்,

ÔÔதம்பீ... அந்த சிறுக்கி இருக்கிறதவிட சாகறதுதான் மேல். அம்புட்டு அசிங்கமாப் போச்சு. எங்க பயகன்னாகூட புடிச்சு கட்டிவச்சுடலாம். ஆனா, வேற சாதிக்காரன்னு கேள்விப்பட்டதும் எங்களுக்கு திக்னு ஆகிடுச்சு. அந்த ஆத்திரத்துலதான் தாய்மாமன்காரன் வெட்டிப் போட்டுட்டான்.

ஊருக்காரவுக சிலர் கூடமாட ஒத்தாசை பண்ணிக் கொளுத்திட்டாங்க. தீ எரியவும் அவ வயிறு வெடிச்சு, புள்ள வெளியில வந்து விழுந்துச்சு... அது ஆம்பளை புள்ள. கொளுத்தப் போறாங்கனு போலீஸ§க்கே தெரியும். அவங்களும் கண்டுக்காமதான் இருந்தாங்க.

எல்லாம் முடிஞ்ச பிறகு, தாயம்மாவோட சித்தப்பன் ஒருத்தன், போலீஸ்கிட்ட போய், எஸ்.பி. வரைக்கும் கம்ப்ளெயின்ட் பண்ணுவேன்னு சத்தம் போடவும்... வேற வழியில்லாம போலீஸ் எங்ககிட்ட வந்து பேசுனாங்க. அதுக்குப் பிறகு வி.ஏ.ஓவை விட்டு கம்ப்ளெயின்ட் கொடுக்க வெச்சாங்க. தாயம்மாவை வெட்டின அண்ணாதுரையையும் சடலத்தை எரிக்க உதவியா இருந்த அவனோட தம்பி கருப்பனையும் நாங்களே போலீஸ்கிட்ட ஒப்படைச்சோம் என்றவர்கள்,

தம்பீ... இதெல்லாம் இந்த ஏரியாவுல சர்வ சாதாரணம்.... சாதி மானத்தை கெடுக்கறவளுக இருந்துதான் என்ன ஆகப்போகுது... எங்களுக்கு மானம்தான் பெரிசு என்று தங்களுடைய செயல்கள் அத்தனையையும் நியாயப்படுத்தி னார்கள், கொஞ்சம்கூட மனிதாபிமானம் அற்றவர்களாக!

கொலை நடந்த இடம், பிணத்தை எரித்த இடம் எல்லாமே கீழத்தூவல் போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி சுற்றியேதான் இருக்கின்றன. இருந்தும் எதையும் கண்டுகொள்ளாமல் கடைசிவரை வேடிக்கை பார்க்கவே செய்திருக்கிறது போலீஸ்!

காவல் நிலையத்துக்குச் சென்ற நாம், உள்ளே எட்டிப்பார்த்தோம். அண்ணாதுரை, கருப்பன் இரண்டு தாய்மாமன்களும் உட்கார்ந் திருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தோம். அவர்களைப் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது, தாவி வந்த எஸ்.ஐ., நீங்க வேற... இவங்களுக்கு கைவிலங்கு போட்டதுக்கே ஊர்க் காரங்க சண்டைக்கு வந்துட்டாங்க. இதுல போட்டோவெல்லாம் எடுத்தா வில்லங்கமாகி போயிரும் என்றவர், பொண்ணு கேரக்டர் சரியில்லை. அதான் கொலைக்கு காரணம் என்று கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் soன்னார்.

கைதாகியிருக்கும் இருவரும், எங்க அக்கா பொண்ணு தாயம்மா கல்யாணத்துக்கு முந்தியே கர்ப்பமாயிட்டா. முறைதவறி நடந்த கழுதை உயிரோட இருக்கக் கூடாதுனு கொலை பண்ணிட்டோம் என்று வாக்குமூலம் கொடுக்க... அதைப் பதிவு செய்துகொண்டு அவர்களை உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்!

ஏரியாவில் வெகு காலமாக பணியாற்றும் நமக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டோம். அவர் நம்மிடம்,

தம்பீ இது உங்களுக்குப் புதுசு... ஆனா, இந்த ஏரியாவுல இதெல்லாம் சகஜம். முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதி கிராமங்களில் காலம்காலமாக தாய்மாமன்களால் பல பெண்கள் கொல்லப் பட்டிருக்காங்க. அதுல ஒண்ணுதான் இந்தக் கீழத்தூவல் தாயம்மா!

போனமாசம்கூட கமுதி பக்கம் ஒரு கிராமத்துல (பெயர் தவிர்க்கப்படுகிறது), வேற சாதிப் பையனை காதலிச்ச காரணத்துக்காக, பொண்ணை கொலை பண்ணி, மஞ்சனாத்தி மரத்துல கட்டி தொங்கவிட்டுட்டானுங்க தாய்மாமனுங்க. தற்கொலைனுதான் கேஸ் பதிவாகியிருக்கு.

சாயல்குடி பகுதியில இப்படி தப்பு வழியில சிக்கிக்கற மருமகள்களை ஓடிமுள்ளுல வச்சு கொளுத்துவாங்களாம் தாய்மாமன்கள். பரமக்குடி ஏரியாவுலயும் இதெல்லாம் சகஜமாத்தான் இருக்கு.

தப்பான வழியில போற பொண்ணுங்களத்தான் தாய்மாமன்கள் கொல்றானுங்க. அதனால, ஒட்டுமொத்த கிராமமும் இந்தக் காரியத்துக்கு சப்போர்ட்டாதான் இருக்காங்க. காவல்துறையோட காதுகளுக்கு விஷயம் வந்தாலும் சாட்சிகள் இருக்காது. கேஸ§ம் நிக்காது. அதனாலேயே போலீஸ் இந்த விஷயத்துல பெரிசா அக்கறை காட்டுறது இல்லை என்று சொன்னவர்,

பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் கட்டிக் கொடுக்கற வரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலயும் அவளைப் பெற்ற தகப்பனைவிட, தாய்மாமனுக்கே அதிக மரியாதை தர்ற சமூகம் இது. அந்த அளவுக்கு கொடுக்கற முக்கியத்துவம்தான் மருமகள்கள் மேல அசைக்கமுடியாத உரிமையை ஏற்படுத்திடுது. அப்படிப்பட்ட மருமகள்கள் தடம்மாறும் போதுதான் பிரச்னையே வெடிக்குது.

உனக்குத்தான் அசிங்கம்னு தாய்மாமனைப் பார்த்து விஷம் ஏத்துற வேலைகளை கிராமத்து ஜனங்க சிலர் செய்யும்போது, தாய்மாமன்களுக்கு உசுப்பேறிடுது. அதுதான் கடைசியில கொலையில வந்து நிக்குது என வேதனையோடு பேசினார் அந்த போலீஸ் அதிகாரி!

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜியான அலெக்சாண்டர் மோகனிடம் தாய்மாமன்களின் கொலை பற்றிக் கேட்டோம்.

குடும்ப மானம்ங்கிற ஒரு விஷயத்துக்காக எமோஷனலாகி, சொந்தக் குடும்பத்தைப் பத்தியெல்லாம் யோசிக்காம இப்படி கொலைகளைப் பண்ணிடறாங்க. தடயங்களை சுத்தமா அழிச்சுடறதோட சாட்சி சொல்லவும் யாரும் முன்வர்றது இல்லை. அதுவே இது மாதிரியான ஆட்களுக்கு தெம்பு கொடுக்கற மாதிரியாகிடுது.

மக்களோட மனநிலை மாறினாத்தான் இது மாதிரியான கொடுமைகளைத் தடுக்க முடியும். கிராமங்கள்ல பெண் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மூலமா முகாம் போட்டு, அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்றார் அக்கறை கலந்த குரலில்.

மருமகளுக்காக பவுனும், பட்டுச் சேலையும், காராம் பசுவும், கிடாக்கறி சோறும் மொய்யும், விருந்தும் செய்கிற தாய்மாமன்களுக்கு இடையே கொலைவெறி கொண்டோரும் நிற்பது கொடுமையிலும் கொடுமை. இவர்களுக்கு காலத்தே வைத்தியம் நடத்தப்படுமானால், கொலைக்கு தாயம்மாளோடாவது வணக்கம் போடமுடியும்!

1 comment:

Anonymous said...

அப்பு. நாங்கள்ளாம் அப்பிடி தான்ப்பு. காட்டான்ங்கதேன்!