Thursday, August 18, 2005

94. சிறுகதை - தப்புக் கணக்கு

முதலில் சிரித்தான்.. அவள், அவன் மனைவி, சொல்வதை நம்பத் தயாராக இல்லை.. அவன் தங்கையைப் பற்றி நன்றாகத் தெரியும்.. இருபத்து இரண்டு வருடங்களில் பதினெட்டை அவனைச் சார்ந்து தான் வாழ்ந்திருக்கிறாள். உடை வாங்குவதிலிருந்து படிக்க வைத்தது வரை அவனது முடிவு பெரும் பங்காற்றியிருக்கிறது.

அவன் அப்பா தொழில், கட்சி என்று வெளிவேலையிலேயே இருந்துவிட்டார்..சாதிக் கட்சியின் வளர்ச்சியில் இவர் தான் அச்சாணி. அம்மா அவளுக்கு நான்கு வயதிருக்கும் போது போய்ச் சேர்ந்து விட்டாள். சினிமாவில் காட்டும் அண்ணன் தங்கை எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.

சரளாவின் வார்த்தைகள் மனதை என்னமொ செய்தது.. "யாரோ ஒரு பையனோட தி நகரில பாத்தேங்க..யாருடின்னு கேட்டா காதலன்னு சொல்லரா.. பையன் பாத்தாலும் அவ்வளவு வசதியான பையனா தெரியலை"

இவளுக்கு மாப்பிள்ளை தேவை என்றால் பெரிய பெரிய பணக்காரர்கள் தயாராக இருந்தார்கள்.. அப்பா ஒரு அரசியல் தலைவர் மகனை குறிவைத்திருந்தார்.. இவனது அரசியல் வாழ்க்கை வளர அது ஒரு நல்ல அஸ்திவாரமாக இருக்கும் என்பது அவர் கணிப்பு

விஷயம் புரியாத வயசு.. புரிய வைக்கலாம்..

"தங்கச்சி எங்க இருக்கா சரளா.."

"அவ அறைல தாங்க"

கதவைத் தட்டினான்.

"என்ன தேவி.. படிக்கிறியா.. "

என்னை ஒரு சந்தேகத்துடன் பார்த்தாள்.. அவளுக்குத் தெரியாதா நான் எதைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன் என்று..
சிரித்தேன்.. அவளுக்கு உடல் சற்றே நடுங்குவது போலத் தோன்றியது.

"காலேஜ் எல்லாம் எப்படி போகுது கண்ணு.. ஏதும் பிரசினை இருந்தா என் கிட்ட சொல்லு..இன்னிக்கி தி.நகர்ல யாரோ ஒருத்தன் உன் கிட்ட வம்பு பண்ணானாமே.."

(இப்பொவாவது ஆமாம் ஒரு பொறுக்கிப் பையன்.. வம்பு பண்ணான்னு சொல்லி பாலை வாரு கண்ணு)

"இல்லையெ அண்ணா, அவன் என் நண்பன் தான்"

"நண்பன்னா?" இன்னும் முகத்தில் புன்னகை மாறவில்லை..

"நான் அவனை காதலிக்கிறேன்"

"யாரும்மா அவன்?"

"அவன் பேரு சுந்தர். எங்க காலெஜ்ல இறுதியாண்டு படிக்கறான். பல்கலைக்கழகத்தில முதல் மாணவன். ஏற்கனவே நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விட்டது.. படிப்பை முடித்த கையோடு வேலையில் சேர வேண்டியது தான்.. "

"அவங்க அப்பா என்ன பண்றாரு தேவி?"

சொன்னாள்.. அவங்க சாதி வேற சரியில்லை.. புரியும் படி எடுத்துச் சொன்னான்.. மசிவதாகத் தெரியவில்லை.. சாதிகளெல்லாம் சமம் தானாம். புரிந்து கொள்ள மாட்டெனெங்கிறாள். மிரட்டிப் பார்த்தான்.. பலனில்லை.. எரிச்சலின் உச்சத்தில் பளாரென்று ஒரு அறை..

அய்யோ.. இது வரை ஒரு நாள் கூட அவளை குரலெடுத்துத் திட்டியது கூட இல்லை.. ஆனால் விஷயம் தீவிரமானது.. அப்பாவிடம் பேசினால் அவர் வேறு டென்ஷனாகிக் குழப்புவார்.. நாமளே முடித்து விட வேண்டியது தான்.. பிறகு இருவரையும் சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.

தெளிவாகச் சொன்னான்..
"நீ இனிமேல் உன் திருமணம் முடியும் வரை வெளியில் எங்கெயும் போகக்கூடாது.. வீட்டிலேயே இரு.. அந்தப் பையனையும் ஒரு தட்டு தட்டி வைக்கிறேன்.."

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. "என்ன மிரட்டறியா.. உன்னால் முடிந்தால் என்னை நிறுத்திப் பாரு" என்று சவால் விட்டாள்.. அட இந்த காதல பாருங்கப்பா.. என்ன பாடு படுத்துது..

மாரிக்கு ஒரு போன்.. பையன் பேர் காலெஜ் பேர் சொல்லுங்கண்ணெ முடிச்சுடறேன்.... கொடுத்தேன்.. முடித்து விட்டான்.. அடுத்த நாள் போன் வந்தது.

"பையன் முரண்டு பிடிச்சான்.. நான் தேவியைக் காதலிக்கவெல்லாம் இல்லை. அது வேற ஆள் என்றான். ரெண்டு தட்டு தட்டினேன். போய்ட்டான் பாடிய எரிச்சிட்டேன்.. மேட்டர் ஓவர்."

கீழே வந்து தேவியைப் பார்த்தான். தூங்கிக்கொண்டிருந்தாள். சரளாவிடம் முழுக் கதையும் சொன்னான் "மேட்டர் ஓவர்".

திரும்பிப் பார்த்தால் தேவி..சலனமே இல்லாமல் இருந்தாள்.. புயலுக்கு முன்னே அமைதியோ?.

" உன் சாதி வெறி ஜெயிச்சிடிச்சில்ல.. இப்போ என்ன காலேஜ் போக விடு.. நீ மாப்பிள்ளை பாரு .. வருசம் முடிஞ்சதும் கல்யாணம் வைச்சுக்கலாம்.."

அவனால் நம்ப முடியவில்லை.. இருந்தாலும் அவள் நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாகத் தான் இருந்தது. ஒரு வாரம் ஆள் போட்டுக் கண்காணித்தான்.. எதுவும் பிரச்சினை இல்லை..

ஆறு மாதத்தில் தேர்வுகள் முடிந்தது. அடுத்தநாள்
"உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.. தயாராக இரு.. "

"சரிண்ணா.. போய் புதுசா ஒரு சேலை வாங்கிக்கவா?"

மாற்றத்தை நம்பியவனாய்ச் சொன்னான். "சரி .. சீக்கிரம் வந்துடு"

மூன்று மணிக்கு சரளாவிடமிருந்து போன்.

"தேவி இன்னும் திரும்ப வரலைங்க"

மூன்றே காலுக்கு திரும்ப போன்..

"ஒரு கடிதம் வச்சிட்டுப் போயிருக்கங்க.. "

கார் ஓட்டியபடியே செல் தொலைபேசியில் சொன்னான்

"படி"

"அண்ணா, நான் ரவியைத்தான் காதலித்தேன்.. அண்ணி அன்று பார்த்ததும் அவனைத்தான். சுந்தர் என் காதலுக்கு தொந்தரவாக இருந்தான். சரி நீ கோவப்பட்டதும் எதாவது செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் கொன்றுவிடுவாய் என்று எதிர் பார்க்கவில்லை. இப்போதும் என் வக்கீலிடம் என் வாக்கு மூலம் நீ எப்படி எதற்காக சுந்தரைக் கொன்றாய் என்று எழுதி கொடுத்திருக்கிறேன்.. எனக்கு எதாவது என்றால் அது போலீசுக்குப் போகும்..

அதனால் என்னைத் தேட வேண்டாம்..

கடைசியாக..

பொண்ணுன்னு நினைச்சுத்தானெ மிரட்டின.. நானும் புரட்சிப் பெண்.. பாரதி கண்ட புதுமைப் பெண். நினைச்சதை என் கையாலயே நடத்திக்குவேன்.

அன்புடன் (ரவியின்) தேவி

கடிதத்தைக் கேட்டதும் தலை சுற்றியது. என் தங்கைன்னு நிரூபிச்சுட்டான்னு நினைத்துக் கொண்டான்.

3 comments:

துளசி கோபால் said...

அருமை.

துளசி.

குழலி / Kuzhali said...

விச்சு அண்ணாச்சி இந்த முடிவு கூட நன்றாக உள்ளதே, தொடர் பதிவுகள் மாதிரி தொடர்சிறுகதையா? இன்னும் சில மணிநேரங்களில் முகமூடியோ அல்லது சின்னவனோ போட்டு தாக்க போறாங்க.

நன்றி

வீ. எம் said...

கலக்கிட்டீங்க விச்சு,
ரொம்ப நல்லா முடிச்சிருந்தீங்க... !
நான் வேறொரு மாதிரி முடிக்க இருந்தேன்... ஆனா சிறுகதை ஆகையால் ..இப்படி கொஞ்சம் சின்னதா பன்ச் வெச்சி முடித்துக்கொண்டேன்..
தொடர்ச்சியை அடுத்த மாதம் எழுதுகிறேன்..ஆனால் இப்போதே ஒன்று சொல்ல முடியும்...
நான் நினைத்திருந்த தொடர்ச்சி மற்றும் முடிவை விட நீங்கள் எழுதியிருக்கும் முடிவு ரொம்ப ரொம்ப சூப்பர்...!! :)

அப்புறம் என் "இடையை கையில் பிடித்து" படித்தீங்களா?? அதுக்கு ஏதாச்சும் தொடர் இருக்கா??
நாளைக்கு ஒரு கதை போடப்போகிறேன்.. அதுக்கு நிச்சயமா தொடர வாய்ப்பிருக்கும்.. !!

அடுத்த கதை பற்றி ஒரு க்ளு...உங்களுக்கு மட்டும் : எப்படி ஒரு வலைப்பூக்காரர் பெயரை தலைப்பா வெச்சி இந்த கதை எழுதினேனோ..அதே மாதிரித்தான் அடுத்த கதையும்..ஒரு வலைப்பூக்காரர் பெயர் தாண் தலைப்பு !

அன்புடன்
வீ எம்