Thursday, June 30, 2005

எனக்குப் பிடித்த பத்து படங்கள்

* சந்திரலேகா.. இவ்வளவு பெரிய ஒரு படத்தை அன்றைக்கு இருந்த தொழில் நுட்பத்துடன் எடுத்தது ஒரு பெரிய சாதனை.

* காதலிக்க நேரமில்லை.. நகைசுவைக்கு எடுத்துக்காட்டு

* வேதம் புதிது - துணிந்து உண்மையை சொன்ன படம்

* நாயகன் - ஒரு உலக தரமான படம்

* அழியாத கோலங்கள் - நெஞ்சில் இட்ட கோலம்.. அழிவதில்லை (ஷோபாவும் தான்)

* மூன்றாம் பிறை - sriதேவி கமல் போட்டி போட்டு நடித்த படம்.

* பாட்ஷா - தலைவர் தலைவர் ஆன படம்

* உலகம் சுற்றும் வாலிபன் - முழு பொழுதுபொக்கு படம்.

* தண்ணீர் தண்ணீர் - ஒரு பிரசினையைத் தத்ரூபமாகக் காட்டிய படம்

* மகாநதி - மனதை உலுக்கிய படம் (உன்னொரு முறை பார்க்க மாட்டேன்)

* வீர பாண்டிய கட்டபொம்மன் - ஏதும் சொல்ல வேண்டுமா என்ன.

* பாரதி

* காமராஜ்

பிற மொழிகள்
1. காந்தி எல்ல தேசிய தினஙளிலும் காட்டப் பட்டாலும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படம்

2. ஈடி இது ஒரு வகை சந்தோஷம். ஸ்பீல்பெர்க் படஙள் எல்லமே வரும் இந்த வரிசையில் கலர் பர்பிள் (color Purple) உட்பட

3 DDLJ - என் காதல் கதை

4. மா பூமி - இன்னும் இந்த நிலையில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று உணர வைத்த படம். ஏதாவது மாறியதா என்றால் இல்லை

5. சிதம்பரம். சித்திரை மாதம் திருவாதிரை நாள். மனதில் நின்ற படம்

6. சங்கராபரணம் - எஸ் பி பி ஸோமயாஜுலு விஷ்வநாத் மஞ்ஜு பார்கவி கலக்கல்

7. மரோ சரித்ரா - கும்பகோணத்திலேயெ ஒருவருடம் ஓடிய படம் (இதனால் எக் துஜெ கெலியெ இல்லை)

8. லகான் - ஒரு வித்தியாசமான படம்

9. சுவாதி முத்யம் - மனதைத் தொட்ட உன்னொரு விஷ்வநாத் படம்

10. புஷ்பக். இது என்ன மொழிப்படம்?

எத்தனையொ படஙள் இடப்படவில்லை.. பத்து என்ற எண் (11 ஆனது மேலே) பெரிய கட்டுப்பாடு..

அன்புடன் விச்சு

பாவம் பெண்கள்

காஞ்சி பிலிம்ஸ் போலச் செய்ய வேண்டும் என்று ஆசை தான்.. இது விடுதலை நாளிதழில் படித்தது.

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு.

இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...’ என்று கூறுவேன்.உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது °மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.ஆக...

மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது.

அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.அதாவது...

``°ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’

பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.

`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’

அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது.

33 சதவீத ஒதுக்கீடு என்ன ஆச்சு..

பொறியியல், முதுகலை போன்ற கல்வி கற்ற பின்னரும் பொரியல் மட்டும் செய்யும் பெண்கள் இருக்கிறார்கள். வேலைக்குப் போனாலும் திரும்பி வந்து சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என்று எல்ல வேலைகளயும் அவர்களே செய்யவேண்டிய நிலைதான். இன்றைக்கும் பலருக்கும் இதே நிலை தான் ஒரு சில பெண்கள் தவிர..

"அவர்கள்" சாத்திரம் என்று சொல்லிக்கொண்டு செய்கிறார்கள் மற்றவர்கள் "அவர்களை" திட்டிக்கொண்டு செய்கிறார்கள்.. அது தான் வித்தியாசம்..

இன்று செய்திதாள்களில் ஒரு பெண் விருப்பமின்றி திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்திருக்கிறது.

"கனாக் கண்டேன் " படம் போல எத்தனை பேரால் தப்பிக்க முடிகிறது.

அன்புடன் விச்சு

குறிப்பு

முதலில் இட்டிருந்த பதிப்பு காணாமல் போன காரணத்தால் அதே பதிப்பை மீண்டும் இட்டிருக்கிறேன்

நேர்காணல் - என் கேள்விக்கென்ன பதில்

அருண், ரங்கா, முகமூடி, டோண்டு மாமா, குழலி, பாஸ்டன் பாலா, மாயவரத்தான் உட்பட யார் வேண்டுமானாலும் பதில் தரலாம். உங்கள் பதில்கள் நல்ல சில கருத்துக்களை தமிழ் மணத்தில் பரப்ப வெண்டும் என்பதே நோக்கம்..,

உங்கள் வலைப்பதிவில் பதில் தந்தால் இந்த பதிவில் தயவு செய்து குறிப்பிடுங்கள்

ஷ்ரெயாவின் கேள்விகள், துளசி அக்கா சார்பில் என் பதில்கள்.

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?அப்புறம் என்ன பயன். யாராவது கூட இருந்தாதானே மகிழ்ச்சியே. எல்லார் கண்ணிலும் தெரிவது எப்படின்னு கண்டு பிடிப்பேன்.

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?அக்ஷய பாத்திரமாக இருக்கும்.. பசி தான் பெரிய கொடுமை.. அது இல்லமல் இருந்தால் பாதி பிரச்சினை இருக்காது.

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?என் முதல் ஞாபகம் என் தங்கையுடன் விளையாடியது. இப்போது ஞாபகம் மட்டுமே மிச்சம்.

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
அப்படி எந்த காலத்திலும் பாலும் தேனும் ஓடியதாகத் தெரியவில்லை. பணக்காரர்களின் கதை மட்டுமே வரலாறாகிறது. ஏழைகளின் வாழ்க்கை இன்று இருப்பது போலவே தான் இருந்திருக்கும். இன்றைய தினமே மகிழ்ச்சியான நாள். இதைத்தான் கொண்டாடுகிறேன். கொண்டாடுவேன்.

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?மருந்து அடித்து கொல்கிறேன் என்றால் குழந்தை இருக்கு ஆஸ்ப்ரின் போட்டுத் துரத்தலாம் (எதோ ஒரு மகளிர் பத்திரிகையில் வந்த குறிப்பு) என்று மனைவி கூறுகிறார். திருமணம் ஆன பின் மனைவி கருத்தே என் கருத்து (குறைந்த பட்சம் வீட்டு விவகாரங்களில்)

நான் கேள்வி கேட்டால் இப்படித்தான் இருக்கும்.

1. நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?

2. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்

3. ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்? (வேண்டாமென்றால் அமெரிக்காவின் அதிபராக என்று வைத்துக்கொள்ளுங்கள்)

4. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?

5. உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.

அருண், ரங்கா, முகமூடி, டோண்டு மாமா, குழலி, பாஸ்டன் பாலா, மாயவரத்தான் உட்பட யாருக்கெல்லம் பதில் தர வேண்டுமொ தாருங்கள்.., உங்கள் வலைப்பதிவில் பதில் தந்தால் இந்த பதிவில் தயவு செய்து குறிப்பிடுங்கள்

அன்புடன்

விச்சு

சங்கராச்சாரியாரும் குற்றவியல் சட்ட மாற்றமும்

காவல்துறையினரிடம் கிரிமினல் சட்டம் 161-இன்கீழ் ஒருவர் வாக்குமூலம் கொடுத்தால் அது நீதிமன்றத்தில் ஏற்கப்படவேண்டும் என்று புது திருத்தம் கூறுகிறது. காவல் துறையினர் மிரட்டி வாக்குமூலம் வாங்கினர் என்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள் இனி சொல்ல முடியாது என்பதுதான் புதிய திருத்தத்தின் நிலைப்பாடாகும்.

சங்கரராமன் வழக்கில் சாட்சிகள் முதலில் ஒன்று சொல்லி பின் போலிஸ் மிரட்டினார்கள் என்று சொன்னர்களே அது போல இனி முடியாது. (இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால்)

குற்றவியல் சட்டம் என்றால் மத்திய நீதிதுறை தானே மாற்றம் செய்யும்? மாநில அரசு ஏதும் சிபாரிசு செய்ததா..

ஆனால் இது சரியான சட்டமாகத் தென் பட வில்லை. அடித்து உதைத்து வாக்கு மூலம் வாங்கும் உலகத்தில் நீதி காணாமல் போய் விடும். அறிவிருக்கிறதா என்று நீதிபதிகள் அனைவரயும் கேட்க நேரிடும்.

அன்புடன் விச்சு

Wednesday, June 29, 2005

மதக்கலவரங்களும் போபாலும்

http://etamil.blogspot.com/2005/06/blog-post_111999293248001172.html
http://mayavarathaan.blogspot.com/2005/06/blog-post_29.html

இன்று இரண்டு பதிவுகளைப் படித்ததும் எனக்கு என் போபால் அனுபவங்களை எழுத வேண்டும் என்று தோன்றியது.

போபாலா.. இது ஒரு பெரிய கிராமம். நான் போபாலின் தென் பகுதியில் 2 வருடங்கள் இருந்திருக்கிறேன்..

பாகிஸ்தான் கொடி ஏற்றுவது, பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெடிப்பது போன்றவை அங்கே சாதாரணம். பச்சை (அம்மாவுக்கு பிடித்த பாகிஸ்தான் கொடி கலர்தான்) நிறத்தில் வீட்டுக்கு வர்ணம் பூசும் அளவு தீவிரமான முஸ்லிம்கள் நிறைந்த ஊர்.

பாபர் மசூதியை உடைத்த போது நான் அங்கே இருந்திருக்கிறேன். ராத்திரி முழுக்க மொட்டை மாடியில் வீட்டில் இருக்கும் தோசை கரண்டி உட்பட இரும்பு ஆயுதங்களுடன் காவல் இருந்திருக்கிறேன். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிருக்கு திரும்பி வந்தபின் இந்தியா அங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரவு 2 மணிவரை மொட்டை மாடியில் டி வி வைத்து ஆட்டம் பார்ப்பதில் நேரம் போகும்.

பகலில் திடீரென்று ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வரும். (பிறகு தெரிந்தது, அவர்கள் பயத்தின் காரணமாக முஸ்லிம்களை மசூதியில் வந்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று) தூரம் அதிகமாக இருப்பதால் என்ன தகவல் என்று புரியாது. ஒரு நாள் பரக்கத்துல்லா பல்கலைகழக மாணவர்கள் சைக்கிளில் வந்து இன்று இரவு முஸ்லிம்கள் தாக்க திட்டமிட்டிருக்கிரார்கள் என்று கத்திக்கொண்டே சென்றார்கள். இப்படி தான் செய்திகள் பரவின..

பழைய போபாலில் ஒரு முஸ்லிம் தன் பெட்ரோல் பங்கை இந்துக்களை எரிப்பதற்காக திறந்து விட்டுவிட்டார், ஒரு இந்துப் பெண்ணை அவள் முஸ்லிம் தோழி காப்பாற்றுவதாக தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் சகோதரர்களை விட்டு கற்பழித்து கொல்லவைத்தாள், ஒரு பெரிய கோவிலின் விக்ரகங்களை எடுத்து சாக்கடையில் எறிந்து விட்டார்கள், ராணுவம் முஸ்லிம் பகுதிகளில் நுழையவே முடியவில்லை என்றெல்லாம் வதந்திகள்.

மொட்டை மாடியில் நின்று பார்த்தால் நிறைய கரும்புகை தெரியும். பர்கெடாவில் கடையை எரிய விடுகிறார்கள். அங்கே எரிகிறது இங்கே எரிகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ரேடியோவில் தொடர்ந்து அமைதிகாக்கச் சொல்லி செய்திகள் வரும்.

நான் இருந்த இடம், ஓய்வு பெற்ற BHEL தொழிலாளர்கள் நிறைந்த இடமாதலால், அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.

தொலைபேசி வேலை செய்ய வில்லை. ராணுவத்தின் பொறுப்பில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாலை சாயும் நேரம். திடீரென்று எங்கள் அடுத்த வீட்டில் இருந்தவர் என் வீட்டு சொந்தக்காரரை அழைத்து நம் பகுதியில் எதோ கலவரமாம். வாருங்கள் போய் தடுக்கலாம் என்று அழைத்தார்.

நாங்கள் இருந்த இடம் இந்துக்கள் நிறைந்த இடம். என் வீட்டுக்காரர் உடனே கான்(khan) சாப் (saab) எங்கே என்று கேட்டார். மூன்றாவது வீட்டில் இருந்த கான் மட்டும் தான் எங்கள் தெருவில் இருந்த ஒரே முஸ்லிம். நாங்கள் மூவருமாக அவர் வீட்டுக்குப் போய் அவரை அழைத்தோம். அவர் வெளியே வந்ததும் "உங்கள் மனைவி குழந்தைகளுடன் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் " என்று எங்கள் வீட்டுகாரர் கூறினார். கான் அதற்கு, "அல்லா கிருபையால் ஒரு கஷ்டமும் வராது, கவலைப்படாதீர்கள்" என்று பதில் சொன்னார்.
என் வீட்டு சொந்தக்காரார் உடனே அவர் வீட்டுக்குள் சென்று "சகோதரி வெளியெ வா, குழந்தைகளை அழைத்துக்கொள், கான் சாபுக்கும் புரியவை.. ஆபத்து வரும் போல இருக்கிறது. அல்லாவும் கணேசும் உங்களை நன்றாகவே வைத்திருப்பார்கள் ஆனால் சில சமயங்களில் நம் அறிவை பயன் படுத்த வேண்டும்" என்று சத்தமாக கத்தி சொன்னார். அந்த அம்மா என்ன நினைத்தார்களோ தெரியாது, "சகோதரர் சொல்வது சரியாக படுகிறது வாருங்கள்" என்று கூறி எங்கள் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார்கள். உடனே கானும் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

அடுத்த ஒரு மணியில் ஒரு 50 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி பெட்ரோல் சகிதமாகஎங்கள் பகுதியில் ஒரு வீட்டுக்கு நெருப்பு வைத்திருப்பதாக அறிந்து ஓடினோம். எங்களுக்கு முகமூடி அணிந்திருந்த அவர்களில் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கடும் வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருந்தன.. அவர்கள் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு ஓடும் படி கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நிறைய பேர் அவர்களை (கலவரக்காரர்களை) இங்கே எதுவும் செய்யக்கூடாது. இவர்கள் (முஸ்லிம்கள்) எங்களுடன் இவ்வளவு வருடமாக இருகிறார்கள் எங்கள் நண்பர்கள் என்றெல்லாம் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். பழைய போபாலில் நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு பழி வாங்கியே தீருவோம் என்று பதில் வாதமும் வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் ஒரு பகுதி இதெல்லாம் (வாதிடுவது) காரியத்திற்காகாது என்று கூறிக்கொண்டு அடுத்த தெருவில் புகுந்து ஓடியது. நாங்களும் துரத்திக்கொண்டு ஓடினோம். ஒரு வீட்டின் மேல் மாடியில் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தது. வீட்டின் சொந்தக்காரர் கீழே நின்று பிரிந்து போன கும்பலைத் திரும்பிப்போகச்சொல்லி திட்டிக்கொண்டிருந்தார். முடிந்தால் அவரை (house owner) முதலில் வெட்டிவிட்டு குடித்தனக்காரர்களை எதுவும் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவருமாக அவர்களை அங்கிருந்து துரத்தினோம். எங்கள் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேரும்வரை அவர்களுடனேயெ சென்றோம். பலத்த வாக்குவாதங்கள் தொடர்ந்தன. எவ்வளவு நாள் காப்பாற்றுவீர்கள் என்று கேட்டுக்கொண்டே போய்விட்டனர். ஒரு குழு அங்கேயே நின்று கண்காணித்துக் கொண்டிருத்தது.

ஒரு குழு மற்ற முஸ்லிம்களை இந்துக்கள் வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தது. அதுவரை முஸ்லிம்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள மாடியில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அன்று முஸ்லிம்களை காக்க காவல் இருந்தோம்.

இப்படி கலவரத்தின் போது எங்களால் முடிந்த முஸ்லிம் குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறோம். இந்த "எங்களால் முடிந்த" எதற்காக என்றால் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் கணவர் பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்றிருந்தார். பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த அவரது மச்சான் வீட்டில் இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களிடம் சென்று வேறு யார் வீட்டிற்காவது சென்று விடும்படி சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவ்ர் (மச்சான்) என்னிடம் துப்பாக்கி இருக்கிறது, யாரும் எங்களை ஏதும் செய்ய முடியாது என்று கூறிருக்கிரார். அவர்கள் வீடு ஊருக்கு வெளியில் கடைசி வீடு.

இரவில் ஒரு பனிரெண்டு மணி இருக்கும். இரண்டு பேர் ஓடிவந்து ஒரு முஸ்லிம் வீட்டில் 5 பேரைக் கொளுத்தி விட்டார்கள் என்று கூறினார்கள்.
உடனே மாடியில் இருந்த எல்லாரும் ஓடினோம். அருகில் செல்லும் போதே சதை எரியும் நாற்றம். ஐந்து உடல்களும் தெருவில் கிடந்தன. எல்லா வீட்டிலும் கதவு ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. யாரும் தொடக்கூடாது.. போலிஸ் வரும். இறந்து விட்டார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. மனம் மிக பாரமாக இருந்தது. காலை 5.30 க்கு போலிஸ் வந்த தாக பின்னர் தெரிந்தது.

27 நாட்களுக்கு ப் பிறகு ஊரடங்கு உத்தரவு 6 மணி நேரம் தளர்த்தப்பட்டது. 2 மாதம் கழித்து 56 சாவுகளுக்குப் பிறகு இதெல்லாம் முடிவுக்கு வந்தது. மனதில் காயங்கள் ஆழமாக பதிந்து விட்டது. அவர்களின் பயமும் வெறுப்பும் அது போன்ற ஒரு இடத்தில் இருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் HEY RAMல் வருமே அது போல ஒரு நிகழ்ச்சிகள் எல்ல குடும்பத்திலும் நடந்திருக்கிறது.. 50 60 வருடமாக கனன்று வரும் நெருப்பு.. குஜராத்திலும் அது தான் நடந்தது.. என் டி டி வி யில் பெண்களும் பக்கத்து வீட்டின் மேல் கல்லெடுத்து எறிவதெல்லாம் பார்த்தேன். போலிஸ் எதுவுமே செய்யமுடியாத நிலை. சுட்டால் கலவரம் அதிகமாகும்.

முஸ்லிம்கள் என்றாலே ஒரு வெறுப்பு. யாராவது இந்த நிலையை மாற்ற முயற்சி செய்தார்களா என்றால் இல்லை. இரண்டு கட்சிகளாக அரசியல் லாபத்துக்காக ஊதி தூபம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது என்றைக்காவது மாறுமா.. எனக்கு நம்பிக்கை இல்லை.

அமெரிக்காவிலும் இதே போல நிலையைத்தான் பார்க்கிறேன். என்றைக்கு எந்தப் போராளி தாக்குவானோ என்று ஒரு பயம். போராளியும் சாதாரண முஸ்லிமும் எல்லாம் ஒன்றுதான் அடையாளம் தெரியும் வரை..
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

பின் குறிப்பு: அந்த ஐந்து பேரும் இறக்க வில்லை. தப்பித்துவிட்டார்கள். குணமாகி வந்ததும் வீட்டை பழைய போபாலுக்கு மாற்றிச் சென்று விட்டார்கள். நிறைய பேர் பழைய போபாலில் இருந்த இந்துக்களுடன் வீடுகளை மாற்றிக்கொண்டு விட்டார்கள். Khan இன்னும் இங்கே தான் இருக்கிறார்..அடுத்த ஜுனில் நானும் டெல்லிக்குச் சென்று விட்டேன். இப்போதும் போபால் என்றால் இந்த நினைவுகள் வருகிறது.

Friday, June 24, 2005

ஜெயகாந்தனும் பாரதியும்

"கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குகூறத்
தகாதவன் கூறினன் கண்டீர்!"

"வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது. பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேச வேண்டும் என்கின்ற தமிழறிஞர்கள், தம்மைத்தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப் பட்டிருந்தால், ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது" என்று அண்மையில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னை சமஸ்கிருத சேவாசமிதி நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் பேசியதாகச் செய்தி.

ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் அவருக்கு அடுத்த வாரம் நடத்திய பாராட்டு விழாவில் அவர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். தன்னை அறியாமலேயே பிறரைப் புண்படுத்தி விட்டோமோ என்று வருத்தம் தெரிவித்து, விலங்கு உயிர்கள் எல்லாம் தம்மை மட்டும் நேசிப்பவை, மனிதன் மட்டுமே தன்னையும் தாண்டிப் பிற உயிர்கள் மீதும் கருணை காட்டுபவன், என்ற பொருளிலேதான் "தம்மைத்தாமே நக்கும் நாய்" என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். "நாய்க்குப் பதில் சிங்கம் என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்களேன்!" என்றார் நகைப்புக்கிடையே. இதே தொனியில் "கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்யும் முயற்சியைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது; சமஸ்கிருதத்தில் கலைச்சொற்கள் படைத்திருந்தால் தமிழில் ஆங்கிலக் கலப்பு குறைந்திருக்கும்" என்று பொன் நாவரசு நினைவுச் சொற்பொழிவில் தொடர்ந்திருக்கிறார். *ஞானபீட விருது சாதாரணமான விருதல்ல. பொதுவாக அது விருது பெறும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர் எழுதும் மொழிக்கும் பெருமை சேர்க்கும். ஞானபீட விருது பெற்றவர்களின் பேச்சுக்களை அவர் மொழியினர் மட்டுமல்லாமல், எல்லா இந்திய மொழியினரும் கவனிப்பார்கள். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கொண்டாடினானே பாரதி அவனுக்கு மட்டும் இலக்கிய நோபல் பரிசு கிடைத்திருந்தால்! அம்ம, நினைக்கவே இனிக்கிறதல்லவா! அந்நியனுக்கு அடிமைப்பட்டு வாடிய காலத்திலும் தன் பாடல்களின் ஒவ்வொரு சொல்லிலும் தன் நாட்டையும், மொழியையும் வானளாவ உயர்த்திப் பிடித்து, தன் காலத்தவர் மட்டுமல்ல, இனி வரும் ஒவ்வொரு தலைமுறையையும் நம் மரபைக் கொண்டாட வைக்கிறானே, அவனுக்கு மட்டும் விருது கிடைத்திருந்தால்!

எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆள்பவன். சொல்ல வந்த கருத்தை அவனால் நளினமாகவும் சொல்ல முடியும்; நாற்றமடிக்கவும் செய்ய முடியும். இந்தியா என்ற கதம்பத்திலே ஒவ்வொரு பூவையும் நுகர்வதன் தேவையைப் பற்றி 1995 இல் ஞானபீட விருது பெற்றுப் பேசிய கன்னட எழுத்தாளர் யு. ஆர். ஆனந்தமூர்த்தி நளினமாகச் சொன்னார்.*கலைச்சொற்களைத் தமிழுக்குப் பதில் சமஸ்கிருதத்தில் படைத்திருந்தால் ஆங்கிலத்தின் ஊடுருவல் தணிந்திருக்குமா? சமஸ்கிருதச்சொற்களை இயல்பாகவே ஏற்றுக் கொள்ளக்கூடிய வடமொழிகளைப் பார்ப்போமே. நடந்திருக்கிறதா? வாழும் மொழியின் சொற்களை இரவல் வாங்குவதை விட்டுப் பண்டைய மொழியில் சொற்கள் படைப்பதும் புதிதல்ல. ஆங்கிலம் தன்னம்பிக்கையுடன் தலையெடுக்கும் முன்னர், அதன் சொல்வளம் பெருகுவதற்கு முன், அதன் மருத்துவ, அறிவியற் கலைச்சொற்கள் தங்கள் மொழிக்குடும்பத்துடன் தொடர்புள்ள ஐரோப்பிய மொழிகளிலிருந்து இரவலாகவும், செம்மொழிகளான கிரேக்கம், லத்தீனம் ஆகியவற்றின் வேர்களில் இருந்தும் படைக்கப் பட்டன.

ஆனால், அண்மையில் தோன்றிய கணினித் துறையில் கலைச்சொற்கள் தற்கால ஆங்கிலச் சொற்களின் அடிப்படையிலேயே உருவாகின. புதிய கருத்துகளை பல்லாயிரக்கணக்கானோர் வெகு விரைவில் உருவாக்கி எல்லோரிடமும் கருத்துப் பரிமாற்றம் கொள்ள முடிவது கணினித் துறையில் மட்டும்தான். இதில்தான் பத்து வயதுச் சிறுவர் பலரும் நிபுணராக முடிகிறது. கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதன் அடிப்படையே அதுதான். தாய்மொழியில் இருக்கும் சொற்களை நிபுணர்கள் துணையில்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். ஆனால் தாய்மொழியிலும் வேர்ச்சொற்களை அறிவதற்காகவாவது பயிற்சி தேவை.

தமிழ்நாட்டின் சிக்கல் அளவுக்கு மீறிய தமிழ்ப் பற்றால் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பட்டம் பெற முடியும், வேலை பார்க்க முடியும். தமிழக ஊடகங்களின் தமிழில் அளவுக்குமீறிய பிறமொழிக் கலப்பு. தமிழ் மட்டும் தெரிந்த ஒரு நாட்டுப்புறத்தார் வழக்கு மன்றம் ஏறினார் என்றால், அவரைப் பற்றிய வழக்கு அவருக்குத் தெரியாத மொழியிலே நடக்கும். இது சரியில்லை என்று யாருக்கும் தோன்றுவதில்லை. ஏனென்றால், படித்த, பட்டம் பெற்ற, ஆங்கிலம் தெரிந்த நடுத்தட்டு மக்களுக்கு இது ஒரு சிக்கலே இல்லை. அவர்கள் தீர்வு எல்லோரும் ஆங்கிலம் படிக்கட்டுமே என்பதுதான். நமது முன்னோர்கள் சிலரும் இது போல, அப்போது ஆட்சி மொழி எதுவோ அதில் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்ததால்தான், அந்த மொழிகளின் ஆட்சி வீழ்ந்த பின்னர் தொடர்ச்சியில்லாமல் தடுமாறுகிறோம்.

தமிழில் கலைச்சொற்கள் பல பிறமொழிச் சொற்கள்தாம். இவற்றில் பெரும்பாலானவை அந்நிய மொழி பேசுவோரின் ஆட்சிக்குக் கீழ்ப்பணிய நேர்ந்த போது உருவானவை. கலைச்சொற்கள் பிறமொழிச் சொற்களாக இருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. புதிய கருத்துகளைக் குறிக்கப் புதுச் சொற்களைப் படைப்பதற்கு வேர்ச்சொற்கள் இல்லாமல் போய்விடுகிறது. பிறமொழியில் படித்து, பிறமொழியில் சிந்தித்து, பிறமொழியில் வேலை செய்யும்போது இயல்பாகவே பிறமொழிக்காரர்களின் சிக்கல்களைத் தீர்க்கத்தான் தோன்றும். அதனால்தான் உலகிலேயே மிக அதிகமான கணினி நிபுணர்களைக் கொண்டிருந்தாலும், இந்தியர்கள் இன்னும் தம் மக்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணாமல் பிறநாட்டவர்களுக்குக் குற்றேவல் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் கலைச்சொற்களை உருவாக்க முனைபவர்கள் கண்மூடித்தனமானவர்கள் அல்லர். அவர்கள் ஆழமான சிந்தனைகளை பேரா. ராதா செல்லப்பன் ("அறிவியல் தமிழ், இன்றைய நிலை"), முனைவர் மறைமலை ("சொல்லாக்கம்"), பேரா. வி. சி. குழந்தைசாமி போன்றோர் நூல்களிலிருந்து அறியலாம். கலைச்சொல்லாக்கம், ஆங்கிலத்தின் தாக்கம் பற்றி மேலோட்டமாகப் பேசி விட முடியாது. "ஞானபீடம்" என்ற மலைப்பான விருதுகளைப் பெற்றவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது பயனுள்ள சொற்களைத்தான். "ஆறாது நாவினாற் சுட்ட வடு."*பாரதியார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. தமிழ்த்தாய் தன் மக்களிடம் புலம்புவது போல் அந்தப் பாடல் அமையும்.

"கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குகூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!"

அப்படி என்ன சொன்னான் அந்தப் படுபாவி?

"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே - அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை"

உண்மைதான். அதனால் என்ன, கொண்டு வருவோம் தாயே!

"சொல்லவும் கூடுவதில்லை - அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை!"

அப்படியா சொன்னான்? பேதை! தமிழைப் பற்றி அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

அடப்பாவி! அப்படியா சொன்னான்? தாயே உன் காதிலா இந்த வசை விழுந்தது?

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"

அப்படியே செய்கிறோம் தாயே! யார் வசை பாடினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை!

அமெரிக்காவில் வெளி வரும் தென்றல் பத்திரிகையில் மணி மு. மணிவண்ணன் எழுதியது.
http://archives.aaraamthinai.com/thendral/puzhakadai.asp

அப்படி பொடு அருவாள - வள்ளுவர் சொன்ன வர்ணாச்ரமம்

தனது 82வது பிறந்தநாள் விழாவில் கருணாநிதி "திருக்குறளில் எந்தவொரு இடத்திலும் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றி கூறப்படவில்லை. ஜாதி பாகுபாட்டிற்கு வள்ளுவர் கருத்தில் இடமில்லை. கடவுளின் தலையில் பிறந்தவன், இடையில், தொடையில், காலில் பிறந்தவன் என்ற வேற்றுமையில்லை. எங்கு பிறந்தாலும் அவன் மனிதனே! எல்லாரும் ஓர் குலம் என்ற கொள்கை உடையவர்' என்றெல்லாம் பேசியுள்ளார்.

ஆனால், திருக்குறளில் 972வது பாடலில், வர்ணாசிரம தர்மத்தைப் பற்றி, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

முற்காலத்தில் உள்ள வர்ண பேதங்கள் இன்றளவும் மறையவில்லை என்பது தான் உண்மை.

வள்ளுவர் மேற்படி குறளில் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்... பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் ஒன்றேயானாலும், அவரவர் செய்கிற தொழிலைப் பொறுத்து, ஆண்டான், அடிமை என்ற வேறுபாடு இருக்கத் தான் செய்யும். அவர்கள் ஒரே சிறப்புடையவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்பதை கூறியுள்ளார்.

"இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று அவ்வை மூதாட்டி கூறியுள்ள விதமாகவா நாட்டின்
இன்றைய நிலை உள்ளது?

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற எந்தவொரு அரசியல் கட்சியாவது ஜாதியை முற்றிலும் ஒழிக்க முன் வந்ததா? இல்லையே! மாறாக பிராமணர், வெள்ளாளர், கவுண்டர், மறவர், நாடார், பறையர் என்று ஒவ்வொரு குடிமகனின் முதுகிலும் அரசாங்க முத்திரை குத்தி, சான்றிதழும் வழங்கி, அதிலும் சில சிறுபான்மை சமூகத்தினரை முற்படுத்தப்பட்டோர் என்று அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும், சலுகைகளும் அளிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏனையோரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் இனம் பிரித்து சலுகைகளை வாரி வழங்கி வருவது ஏன்?

இவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தாலா என்றால் நிச்சயமாக இல்லை... தேர்தல் கால ஓட்டு வேட்டைக்குத் தான்.

வள்ளுவருக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதியின் குடும்பம், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்று என்ற உயர் இடத்தை அடைந்த பின்பும், தான் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்று மார் தட்டி கூறுவதேன்?

இன்னும் எத்தனை நுõற்றாண்டுகள் ஆனாலும், நம் நாட்டிலிருந்து ஜாதி, மத பேதங்களை ஒழிக்கவும் முடியாது, ஒழிக்க விடவும் மாட்டார்கள் ஆளும் வர்க்கத்தினர் என்பது தான் உண்மை.

இதை சொன்னது எஸ்.கண்ணுபிள்ளை, திருப்பதிசாரம், குமரி மாவட்டத்திலிருந்து. தினமலரில் இப்படி எழுதுகிறார்:

Thursday, June 23, 2005

அப்படி பொடு அருவாள - கோள்களுக்கு தமிழ் மாணவிகள் பெயர்.

கோவையைச் சேர்ந்த சரண்யா, செந்தளிர் என்ற இரண்டு மாணவிகள், 2003ம் ஆண்டு, இன்டெல் நிறுவனம் நடத்திய சர்வ தேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பங்கேற்று வேப்பெண்ணையை உபயோகித்து இயூகலிப்டஸ் மரங்களின் பக்கவாட்டு வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வறிக்கையை வழங்கினர். இதற்கு நான்காவது பரிசும் கிடைத்தது.

இப்போது எம் ஐ டி லிங்கன் ஆய்வகம் கண்டு பிடித்துள்ள இரண்டு சிறிய கோள்களுக்கு இந்த இரண்டு மாணவிகளின் பெயரை சூட்டியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

19091 என்று அறியப்படும் கோளுக்கு செந்தளிர் என்றும் 19092 என்ற கோளுக்கு சரண்யா என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் கோவை அவிலா பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சரண்யா CஈT யிலும், செந்தளிர் குமரகுரு பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள்.

இதற்கு முன் கோள்களுக்கு ஐன்ச்டின், மெக்கார்டினி, வான் கோ போன்றோர் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

நம் தமிழ் பெண்கள் பெயர் வைக்கப்பட்டிருப்பது நமக்கும் பெருமை.

http://www.asiantribune.com/show_news.php?id=14672

Wednesday, June 22, 2005

ரஜினிகாந்தை திட்டிய ஆச்சி

1996இல் கலைஞரை ஆதரித்து ரஜினி "அந்த ஆண்டவனே வந்தாலும் " டயலாக் விட்டப்போ, ஆச்சி தான் அம்மாவுக்கு ஆதரவா ரஜினிய எதிர்த்து அறிக்கை விட்டாங்க

ஏன் என்ற கேள்வி எல்லார் மனதிலும் வந்தது..

அந்த பாழாப் போன ஜோசியக்காரன் எவனோ தெரியலை. அவனும் ஒரு ஆம்பளைதானே, அப்பிடித்தான் சொல்லுவான்! அவன் முகம்கூட எனக்குத் தெரியாது. ஆனா, அவன் வார்த்தை என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருச்சுங்கிறது அவனுக்குத் தெரியுமானு தெரியலை.

அய்யா, தர்மதொரைங்களே... ஆண்களே! உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டு இந்த ஆச்சி கேட்டுக்கறேன்... பொம்பளையாப் பொறந்தவ சமைக்க, துணி துவைக்க, பிள்ளைகளைப் பெத்துத் தர்ற மெஷின் மட்டும் இல்லய்யா. அவளும் உங்களை மாதிரி ஒரு மனுஷிதான்!

அவளை மதிக்கக் கத்துக்கங்கய்யா! அய்யா நீங்க, உங்க வீடு, குடும்பம் எல்லாம் நல்லா இருக்கட்டும்னு நான் எல்லா சாமியையும் கும்பிட்டுக்கிறேன்யா!


இப்பொ தான் புரியுது.. ரஜினி காந்தை திட்டி மனோரமா ஏன் பேசினாங்கன்னு.. ஒரு பெண்ணுக்காக ஒரு ஆணை திட்டி பேசி இருக்காங்க..

பாவம் ஆச்சி..

அன்புடன் விச்சு

அப்படி போடு அருவாள - கற்பழிப்பும் பாரதப் பண்பாடும்.

அப்படி போடு அருவாள - கற்பழிப்பும் பாரதப் பண்பாடும்.

"அவன் ரேப் பண்ணியதற்குக் காரணம் அந்தப் பெண்தான். பசித்தவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுவதுதானே பாரதப் பண்பாடு.அவனுக்கு வேற பசி; சாப்பாடு போடச் சொல்லி அவளிடம் கேட்டுள்ளான். அவள் போடாததால், அவனே எடுத்துக் கொண்டான். அதனால் அந்தப் பெண்தான் குற்றவாளி "

தமிழை மட்டும் தான் காப்பாத்துவீங்களா.. தமிழ் பண்பாட்டையும் காப்பாத்துவீங்களா? இப்படி ஒரு கருத்தை பரப்பிய தமிழ் தொலைக்காட்சி வாழ்க.


கல்லூரி விடுமுறை என்பதால் என் இரு மகன்களுடன் அமர்ந்து, கடந்த 8_ம் தேதி டி.வி.யில் ‘‘சொர்க்கம்’’ தொடர் பார்த்துக்கொண்டு இருந்தேன். அதில் வந்த ஒரு காட்சி, என்னை அதிர வைத்தது

அசிஸ்டெண்ட் கமிஷனர் மரியா ஜோன்ஸிடம் தன் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க ஒரு பெண் வருவாள். பத்திரிகையைப் படித்துப் பார்த்த மரியா, ‘‘ஏம்மா உனக்கு வேற நல்ல பையனே கிடைக்கலையா? ஒரு கைதியைப் போய் கல்யாணம் பண்ணிக்கிறே? அவன் ஒரு பெண்ணை ரேப் பண்ணியுள்ளான்’’ என்று கூறுவார்.

அதற்கு அந்தப் பெண் அலட்சியமாக, ‘‘அவன் ஆயுள் தண்டனைக் கைதிதானே? தூக்குத் தண்டனை கைதி இல்லையே! அவனை சுலபமாக என்னால் வெளியில் கொண்டுவர முடியும். அவன் ரேப் பண்ணியதற்குக் காரணம் அந்தப் பெண்தான். பசித்தவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுவதுதானே பாரதப் பண்பாடு. அவனுக்கு வேற பசி; சாப்பாடு போடச் சொல்லி அவளிடம் கேட்டுள்ளான். அவள் போடாததால், அவனே எடுத்துக் கொண்டான். அதனால் அந்தப் பெண்தான் குற்றவாளி!’’ என அகம்பாவத்துடன் கூறுவாள்.

கல்லூரி செல்லும் பையன், பெண்ணுடன் அமர்ந்து இக் காட்சியைப் பார்க்கும் பெற்றோர் எவ்வளவு தர்மசங்கடமாக உணர்வார்கள். என்ன தான் அந்தப் பெண் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதாகக் காட்டினாலும், அவளும் தமிழ்ப்பெண்தானே? தமிழர்களுக்கு என்று இருக்கும் சில பண்பாடுகளை, சீரியல் எடுக்கும் புண்ணியவான்கள் மறந்தது ஏனோ? தேர்ந்தெடுத்துப் பார்க்கும் ஒன்றிரண்டு சீரியல்களையும் இனி நிறுத்திவிட வேண்டும் போலுள்ளது. டி.வி. மெகா தொடர்களுக்கும் சென்சார் அவசியம்.

_ ச. ஜெயலெட்சுமி, சென்னை. கடிதம் குமுதத்தில் வந்தது.


மூன்றாம் மொழிப்போராளிகளே, இது போல தொடர் சன் டிவி ல வருதுன்ன பரவாயில்லை கண்டுக்காதீங்க.. கலைஞர் வீட்டு டிவில சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்த தேர்தல்ல தொகுதி கிடைக்காம போயிட போகுது... ஆங்கிலம் மட்டுமே நமக்கெதிரி.. தமிழ் பண்பாடு இன்னும் 25 வருடம் கழித்து பார்த்துக்கலாம்.

அன்புடன்

விச்சு..

Tuesday, June 21, 2005

உலகம் அழியப் போகிறது? 6/6/6

உலகம் அழியப் போகிறது? 6/6/6


6 ஜுன் 2006


விவிலியத்தில் 666 என்ற எண் வரும் பொது ஆன்டி க்ரிச்ட் வருவான்.. உலகம் அழியும்.. நம்புவோரைக்காப்பாற்ற கிறிஸ்து உயிர்த்தெழுவார் என்று கூறப்பட்டிருக்கிறதாமே.. ஒரு பிரசங்கத்தில் கேட்டேன்..

வலையில் இருக்கும் அன்பர்கள் யாராவது இது என்ன என்று விளக்குவீர்களா..

அன்புடன் விச்சு

அப்படி போடு அருவாள - கைதட்டினால் நோய் குணமாகும்

அப்படி போடு அருவாள - கைதட்டினால் நோய் குணமாகும்

கைகளைத்தட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பது உலகம் முழுவதும் உள்ள நல்ல பழக்கம். கைகளைத் தட்டினால் 90 சதவீத நோய்கள் குணமாகின்றன என சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. முகவரி: www.clap-clap.com

கைகளைத் தட்டும் போது ஏற்படும் உடலின் அதிர்வுகள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றன என மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகும். இந்த அடைப்பு நீக்குவதினால் ரத்த நாளங்களில் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் தங்குதடையின்றி சீராக நடைபெறுகின்றது. இதனால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு நீக்கப்படுகின்றது.

உடல் உறுப்புகளின் நரம்பு நுனிகள் கைகளில் முடிவடைகின்றன. கை தட்டுவதால் ஏற்படும் இந்த அதிர்வுகள் நரம்பு மண்டலத்திலுள்ள தேவையற்ற முடிச்சுக்களை நீக்கி நரம்பு மண்டலத்தைச் சீராக்கிறது. உணர்வுகளும் இதனால் சீர்படுகின்றது. ரத்த ஓட்டமும் நரம்பு மண்டலமும் சீராகி பலமடைவதால் உடலில் 90 சதவீத நோய்கள் குணமாவது சாத்தியமாகின்றது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் கைகளைத் தட்ட வேண்டும். ஒரு நிமிடத்திக்கு 60 முதல் 100 தடவை வரை கைகளை தட்டலாம்.

கை தட்டல் ஒலி பலமாகத் கேட்க வேண்டும் என்பதில்லை. இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு ஏதுமில்லை. கை தட்டல் பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தம் இதய நோய் சர்க்கரை நோய், எழும்பு தொடர்பான நோய்கள் குணமாகியுள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கை தட்டும் பயிற்சியை புதுவித யோகா பயிற்சியாக அங்கீகரித்துள்ளது என்பது கைத்தட்டல் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றது.
எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்..

நன்றி தினமலர்.

அப்படி போடு அருவாள.. தலித் கட்சியில் பிராமணர்கள்..

அப்படி போடு அருவாள.. தலித் கட்சியில் பிராமணர்கள்..

ஓட்டு என்ன எல்லாம் செய்கிறது பாருங்கள்.. தம்மை தாழ்ந்தவர்களாக்கியவர்களுடனேயே கூட்டணி.

தமிழகத்தில் தம்மை காலில் போட்டு மிதிதுக்கொன்டிருந்த வன்னியர் மற்றும் முக்குலத்தோர் கூட கூட்டணி வைக்கலாம் என்றால்.. இதுவும் பரவாயில்லை.


காங்கிரஸ் கண்டுக்காத சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுக்கிறார் மாயாவதி

உத்தரபிரதேசத்தில் பிராமண சமூகத்தினரை கவரும் வகையில் சமீபத்தில் மாயாவதி மாநாடு ஒன்றை நடத்தினார். தலித் சமூகத்தினரை மட்டுமே நம்பியிருந்தால் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என்பதால், மாயாவதி இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், பிராமண சமூகத்தினரிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும் என கடந்த ஒரு ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எல்லாம் பேச்சளவில் மட்டுமே உள்ளது. உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த பிராமண வகுப்புத் தலைவர் யாரையும் முக்கிய பதவியில் நியமிக்கவில்லை.


இந்த மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் மற்றும் மகாவீர் பிரசாத் ஆகியோரும் பனியா மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களே. மேலும், கடந்த ஒரு ஆண்டில் உ.பி.,யில் இருந்து மாநில கவர்னர்களாக நியமிக்கப்பட்ட ஏ.ஆர்.கித்வாய், சையது சிப்தே ரஸியும் முஸ்லிம் சமூகத்தினரே. மேலும், மாநில காங்கிரஸ் தலைவரான சல்மான் குர்ஷித்தும் முஸ்லிம் இனத்தவரே.

உ.பி., மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி கொஞ்சம், கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கிறது. பிராமண சமூகத்தினரின் செல்வாக்கை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் அவர்களை புறக்கணிக்கிறது. இந்நிலையில், பல நுõறு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வந்த தலித் தலைவர்களுக்கு பிராமண சமூகத்தினர் ஆதரவு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே கூறப்படுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் மாயாவதிக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஆதரவை அள்ளுவாரா மாயாவதி?

நன்றி தினமலர்

Wednesday, June 15, 2005

நான் ரஜினி, நீ கமல்

இன்னும் ஒரே வாரம். யாவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட ‘அந்நியன்’ வெள்ளித்திரையைத் தொடுகிறது. ‘ஸ்மார்ட்’ சீயான், ‘மஜா’வாக அடுத்தபடத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார். கலகலப்பாக ‘துறுதுறு’வென்று பேசினார் விக்ரம்.

இதோ இப்போ ‘அந்நியன்’ ரீலீஸ்ன்னு வந்தாச்சு, கடைசிக்கட்ட பரபரப்பு எப்படியிருக்கு?

‘‘அப்படியே உருக்கி எடுத்த உழைப்பு. கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருஷம். அதைக்கூட கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிட்டேன். அடுத்தபடம் ‘மஜா’வுக்குள்ளே இறங்கிடலாம்னு தோன்றிவிட்டது. ஆனால் சென்னையில் எங்கே பார்த்தாலும் அந்நியன் ஹோர்டிங்ஸ். யாரும் என் பார்வையிலிருந்து தப்ப முடியாது. இந்தப்படத்தில் ஷங்கர் என்ன அளவு சிந்தித்தார், எவ்வளவு சிரமம் எடுத்துக்கிட்டார். நான் எவ்வளவு உழைப்பைக் கொட்டினேன். அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைச்சிட்டு, இந்த புரொடியூசர் கிடைச்சாரே, அதைத்தான் பெரிய புண்ணியம், பாக்கியம்னு நினைக்கிறேன்.’’

இன்னும் இதுமாதிரி பெரிய கேரக்டர் செய்யணும்னு தோணுதா? அப்பாடா ‘போதும்டா சாமி’ன்னு சோர்வு வருதா?

‘‘எனக்கு சாகசங்கள் பிடிக்கும். எந்த அனுபவத்தையும் தராத கேரக்டர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய! அந்நியனையே பாருங்க, இவ்வளவு பெரிய படம், பெரிய ஆக்ஷன். என்னைக் கவர்ந்தது கேரக்டரோட பெரிய விஸ்தீரணம். அந்த விஷயத்தில்தான் மனசு நிறைஞ்சு நிக்குது.’’

ஒரே படம். விதவிதமான நிஜமான முகத்தோற்றங்கள். வெவ்வேறு தோற்றம், வேறுபட்ட பாவங்கள், கோபம் தெறிச்சு, படு காதலாக எப்படி மாத்திக்க முடியுது?

‘‘இன்னிக்கு காலையில் கூட தூக்கம் வரவில்லை. பக்கத்தில் அசந்து தூங்கிட்டு இருந்த ஷைலாவை எழுப்பி பேசிட்டு இருந்தேன். ‘கனாகண்டேன்’ பார்த்தோம். பிருதிவிராஜ் ரோலைப்பத்திப் பேசிட்டு இருந்தோம். அந்த ரோலுக்கு மறைமுகமாக என்னை முயற்சி பண்ணாங்க என்று கேள்விப்பட்டேன். ‘நான் நடிச்சிருந்தால் எப்படியிருக்கும்’ என்று ஷைலாகிட்டே கேட்டேன். ‘நீ எப்படி இருப்பாய்னு தெரியாது. நீ மூஞ்சியை மாத்திடுவாய். எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவாய்னு தெரியாது’ன்னு சொல்லிச் சிரிச்சாங்க. அவங்களுக்கே நான் ஒவ்வொரு தடவையும் என்ன வடிவத்தில் இருப்பேன்னு தெரியலை. அது கடவுளோட பரிசு.’’

‘கில்லி’ விழாவில் ரஜினி, ‘உங்களையும், விஜய்யையும் சேர்த்துப் பார்க்கும்போது எனக்கு நானும், கமலும் முன்னாடி இருந்த காலத்தை நினைவுபடுத்துகிறது’ என்றார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

‘‘ரஜினி எதையும் பேச்சுக்காகன்னு சொல்ல மாட்டார். நானும் விஜய்யும் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கு விஜய்யை தூரத்தில் இருந்து பார்த்தாலும், அருகில் பார்த்தாலும் பிடிக்கும். எனக்கும் விஜய்க்கும் ரஜினிசார் செய்த கௌரவம்தான் அந்தப் பேச்சு. அவர் பெரிய ஆக்டர். தன் மனசில் இருக்கிறதை வெளிப்படையாகப் பேசுவதே பெரிய விஷயம். எங்க விஷயத்தில் அது நடந்திருக்கு.’’

ரஜினி குறிப்பிட்டபடி பார்த்தால் இதில் யார் ரஜினி, யார் கமல்?

‘‘அவர் விஜய்யாகவும், நான் நானாகவும் இருந்திட்டுப்போறோம். ம்ம்ம்..... சரி. விஜய் ரஜினியாக இருக்கட்டும். நான் கமலாக இருந்துக்கிறேன். நான் ரஜினியோட ரசிகன். ஆனால் கமல்தான் என் குரு. ரஜினி சாரைப் பாருங்களேன், அவர் நிக்கிற, பேசுகிற, யோசிக்கிறதில் கூட என்னமாதிரி ஸ்டைல் பாருங்க. எல்லா நடிகர்களுக்கும் கமல் மாதிரி இருந்தாகணும் என்று தோணும். வேண்டாம் சார், விஜய், விஜய்யாகவே இருக்கட்டும். விக்ரம் விக்ரமாகவே இருக்கட்டும்.’’

இந்திப்படம் செய்யப்போறதா கேள்விப்பட்டோமே?

‘‘கோவிந்த் நிஹாலனி சென்னைக்கு வந்து என்னைப் பார்த்தார். என்னமாதிரி படம் செய்யலாம், எது எல்லாம் சாத்தியம்னு பேசினோம். கேதன் மேத்தாவும் பேசினார். இப்போ அவசரமாக இல்லை. உள்ளே ஒரு நடிகன் உட்கார்ந்து தீனி கேட்டுட்டு இருக்கான் இல்லையா, அவன் திமிறி எழுந்திருக்கும்போது செய்வேன்.’’


குமுதத்தில் வந்த விக்ரம் பேட்டி..

அன்புடன் விச்சு

Tuesday, June 14, 2005

அரசியல் தொடர்பில்லாத தமிழ் அரங்கேறாதோ?

தமிழுக்கு இவர் செய்த தொண்டுகள் சிறப்பானவை.. அரசியல் தலைவர் அல்லது திரைப்பட நடிகர் அல்ல என்பதால் தான் இந்த நிலையோ.. தமிழுக்கு சிறப்பு சேர்த்த வலம்புரி ஜான் வறுமையில் தான் இறந்தார்.. முழுநேர அரசியல் தொடர்பில்லாத தமிழ் அரங்கேறாதோ?

அன்புடன் விச்சு


தினமலரில் வந்த கட்டுரை:

அழிந்து போகும் நிலையில் உ.வே.சா., வீடு தமிழுக்கு தொண்டுக்கு கிடைத்த பரிசா இது?



தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ.வே.சா., வீடு இன்று கேட்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறது. அரசுடமையாக்கப்பட்ட பின்பும் இந்த நிலையில் உள்ள அந்த வீட்டைப் பார்க்கும் தமிழ் ஆர்வலர்கள் மிகவும் நொந்து போய் உள்ளனர்.

"தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாதய்யர் தான் பிறந்த ஊரான உத்தமதானபுரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக ஊரின் முதல் எழுத்தான "உ'வை தன்னுடைய பெயரோடு இணைத்துக் கொண்டார். தஞ்சை பாபநாசம் அருகே உத்தமதானபுரம் உள்ளது. இவரது தந்தை வேங்கடசுப்பிரமணிய அய்யர், தாய் சரஸ்வதி அம்மாள். 19.2.1855ல் பிறந்த உ.வே.சா, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை குருவாக கொண்டவர். இன்றைக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கிய நுõல்களை படித்து தமிழறிவை வளர்த்துக் கொண்டு இலக்கியவாதிகளாக லட்கணக்கானோர் வலம் வருகின்றனர். இந்த அரிய இலக்கியப் பொக்கிஷங்களை சிந்தாமல் சிதறாமல் உலகுக்கு எடுத்து தந்தவர் உ.வே.சா.தான். அவர் தமிழ்மொழிக்கு உயிரூட்டிய விடிவெள்ளி.

காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஓலைச்சுவடி தான் நடைமுறையில் இருந்தது. பதப்படுத்தப்பட்ட பனைஓலையில் எழுத்தாணியால் எழுதி பயன்படுத்தி வந்தனர்.

அறிஞர் ராமசாமி முதலியார் என்பவரிடம் பாடம் கேட்க வந்த உ.வே.சா.வை பார்த்து "சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி' படித்திருக்கிறாயா என்று அவர் கேட்டார். அந்தக் கேள்வியே சாமிநாதய்யரை ஓலைச்சுவடிகளை தேடத் துõண்டியது.

ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்த சாமிநாதய்யருக்கு அவை கரையான் அரித்தும், மழையில் நனைந்தும் கண்ட இடங்களில் துõக்கி எறியப்பட்டும் கிடந்ததைக் கண்டு மனம் பதறினார். அரிய பொக்கிஷங்களான இவற்றை பேணிக் காக்காவிட்டால் காலப்போக்கில் இவை முற்றிலும் அழிந்து வருங்கால சந்ததியினர் இந்த இலக்கியங்களைப் பற்றி அறியாமலே போய்விடுவர் என்று பதை பதைத்தார்.

எனவே, அவர் பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று அரிய ஓலைச்சுவடிகளை ஒன்று திரட்டினார். இவ்வாறு அவருக்கு பத்துப்பாட்டு, புராணங்கள் 14, பிரபந்தங்கள் 42, இலக்கண நுõல்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் ஓலைச்சுவடிகளாக கிடைத்தன. அவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி நுõல்களாக பதிப்பித்தார். இந்த நுõல்களெல்லாம் இன்றைக்கு காசு கொடுத்தால் எளிதாக கிடைப்பதற்கு காரணமே உ.வே.சா.தான். அவருடைய பெரும் முயற்சியால் தமிழுக்கு கிடைத்த கருவூலங்கள் அவை.

அவரது புலமையை அறிந்து அன்றைய அரசு 1906ம் ஆண்டு "மகா மகோ உபாத்தியாய' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கி கவுரவித்தது. தமிழ் நெஞ்சங்களோ இவரை, "தமிழ்த்தாத்தா' என்று பட்டம் வழங்கி அன்புடன் அழைத்தனர். தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ. வே.சா., 1942ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி மறைந்தார். சென்னையில் இவர் வசித்த வீடு "தியாகராச விலாசம்' என்ற பெயரால் உள்ளது. சென்னையில் இவரது பெயரால் நுõலகம் ஒன்றும் இயங்கி வருகிறது.

தமிழுக்கு தொண்டாற்றி மறைந்த அந்த தமிழ்த்தாத்தா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த வீட்டின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?.

தமிழ் ஆர்வலரும், கலை விமர்சகருமான பாபநாசம் எழுத்தாளர் வீ.பி.கே.மூர்த்தி(69) என்பவர் பொதுமக்களின் கோரிக்கையான உ.வே.சா.வீட்டை அரசுடைமையாக்கி அதை நினைவு சின்னமாக்க வேண்டும். அதில் நுõலகம் வைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு இப்போது வயது 30 ஆண்டுகள்.

இரண்டாவது முறையாக முதல்வரான ஜெயலலிதா விரைவில் உ.வே.சா.வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்கி ஆணை பிறப்பித்தார். இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் உ.வே.சா. வீடு அவரது உறவினர்கள் வசம் இருந்தது. அந்த நேரத்தில் அந்த வீட்டை பிரித்து சீரமைக்கும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். அரசு உத்தரவை காண்பித்து அதிகாரிகள் வீட்டை முற்றுகையிட்டனர். உ.வே.சா உறவினர்களிடம் வீட்டை விலை பேசினர். வீடு பிரித்தது பாதி, பிரிக்காதது பாதியுமாக கிடந்த நிலையில் வீடு கைமாறியதாக தெரிகிறது. அதன்பின் அந்த வீட்டை சீரமைக்கும் பணி தொடரவில்லை. போட்டது போட்டபடி சிதிலமடைந்து கிடக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி பெய்த மழையில் வீட்டின் மாடியின் முன்பகுதி இடிந்து விழுந்தது. தற்போது வீட்டின் உள்ளேயே போக முடியாத நிலை உள்ளது. அதேபோல வீட்டின் பின்பக்க வழியாகவும் போக முடியவில்லை. கடந்த மே மாதம் பெய்த மழையில் வீட்டு சுவர்கள் பல இடிந்து விழுந்தன. மூங்கில்கள் பெயர்ந்து தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இப்போது வீடு பாழடைந்து பாம்புகள் குடிபுகுந்து விட்டன.

தற்போது தமிழ்த்தாத்தா வசித்த வீட்டில் பாதி தான் உள்ளது. முன்பகுதியில் ஓடுகள் விழுந்து குவிந்து கிடக்கின்றன. வாசற்கதவை திறந்து உள்ளே போக முடியாது. வேறுவழியாக சிரமப்பட்டு உள்ளே நுழைந்து பார்த்தால் ஓட்டு மாடி பாதி இடிந்து விழுந்தும் மற்றொரு பாதி எந்த நேரமும் விழத் தயாராகவும் உள்ளன. உள்வாசல் சுவர் முற்றிலும் விழுந்து கிடக்கிறது.

வீட்டின் அளவே சுமார் 30 அடி அகலம் 100 அடி நீளம் தான் இருக்கும். இதை சீரமைப்பது அரசுக்கு பெரிய சுமையாக இருக்காது என்றே தோன்றுகிறது.

மூர்த்தியின் ஆதங்கம்:
தமிழ் ஆர்வலரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான வீ.பி.கே.மூர்த்தி கூறியதாவது:

உத்தமதானபுரத்தில் நடைபெறும் பூஜைக்காக அங்கு அடிக்கடி செல்வேன். அப்போதெல்லாம் தமிழ்த்தாத்தா வீட்டை பார்த்து வருவேன். நாளுக்கு நாள் அந்த வீடு இடிந்து விழுவது என் உயிர் போவது போல் இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா மனம் வைத்தால் இதற்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும். வீடு புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு அடையும் நாளில் உ.வே.சா. வீட்டோடு அவரது படத்தையும் போட்டு சிறப்பு தபால்தலை வெளியிட வேண்டும். தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழ்த்தாத்தாவுக்கு இதன்மூலம் நமது அரசும் மகுடம் சூட்டிய பெருமை கிடைக்கும் என்றார்.

இந்தக் கவிதை நொபெல் பரிசு பெற்றது

எனக்கும் ஆசைதான்

இறவாக் கவிதை எழுத..

முதலில் தவறில்லாமல் சிந்திக்க தொடங்குகிறேன்

பின் தமிழில் எழுத்துப்பிழை இன்றி எழுதுகிறேன்.

பிறகு வரும் என் கவிதை

அதுவரை ஆங்கிலத்தில் அடுத்தவர் கவிதை படியுங்கள்..

அன்புடன்

விச்சு

தாகூரின் கீதாஞ்சலியில் இருந்து ஒரு பாடல்.

Where the mind is without fear and the head is held high;

Where knowledge is free;

Where the world has not been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of truth;

Where tireless striving stretches its arms towards perfection;

Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;

Where the mind is led forward by thee into ever-widening thought and action---

Into that heaven of freedom, my Father, let my country awake.

ஒரு அரிய வாய்ப்பு

http://pulambals.blogspot.com/2005/06/blog-post_10.html

ஒரு அரிய வாய்ப்பு

அம்மா கட்சி நண்பர்களே..

பள்ளிக்கூடங்களில் கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவர் களைப் பயன் படுத்துகிறார்களாம்..

என்ன கொடுமை..

உடனே புரட்சி தலைவி செயல் பட கடிதம் எழுதுங்கள்.. அமைச்சரிடம் கூறுங்கள்.. எதாவது செய்யுங்கள். ஒரு இடத்துக்கு 10000 முதல் 25000 சம்பாதிக்க வாய்ப்பு.

50000 பள்ளிகளுக்கு, ஆயாக்கள் நியமிக்கலாம்.. தேர்தல் காலத்தில் கீழ்நிலை தொண்டருக்கு வருமானத்துக்கு வழி...முதுகலை பட்டதாரிகளும் நிறைய பேர் கிடைப்பார்கள்..

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.. விட்டால் அடுத்த அரசு அதை பயன் படுத்திக்கொள்ளும்..

கண்டுபிடித்துச் சொன்னவர்

விச்சு

Monday, June 13, 2005

பிரசினை இட ஒதுக்கீடு தான்." சுஜாதா என்ன சொன்னார்


அர்ச்சனா:கல்லூரியில் சேரும் போதே இடஒதுக்கீடு பிரச்னையால ஒதுக்கப்படுகிறோம். நாங்க பார்வர்ட் காஸ்ட்ல பிறந்துட்டோம்கிற ஒரே காரணத்துக்காக எவ்வளவு மார்க் எடுத்தும் நாங்க படிக்க விரும்புற சீட் எங்களுக்குக் கிடைக்கமாட்டேங்குது. ஒண்ணு, நாங்க பார்வர்டு காஸ்ட்டுல பிறந்திருக்கக் கூடாது. இல்லாட்டி, எங்க கிட்ட நிறைய பணமாவது இருந்திருக்கணும். இதையெல்லாம் நினைச்சுப் பாக்கறப்ப வேதனையா இருக்கு.

சுஜாதா : உங்க ஆதங்கம் உங்களுக்கு நியாயமா இருக்கலாம். ஆனா, இன்னும் கிராமத்துல எத்தனையோ ஜாதியைச் சேர்ந்த ஏழை மக்கள் பள்ளிக்கூடத்திற்குப் போய் படிக்க வசதியில்லாம இருக்காங்க. காலப்போக்குல ஒரு ஏற்றத்தாழ்வு நம்ம சமூகத்துல வந்திடுச்சி. அதைச் சரிப்படுத்தணும் என்று சொல்கிறது சட்டம். சட்டம் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

நிவேதிதா : அதை எங்களால புரிஞ்சுக்க முடியுது. ஆனா எங்க நிலைமை...?

சுஜாதா : இது ஒரு சிக்கலான பிரச்னைதான். இதற்கு தீர்வு சொல்றது கஷ்டம். ஆனா, நீங்க நம்பிக்கையை மட்டும் இழந்துறாதீங்க. முட்டி மோதி முயற்சி செஞ்சுகிட்டே இருங்க. முயற்சி எல்லோரையும் ஜெயிக்க வைக்கும்.

குமுதத்தில் வந்த கலந்துரையாடல் இது.. நல்ல பதில் அளித்த சுஜாதா வாழ்க.

அன்புடன் விச்சு

ஜெயகாந்தன் கருத்தும் பிராமண எதிர்ப்பும்

//இங்கே பிறப்பினால் உயர் குலத்தோன் என்று சொல்லப்படுபவர் சமூகம் தரும் அத்தனை சலுகைகளையும் சுகத்தையும் மரியாதையும் அனுபவித்துக்கொண்டு பிறப்பினால் உயர்வு தாழ்வு இருந்தால் தான் வாழ்வு சுவாரசியமாக இருக்கும் என்று கூறும் ஒரு நோயுற்ற மனப்பாண்மையை கண்டித்து பேசிக்கொண்டிருக்கின்றோம் //

இந்த கருத்தை நானும் பல முறை எனக்கு நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. சில சமயங்களில் நாம் ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு நம் முன்னேற்றத்தை தடுத்துக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.

கேரளத்தில் இருந்த அளவு இந்த இன பேதம் (பெண்கள் மேலாடை அணியத்தடை, எதிரில் நடந்து வரக்கூட தடை) மோசமாக தமிழகத்தில் இருக்க வில்லை என்றே நினைக்கிறேன்.. இந்த விஷயத்தில் நாராயண குரு கொண்ட கொள்கை (உங்களுடைய எதுவும் வேண்டாம், எங்களுக்கு நாங்களே ) ஈழவர்களுக்கு அவர்கள் முன்னேற வழி காட்டியது போல தோன்றுகிறது.

தமிழகத்தில் இது சமூகம் சார்ந்த நிகழ்வாய் பெரியாரால் தொடங்கப்பட்டு அரசியலாக்கப்பட்டதும் அதன் முக்கியதுவம் குறைந்து விட்டது என்பது என் கருத்து.. ஆனால் கேரளத்தில் இன்னும் அது சமூக இயக்கமாகவே தொடர்வதால் ஏற்றத் தாழ்வுகள் மிகவும் குறைந்து விட்டதென்றும் நினைக்கிறேன்.

தமிழகத்தில் இரு கோடுகள் கதை நடக்கிறது.. பெரிய கோட்டை அழித்து சிறிய கோட்டை பெரியதாக காட்டும் முயற்சியில், பெரியதும் போச்சு, சிறியதும் வளர வில்லை. இல்லையென்றால், இன்றும் ஒரு தாழ்த்தப்பட்டவர் இனம் பொருளாதார அடிப்படையிலோ கல்வி அடிப்படையிலோ முன்னேறி இருக்கிறோம் என்று கூற முடியாத நிலை இருக்காது.

இரண்டாவது, தமிழகத்தில் பிராமணர்களைத் தூக்கி எறிந்துவிட்டு அதற்கு அடுத்த வர்ணக்காரர்கள் தமக்கு கீழ் உள்ளவர்களை நசுக்கும் நிலையும் தென்படுகிறது.. எங்கெல்லாம் தலித்துகள் தாக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களை நசுக்குபவர்களெல்லாம் பிராமணர்கள் அல்ல என்பதயும் கவனிக்க வேண்டும்..

இன்றைய தினத்தில் பிராமணர்களுக்கு அவர்கள் சொல்லி நடத்தச் செய்யும் அளவு பலம் இருப்பதாக தோன்ற வில்லை. இந்த நிலையில் பிராமண எதிர்ப்பு என்பது செத்த பாம்பை அடிப்பதற்கு ஒப்பாகும்.. ஓட்டு வாங்க உதவுமே தவிர தாழ்த்தப்பட்டவர்கள் நல்வாழ்விற்கு உதவுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

கடந்த 25 ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி கற்க சமமான தளம் அமைந்திருப்பதை மறுக்க முடியாது. நானும் மாநகராட்சி பள்ளியில் படித்து வளர்ந்தவன் தான். ஆங்கிலத்தில் பேசவே கல்லூரி சென்றுதான் கற்றுக்கொண்டேன். இப்பொது அமெரிக்காவில் நல்ல ஒரு வேலையில் இருக்கிறேன். என்னுடன் இருக்கும் பலரும் அப்படி படித்து வந்தவைகள் தான். முயற்சி தான் இந்த நிலையைத் தந்தது.. ஊக்கம் நமக்குள்ளிருந்து வரவேண்டும். யாரும் எதுவும் இலவசமாகவோ எளிதாகவோ கிடைக்கப்பெறுவதில்லை. நாம் முன்னேறாவிட்டால், நாம் தான் பொறுப்பு.. அடுத்தவர்களைத் திட்டி பழி போட்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது.

ஏழைகளுக்கு தானம் கொடுக்கும் போது அந்தப் பகுதியில் செல்வோர் எல்லாம் கை நீட்டி தானம் பெறும் மனப்பாங்கும் இங்கே தென்படுகிறது. இதில் பலன் பெறுவோர் பலர் இடைப்பட்ட சமூக அந்தஸ்தில் உள்ளவர்களே. தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்பு இடங்கள் நிரப்ப ஆள் கிடைக்காமல் காலியாக உள்ளது, அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இத்தனைக்கும் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களில் ஜெயலலிதா தவிர அனைவருமே பிராமணர் அல்லதோர் தான். இலவசத் திட்டங்களும், படி அரிசித்திட்டங்களும் போட்டு ஓட்டு வேட்டையாடியதைத் தவிர அவர்களை முன்னேற்ற யாருமே முனைப்புடன் செயல்பட வில்லையென்பது தன் கட்சி, தலைவர் என்ற தடுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் தெளிவாகத்தெரியும்.

எப்படிப்பட்ட நடவடிக்கை தேவை என்றால், குடும்பக்கட்டுப்பாடு, போலியோ தடுப்பு போன்றவற்றில் காட்டப்பட்ட அளவு ஆர்வம் தேவை. மதிய உணவு தந்து காமராஜரும் எம் ஜி ஆரும் மாணாக்கர் களை பள்ளிக்கு கொண்டு வந்தார்களே அது போன்ற முயற்சி தேவை.. அப்படித்தானே 100 சதவீத கல்வி நிலைக்கு தமிழகம் வந்தது. அதே முயற்சி தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திலும் காட்டப்பட்டால் தாழ்த்தப்பட்டவர்களும் முன்னேறுவார்கள், தமிழகமும் முன்னேறும். பல நூறாண்டு களங்கமும் நீங்கும்.

Sunday, June 12, 2005

மைக்கல் ஜாக்சன் தற்கொலை முயற்சி

.
.
இன்று காலை அனைவரது கவனமும் இந்த செய்தி நோக்கியே இருக்கிறது.

இந்த பெயரில் உங்களுக்கு செய்தி வந்தால்,

ஜாக்கிரதை..


இது ஒரு ட்ரஜன் வகை வைரஸ் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியின் சுட்டியைத் திறந்ததும் உங்கள் கணிப்பொறியில் மால்வேர் எனப்படும் கெடுமென்பொருள் தானாகவே இறங்கி உங்கள் கணிப்பொறியை செயலிழக்கச்செய்யும்..

எனவே கவனம்

அன்புடன்
விச்சு

Friday, June 10, 2005

அப்படி போடு அருவாள - தஞ்சையில் தமிழைக் காணும்

மாநாடு, போராட்டங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே என்று காட்டும் செய்தி.

இது ஒரு சோறு பதம் பார்க்க..பானைகள் நிறைய இருக்கின்றன.

யாராவது ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழிபெயர்த்து அறிவிப்பு வைக்கலாம்.. போராட்டத்தை விட செலவும் குறைவு.. பலனும் அதிகம்.

நான் சமீபத்தில் தஞ்சாவூர் சென்றிருந்தேன். அங்கே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையைச் சுற்றிப் பார்த்தேன். பண்டைக்கால தமிழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாக, கம்பீரமாக காட்சியளிக்கிறது அந்த அரண்மனை.

அதில் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் அரசர்கள் காலத்து நாணயங்கள் வரிசையாக கண்ணாடிக் கூண்டுகளில் கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள். நாணயங்களுக்குக் கீழே அந்த நாணயம் யாருடைய காலத்தில் புழக்கத்தில் விடப்பட்டது, எந்த ஆண்டில் புழக்கத்தில் இருந்தது என்ற விவரக் குறிப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில், தமிழ் மட்டும் படிக்கத் தெரிந்த தமிழர்கள் இதை எப்படி படித்துத் தெரிந்து கொள்வது? நாணயங்களின் கீழே தமிழிலும் எழுதி வைத்தால் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளலாமே?

தமிழ்மொழி _ செம்மொழி ஆகியிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் குறைபாட்டை அரசு கண்டிப்பாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆசை.

_ வி.கே.எஸ்.புகழேந்தி, சின்னமனூர்.

குமுதத்தில் வந்த வாசகர் கடிதம்.

அன்புடன்

விச்சு

ஜெயகாந்தன் உண்மையில் தமிழ் / வடமொழி பற்றி பேசியது என்ன?

“வருண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவராசியமாக இருக்கும். தமிழைவிட சமற்கிருதந்தான் உயர்வானது; பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும்; பேச வேண்டும் என்கின்ற தமிழறிஞர்கள் தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்; சமற்கிருதம் இங்கே தரித்து வளர்க்கப் பட்டிருந்தால் ங்கிலம் இப்படி நுழைந்திருக்காது” எனக் கடந்த 23.04.05 இல் சென்னையில் சேவாசமிதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்."

இது மகேஷ் என்பவர் மலேஷிய தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் எழுதியதாக வலைப்பூவில் படித்தேன்.

இப்படி ஜெயகாந்தன் பேசினாரா.. அவர் பேச்சை சிவகுமாரின் வலைப்பூவில் கேட்டேன்.. அதில் இப்படி ஒன்றும் கேட்கவில்லையெ.. வேறு எங்கும் பேசினாரா..

அந்த சுட்டி கிடைக்குமா.. ஏதும் பத்திரிகையில் இருக்கிறதா..

நேற்று குமுதத்தில் கோவை விழா பற்றி படித்ததும் http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_09.html உண்மையை தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாகிறது...

அத்வானி மேற்கோள் காட்டியதை http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_111816728654143529.html ஊதி ஊதிப் பெரிசாக்கியது (அய்யோ.. எந்த ஜாதியையோ வேறு யாரயுமோ குறிப்பிடவில்லை) போல செவி வழி வதந்தியாக பெரிதானதோ என்றும் ஒரு சந்தேகம்..

கண்களால் காண்பதும் பொய், காதுகளாள் கேட்பதும் பொய்.. தீர விசாரித்து அறிவதே மெய்.. அதனால் யாராவது சுட்டுங்கள்..உண்மையை அறிய உதவுங்கள்

அன்புடன்

விச்சு

அப்படி போடு அருவாள.. ஜெயகாந்தன் விளக்கம்..

அவர் கருத்தை அவர் கூறினார்.

நமக்கு தாழ்வு மனப்பான்மையா.. இல்லையென்றால் ஒரு எழுத்தாளன் சொல்லி இத்தனை பேர் ஏன் "நாய்" ஆனார்கள். இவர் சொல்லித்தான் இத்தனை நாள் தமிழை செம்மொழியாய் ஆக்கினோமா.. புரியவில்லை

இது குமுததில் வந்த கட்டுரை.

அன்புடன்
விச்சு


‘‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது. ‘பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும்; பேச வேண்டும்’ என்கிற தமிழறிஞர்கள், தம்மைத்தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் நுழைந்திருக்காது!’’
_என்று ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னாலும் சொன்னார்... அது, அவரை விடாது கறுப்பாகத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.
அண்மையில் கோவை_விஜயா பதிப்பகம் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவில் அவரை ஏக வசனத்தில் நிந்தித்துச் சிலர் கொடுத்த துண்டுப் பிரசுரத்தாலும், ‘தாய்த் தமிழை அசிங்கப்படுத்திய ஜெயகாந்தனே தமிழில் பேசாதே; சமஸ்கிருதத்தில் பேசு!’ என்று அவர்கள் போட்ட கோஷத்தாலும் அவ்விழாவே அமளிதுமளிப்பட்டது. கடைசியில், போலீஸார் வந்து கலகக்காரர்களை அப்புறப்படுத்தி இலக்கியக் கூட்டத்திற்குப் பாதுகாப்பளிக்கும் அளவுக்கு விஷயம் முற்றிப் போய் விட்டது!
கடந்த ஞாயிறன்று காலை 10 மணிக்கு ஓட்டல் அரங்கம் ஒன்றில் விழா நடப்பதாக ஏற்பாடு. பதினொரு மணிக்குத்தான் ஆரம்பித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பின் வரவேற்புரை வாசித்த விஜயா_வேலாயுதம் ஜெயகாந்தனுக்கும், மேடையிலிருந்த பிறருக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை.
எல்.ஜி. கீதானந்தன் தலைமையுரையாற்றும் போதுதான் பிரச்னை ஆரம்பமானது.
‘‘ஜெயகாந்தன் ஒரு சிந்தனையாளர். அவருக்குப் பாராட்டுச் செய்வது தமிழுக்குப் பாராட்டுச் செய்வதற்கு ஒப்பாகும். அப்படிப்பட்ட அவருக்கு, ‘பாராட்டு விழா நடத்தக் கூடாது’ என்று சில சண்டாளர்கள் விஜயா பதிப்பகத்திற்குத் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். ‘இந்த ஆளுக்கு விருது எதுக்கு? பாராட்டு எதுக்கு?’ என்று கேட்பவர்களுக்கு இதைச் சொல்லுகிறேன். அவர் விரச விவகாரங்களையும், காம வேட்கைகளையும் தணித்துக் கொள்ள எழுதும் எழுத்தாளர் அல்லர். விருதுகளுக்காகவும் எழுதுபவர் அல்ல. ஒருமுறை, ‘இந்த விருதுகள் எதற்காக?’ என்று அவரிடம் கேட்டேன். ‘அது எழுத்தாளர்களுக்கு நாய் பாஸ்’ என்றார். அப்படி மேன்மையான இடத்திலிருந்து விருதுகளையும், பாராட்டுக்களையும் துச்சமாகப் பார்ப்பவர்தான் இவர்!’’ என்று அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு நபர், ஒரு கற்றை துண்டுப்பிரசுரங்களை எடுத்துக் கொண்டு நேராக மேடைக்கே வந்து ஜெயகாந்தன் உள்பட அனைவருக்கும் கொடுத்துவிட்டு, கூட்டத்திலும் விநியோகிக்க ஆரம்பித்தார்.
கையால் எழுதப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட அந்த பிரசுரத்தில் இடம் பெற்றிருந்தவை எல்லாம் அதிர்ச்சிக்குரிய வாசகங்கள். அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை இவைதான்.
‘‘தமிழ் உயர்தனிச் செம்மொழி. உலக வழக்கில் அழியாத மொழி. சமசுகிருதம் செத்த மொழி. அது என்றுமே பேச்சு மொழியாக இருந்ததில்லை. செந்தமிழை செத்த மொழியோடு ஒப்பிட்டது மாபெரும் கண்டனத்துக்குரியது!
ஏய் செயகாந்தனே! நீ தமிழினத்தில் பிறந்து தமிழிலேயே பேசி, தமிழிலேயே எழுதி இன்று ஞானபீட பரிசைப் பெற்றிருக்கின்றாய். தமிழை விட சமசுகிருதம் உயர்வானது என்று கூற நீ ஒன்றும் ஆராய்ச்சியாளன் இல்லை. வெறும் எழுத்தாளன் மட்டுமே. துணிவிருந்தால் இந்த மேடையில் சமசுகிருதத்தில் பேசு. தமிழில் பேசாதே!
தனித்தமிழில் பேசவும், எழுதவும் செய்கின்ற தமிழறிஞர்களை நீ தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் நாய்கள் என்று குறிப்பிட்டுள்ளாய். அப்படியென்றால் பிறமொழி கலந்து எழுதும் உன்னை பார்ப்பானின் அடிவருடி என்றுதான் கூற வேண்டும். எங்கள் தனித்தமிழ் அறிஞர்களைப் பழித்துக் கூறிய உனக்கு எதற்கடா மதிப்பு? உனக்கு விழா ஒரு கேடா? உன்னைப் போன்ற முட்டாள்களை நினைத்துத்தான் எங்கள் பாவேந்தர்
‘வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய்_எதிர்வரக்கானில்
காறி நீ உமிழ்வாய்!’ என்று பாடியுள்ளார்.
வர்ண வேறுபாடு என்ற தீண்டாமையை ஆதரித்துப் பேசியிருக்கின்றாய். அந்தத் தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கூட உனக்கு விலங்கு பூட்டலாம். ஏய்! தமிழின எதிரியே நாவை அடக்கிப் பேசு. இல்லையென்றால் உனது மதிப்பு கெட்டுப் போகும். _தமிழ் உணர்வாளர்கள், கோவை.’’
_இந்த துண்டுப் பிரசுரத்தைப் படித்ததும் விழித்துக் கொண்டவர் மேடையில் இருந்த விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம். உடனே கீதானந்தனின் பேச்சினிடையே மறித்து ‘ஏம்ப்பா! இங்கே எந்தப் பிரசுரமும் கொடுக்காதீங்க. விழா முடிஞ்சு வெளியே போய்க் கொடுங்க!’ என்று ‘மைக்’கிலேயே அறிவிப்புச் செய்தார்.
பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நபர் அசரவில்லை. ‘இதற்கு ஜெயகாந்தன் பதில் சொல்லட்டும்!’ என்று பதிலுக்குக் குரல் கொடுக்க, அரங்கிலிருந்த ஜெயகாந்தன் விசிறிகள் விடவில்லை. இந்த நபரிடம் பெறப்பட்ட பிரசுரங்களைக் கிழித்தெறிந்த கையோடு அவரை வெளியேற்றவும் முயற்சி செய்தனர். அதனால் அமளிதுமளி ஆரம்பமாகிவிட்டது. போலீஸ் வந்தபிறகே கூட்டம் அமைதியானது.
இறுதியில் ஜெயகாந்தன் பேச எழுந்தபோது, மறுபடியும் அரங்கம் களேபரமானதும் ‘தமிழில் பேசாதே! சமஸ்கிருதத்தில் பேசு!’ என்று கூட்டத்தின் கடைக்கோடியிலிருந்து தி.க. இளைஞர்களிடமிருந்து குரல்கள் ஒலிக்க, அதற்கு முன்னதாக அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருந்த கோவை ஞானி எழுந்து ஒரு விஷயத்தைச் சொன்னார்.
‘‘ஜெயகாந்தனின் தமிழுணர்வு பற்றி எங்களுக்குச் சந்தேகமில்லை. அதை மேடையில் கவிஞர் சிற்பி விளக்கியும் விட்டார். ஆனால் எங்களுக்கு மீதி மூன்று விஷயங்களை ஜெயகாந்தன் தெளிவுபடுத்தியே ஆக வேண்டும். ‘வர்ண வேறுபாடுகள் வேண்டும்!’ என்கிறார் அது எந்த வகையில்? சமஸ்கிருதம் தமிழை விட உயர்வானது எப்படி? பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுவதும் எழுதுவதும் குற்றமா?’’
இதைக் கேட்ட ஜெயகாந்தன், ‘‘நன்றி ஞானி. கண்டிப்பாக பதில் சொல்கிறேன்!’’ என்றபடி மைக்கைப் பிடித்து ‘‘நண்பர்களே!’’ என்று ஆரம்பித்தார். அவ்வளவுதான்! அரங்கின் பின் பகுதியில் இருந்த இளைஞர் படை மேடை நோக்கி ‘தமிழில் பேசாதே! சமஸ்கிருதத்தில் பேசு!’ என்று கோஷம் எழுப்பியபடி மீண்டும் ஆவேசமாக எழுந்து வந்தது. சிறிது நேரம் அவர்கள் ஜெயகாந்தனைப் பேசவே விடவில்லை. பிறகு, போலீஸார் உட்புகுந்து கலகக்காரர்களை ஒவ்வொருவராக அரங்கிலிருந்து வெளியேற்றினர். பிறகுதான் ஜெயகாந்தன் பேசவே ஆரம்பித்தார்.
எடுத்த எடுப்பில் ‘‘மன்னியுங்கள் நண்பர்களே, மன்னியுங்கள்!’’ என்று மூன்றுமுறை கேட்டுக் கொண்டவர், ‘‘எனக்குத் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. தமிழ் கூடத் தெரியாது!’’ என்று தமது சிம்மக் குரலில் கர்ஜித்தவர், பிறகு ‘‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்று தொடர்ந்தார்.
‘‘நண்பர்களே கோபத்திலிருந்துதான் உண்மை வெளிப்படும். நானும் மனிதன்தான். தவறு செய்வது இயற்கை. ‘தவறுக்கு மன்னியுங்கள்’ என்று கேட்பது மரபு. ‘மன்னிப்புக் கேள்!’ என்பது கட்டளை. அப்படிக் கேட்டாலும் கேட்கக்கூடியவன் நான் அல்ல. வடமொழியைப் புகழ்வது குற்றமென்றால் நான் மாசுபட்டவன் ஆகி விடுவேன். தமிழைத் தவிர வேறு மொழியைப் புகழ்ந்து பேசுவது கூடாது என்று சொன்னால் நான் தவறிழைத்தவனாகி விடுவேன். சைவ வேளாள இனத்தைச் சேர்ந்தவன் நான். ஆனால் சேரிக்குச் சென்றேன். அம் மக்களுடன் எல்லாம் பழகினேன். என் ஜாதிக்காரர்கள் சாப்பிடாததையெல்லாம் சாப்பிட்டேன். ‘சைவவேளாளர்’ ஜாதியை ஏன் சொல்லுகிறேன்? என்னை சமூகத்தில் அடையாளம் காட்டிக் கொள்ளவே. இல்லாவிட்டால் என்னை அட்ரஸ் இல்லாதவன் என்று சொல்லி விடுவார்கள்.
இங்கிருப்பவர்கள் தமிழுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லட்டும். எனக்கும் தமிழுக்குமான சம்பந்தத்தைச் சொல்கிறேன். இந்தப் புகழுக்கு யார் பொறுப்பு? நானா? அப்படியெனில் இவர்கள் இகழ்கிறார்களென்றால் அதற்கும் நானேதான் அதிகம் பொறுப்பு. உண்மை இகழும். இகழ வேண்டும். தவறு செய்தால் மனம் வருந்துகிறது. இதுதான் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் உள்ள வித்தியாசம். மனிதன் மிருகம் அல்ல; மிருகத்தைப் போல... சமஸ்கிருதம் கடல். வால்மீகியைப் படித்த கம்பன் சொல்லும்போது, ‘அது ஒரு கடல். அதை நாய் நக்கிக் குடிப்பது போல்தான் குடித்தேன்’ என்கிறார். அதன் பெருமையை தமிழ்நாட்டில்தான் பேசுவேன். இங்கேதான் இந்தி படியுங்கள் என்று சொல்லுவேன். ஆனால் தில்லிக்குச் சென்றால் தமிழ் முரசம் ஒலிக்கச் செய்வேன். தமிழ் எனக்குத் தெரியாது. தமிழுக்கு என்னைத் தெரிந்து விட்டது. நான் மாட்டிக் கொண்டேன். புழுதி வாரித் தூற்றுவது கூட ஒரு வகைப் புகழ்ச்சிதான். உங்களிடம் பேசியது பழகியது. கலந்துரையாடியது. கற்றுக் கொண்டதை உங்களுக்கே திரும்பக் கொடுத்ததைத் தவிர தவறு ஒன்றும் நான் செய்து விடவில்லை. நாகாக்க என்பது எனக்கு மட்டும் சொல்லப்பட்டது போலும். உங்களுக்காக சொல்லப்பட்டது இல்லை போலும்!’’ என்று பல்வேறு விஷயங்களையும் பேசி முடித்தார். இப்படி அந்த இலக்கியக் கூட்டம் ஒரு வழியாக முடிந்தது.

Thursday, June 09, 2005

அம்மாவே காரணம்

எல்லத்துக்கும் அம்மாவையே குறை கூறிப் பழக்கமாகி விட்டதா..

இது நாட்டு அம்மா இல்லை வீட்டு அம்மா..

அரசியல் இல்லை விஞ்ஞானம்..


மேலே படியுங்கள்


Women: Having Problems Reaching Orgasm? Blame Your Mom

A new study conducted on more than 4,000 women determined that heredity is the most important factor in determining how easily a woman achieves orgasm. In other words, if you’re having problems obtaining sexual satisfaction, it might just be your mother’s fault.

The results were published in Wednesday’s issue of the British journal 'Biology Letters.' The study examined 683 pairs of identical twins and 714 pairs of fraternal twins between the ages of 19 and 83. The results indicated that approximately 14 percent of women had an orgasm every time they had sex, 16 percent never achieved orgasm while having sex and another 16 percent rarely did.

The most common reason for the difference was genetic which accounted for 34 percent of the variation. That makes inherited factors the single most important factor in determining how easily women reached orgasm. 'What these results show ... is clear evidence that biology is an underlying influence here,' said Professor Tim Spector, the leader of the study. But women who have difficulty reaching orgasm should not lose hope according to Spector. 'There is a biological underlying influence that can’t be attributed purely to upbringing, religion or race. But I don’t think it should be deterministic at all; it’s just about understanding that everybody is different and women shouldn’t feel inferior when they read in ‘Cosmo’ about the average woman. There are many women that have problems, but when they seek sexual help they can improve their lot a great deal,' Spector added. Some feel that this research could be the first step towards developing a drug to help women reach orgasm. Spector noted that such medication is at least 10 years away due to the high number of genetic variations involved. But it does appear that a female equivalent of Viagra is on the horizon.

வயிற்றுப் பிரச்சினை - வாழ்க்கைப் பிரச்சினை

இன்று காலை NY வந்த ஒரு தென்னாபிரிக்க விமானத்தில் ஒருவர் சக்கரதிற்கான இடை வெளியில் மறைந்து கொண்டு வரும் முயற்சியில் உடம்பு சிதறி இறந்தார்..

அவருடய உடல் பாகங்கள் லாங் ஐலண்ட் பகுதியில் விழுந்தன..
மேலும் விவரமறிய http://www.nytimes.com/2005/06/08/nyregion/08parts.html படியுங்கள்..

இது போல ஒரு இந்தியர் லண்டன் சென்றார்.. அவரும் அவர் சகோதரருமாக இதே போல் சென்றதில் அவர் சகோதரர் குளிர் தாங்காமல் மரணமடைந்தார்.. இவர் தப்பித்து விட்டார்.. மருத்துவர்கள் இவர் எப்படி அவ்வளவு குளிரில் உயிர் தப்பினார் என்று அவரை வைத்து ஆராய்ச்சி செய்தனர்.. இது 1996 ல் நடந்தது.. இப்பொது அவருக்கு இங்கிலாந்து நாட்டில் குடியேறும் உரிமை இல்லை என்று அந்த நாடு அறிவித்து விட்டது..

எத்தனையோ பேர் இப்படி கள்ளத்தோணியில் வந்து நன்றாக வாழவும் செய்கிறார்கள். பாதி ஸ்பானிஷ் மக்கள் அப்படி வந்தவர்கள் தான். "கறுப்பர்களும் செய்யாத வேலைகளை (எடுபிடி வேலைதான்) எங்கள் மக்கள் செய்கிறார்கள், அதனால் தான் அமெரிக்கா கண்டு கொள்வதில்லை" என்று மெக்ஸிகோ நாட்டு அதிபர் கூறி "இனவெறியாளர்" என்று திட்டு வாங்கியது வேறு கதை.

இங்கே ஒரு குஜ்ஜு (குஜராத்தி) நண்பர் இருக்கிரார்.. 22 லட்சம் தந்து, கனடா வழியாக சிகாகோ வந்து ஒரு (டங்கின் டொனட்) கடையில் வேலை செய்கிறார்..

சில நாட்களுக்கு முன் ஒரு சீக்கிய பெண்ணை கைது செய்த போது இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள்.. அவர் 15 வருடஙளுக்கு மேல் இங்கேயே இருந்து மது பானக்கடை நடத்தி வந்தார்.. சிற்றுந்து பழுதடைந்ததற்காக, போலிஸ் உதவியை நாடிய போது, அவர்கள் எதோ தேடப்போய் மாட்டினார்... (நாடு கடத்தி விட்டார்களா என்று தெரியவில்லை)

விஷயத்துக்கு வருவோம்.. இது போல் வேறு நாடுகளில் குடியேற முயற்சிப்பது சரிதான்.. உயிருடன் இருந்தால் தன் குடியுரிமை கிடைக்கும்.. வேறு நல்ல வழி எதும் பார்க்கலாமே..

என்ன வெளிநாட்டு மோகமோ என்று நான் சொல்லக்கூடாது.. ஆனால் வயிற்றுக்காக பிழைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..

அவ்வையார் சொன்னது சரிதான்.. "இடும்பைக்கூர் என் வயிறெ, உன்னொடு வாழ்தலறிது"..

இஸ்லாமும் இந்துமதமும்.. நேர் எதிர் பாதைகள்

சில கருத்துகளுக்கு என் பின்னூட்டம்

//கவனிக்க: இஸ்லாத்தின் பார்வையில் தமிழ் ஒரு நீச மொழியல்ல!)//
எனக்குத் தெரிந்து, கிறிஸ்துவத்தில் தமிழ் வழிபாடு உண்டு.. இந்துக்கள் அவர்கள் விரும்பும் மொழியில் வழிபடலாம். (தமிழ் இலக்கியத்தில் பாதி பக்தி இலக்கியம் தான்.. )

ஆனால் இஸ்லாத்தில் அரபி யில் தான் குரான் ஓதப்படுகிறது என்று நினைக்கிறேன்..

இந்துக்கள் செய்வதை மாற்றிச்செய்வதே இஸ்லாம் என்ற கருத்தும் எனக்கு உண்டு.. இவர்கள் (இந்துக்கள்) மீசை இல்லாமலோ , அல்லது மீசை வைத்தால் தாடி வைத்துக்கொண்டோ இருக்கவேண்டும் என்று சொன்னால்.. இஸ்லாத்தில் மீசைஇல்லமல் தாடி மட்டும் வைக்க சொல்வார்கள்..
இவர்கள் உருவ வழிபாடு செய்தால், அவர்கள் அதை வேண்டாம் என்று சொல்வார்கள்.. இவர்கள் சூரியனை கண்டு பூஜை செய்தால் அவர்கள் நிலவை கண்டு பூஜை செய்வார்கள். இதுபோல் பல விஷயங்கள் உள்ளன
வட மாநிலங்களில் இரவில் திருமணம் செய்வதும், தலையில் சேலை போட்டு மூடுவதும் இஸ்லாமிய வழக்கங்களே. (தில்லித் துருக்கர் வழக்கமடி.. பாரதி இதைப்பற்றி எழுதியது)

என்னுடய நோக்கு அல்லது புரிதல் தவறாகவும் இருக்கலாம். உங்கள் விளக்கங்களை வரவேற்கிறேன்.

அன்புடன் விச்சு

http://kgans.blogspot.com/2005/06/blog-post.html க்கான பின்னூட்டம்

Wednesday, June 08, 2005

அப்படி போடு அருவாள.. வேலியே பயிரை மேய்ந்த கதை

இரண்டு செய்திகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதது

செய்தி 1

சென்னையில் வழிப்பறி: 3 மதுரை போலீசார் கைது!!!
ஜூன் 8, 2005 சென்னை:

சென்னையில் நகைக் கடை ஊழியர்களிடம் வழிப்பறி செய்து ரூ. 4 லட்சத்தை பறிக்க முயன்ற மதுரையைச் சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வேலியே பயிரை மேய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழக போலீசார் திருடர்களைப் பிடிப்பதை விட அவர்கள் திருடி பிடிபடுவது அதிகரித்து வருகிறது.

மதுரை தெற்கு ஆவணி வீதியில் தமிழ்நாடு ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. நகைக்கடை ஊழியர்கள் அசோக்குமார், பாலுச்சாமி ஆகியோர் நகை வாங்குவதற்காக ரூ. 4 லட்சம் பணத்துடன் சென்னை வந்தனர். நேற்றிரவு பூக்கடை பகுதியில் என்.எஸ்.சி போஸ் சாலையில் இவர்கள் நடந்து சென்றனர்.

அப்போது ஒரு ஆட்டோவில் வந்த 2 பேர் இருவரையும் வழி மறித்தனர். அதிலிருந்து இறங்கிய இருவரும், நாங்கள் போலீஸ்காரர்கள், உங்கள் பையை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், பையைத் தர ஊழியர்கள் மறுக்கவே, பணப் பையை இருவரும் பறித்துள்ளனர்.

இதையடுத்து நகைக் கடை ஊழியர்கள் இருவரும் உதவி கேட்டு கத்தவே, அப் பகுதியில் மப்டியில் சென்ற சப்இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சில போலீசார் அங்கு சென்று பையைப் பறித்த நபர்களைப் பிடித்து யானைக்கவுனி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரித்தபோது தான் பையைப் பறித்த இருவரும் மதுரையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் என்று தெரியவந்தது.

இருவரும் மதுரை திருமங்கலம் காவல் நிலையம் மற்றும் திருநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டையாக்கள் என்று தெரியவந்தது. இந்த கேடுகெட்ட காக்கிகளின் பெயர் பன்னீர் செல்வம் மற்றும் பாஸ்கரன்.
இந்த ஏட்டையாக்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வழிப்பறிக்கு உதவி புரிந்த மதுரை ஆயுதப்படை போலீஸ்காரரான மீனாட்சி சுந்தரம் என்பவரும் பிடிபட்டார்.

இவரைத் தவிர மேலும் 6 பேரும் பிடிபட்டுள்ளனர். நகைக்கடையில் இருந்து ஊழியர்கள் பணத்துடன் சென்னை செல்வதை அறிந்து இவர்கள் ஒரு டாடா சுமோவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளனர்.
இதில் மீனாட்சி சுந்தரம் அலுவலக வேலையாக என்று சொல்லி பேட்டா காசு வாங்கிக் கொண்டு மதுரையில் இருந்து கொள்ளையடிக்க சென்னை வந்துள்ளார். இந்த ரிசர்வ் போலீஸ் மீனாட்சி சுந்தரம் வட சென்னை துணை கமிஷ்னர் ஒருவரின் அண்ணன் மகன் என்று தெரியவந்துள்ளது.

செய்தி 2

போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது வழக்கு: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியது. அவர்கள் சென்னையில் அனைத்துக் கட்சியினர் கூட்டத்தினை கூட்டி கருத்து கேட்டனர். விழுப்புரம், சேலம் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் டில்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதை பரிசீலித்த தலைமை தேர்தல் ஆணையர் டாண்டன் தலைமையிலான குழு, போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், புதிய வாக்காளர் சேர்க்கை மனுக்கள் தனித்தனியே பரிசீலிக்கப்படும், தமிழக்த்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வாக்காளர் பட்டியல் ஜூன் 9ல் வழங்கப்படும் கட்சிகள் தங்கள் ஆட்சேபனையை ஜூன் 20க்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது

Tuesday, June 07, 2005

ஒரு உண்மை.. இவர் திருப்பி சொன்னதால் தப்பு

Root cause of advani's problem: This started it all!:-

'We Are All Citizens And Equal Citizens Of One State'
"You are free; you are free to go to your temples, you are free to go to your mosques or to any other place of worship in this State of Pakistan. You may belong to any religion or caste or creed – that has nothing to do with the business of the State."

Mohammad Ali Jinnah, Presidential Address to the Constituent Assembly of Pakistan at Karachi August 11, 1947

அத்வானி சொன்னது என்ன.. எப்படி எல்லாம் வடிவெடுத்து மக்களை அடைகிறது என ஒரு உதாரணம்

1. http://www.iht.com/articles/2005/06/07/news/india.php

India party erupts over praise for a Muslim - headline in International Herald Tribune
(மூஸ்லிம் என்பதா காரணம்)

2. India's Hindu Nationalist Leader Resigns After Praising Pakistan's Founder report in VOA.
(nationalist - தேசியவாதம்)

3. The Shiv Sena today said the country cannot afford "ideological confusion" that has risen due to remarks of LK Advani on Mohammad Ali Jinnah.

(is it ideological confusion? )

4. Advani dishonest to history of freedom struggle: Dasmunshi

(he wanted pakistan to be secular.. where freedom struggle came in this?)

5. In a way, the 77-year-old leader was trying to do what former prime minister Atal Behari Vajpayee has done rather successfully in the past - appealing to the non-Hindu nationalist constituency. BBC

6. Advani's remarks debatable: Uma

7. Protesting BJP chief L K Advani's statements praising Pakistan founder Mohammad Ali Jinnah's secular credentials, Shiv Sena activists here today took out a mock funeral procession of the saffron party leader and later cremated the effigy on the banks of the Ganga.

8. Jinnah was neither secular nor centre of respect in India: Gaur

9.Hindu Leader in India Quits Over Remarks in PakistanNew York Times,

10. Victory of patriotism, says Togadia

11. INDIAN OPPSN LEADER QUITSSpecial Broadcasting Service, Australia

(He did not quit as opposition leader)

12. Hindu nationalist submits resignationInternational Herald Tribune, France

13. JD(U) backs Advani's remarks; refuses comment on resignation

14. Vajpayee backs Advani's statement on Jinnah

15. Nitish 'salutes' Advani for 'courageous' statement on Jinnah

16DJinn(ah) uncorked, storm awaits AdvaniEconomic Times

(business headlines in that too)

17. Advani a traitor, says Togadia

18. Lalu hails Advani's 'change of heart' on Jinnah and Pakistan

19. Advani had only quoted Jinnah, say aides

20. Advani's praise of Jinnah means nothing: Basu

21. Ms Sumitra Gandhi Kulkarni, granddaughter of Mahatma Gandhi and former member of Rajya Sabha, today said the controversy over BJP president L K Advani's remarks about Jinnah during his current visit to Pakistan, is uncalled for.

22.Pak says Advani's remarks on Jinnah gave him "new look" there

23. Pakistan is 'stunned' by Advani's resignation

24. பாஜக தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலகியிருப்பது அது அக்கட்சியின் உள்விவகாரம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி கூறுகையில், அத்வானி பதவி விலகல் பாஜகவின் உட்கட்சி விவகாரம் ஆகும்.
பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜகவின் இமேஜை மாற்றுவதற்காகத் தான் அத்வானி பாகிஸ்தானில் வைத்து இவ்வாறு கூறியுள்ளார். முன்பு வாஜ்பாய் இந்த முகமூடியை அணிந்திருந்தார். இப்போது அவரது வேலையை அத்வானி செய்கிறார், அவ்வளவு தான் வித்தியாசம் என்றார்.


இறுதியாக
25. மதவாத கருத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டு, மதசார்பற்றவர்களைப் போல நடித்துக் கொண்டு, ஜின்னா வாழ்க, அண்ணா வாழ்க என்று கூறிக் கொண்டிருப்பதை எவ்வளவு காலத்துக்கு மக்கள் நம்பி ஏமாறப் போகிறார்கள் என்பது தான் நம் முன் நிற்கிற கேள்வி. மு.கருணாநிதி (சொல்லாதது: இரண்டு வருடம் முன்பு வரை மதவாத கருத்துக்களை அத்வானி நினைத்தது கூடக்கிடையாது..) (அண்ணா வாழ்க என்று நானும் (கருணாநிதியும்) சொல்வதால் இந்த கருத்து எனக்கும் பொருந்தும்.)

அப்படி போடு அருவாள.. அங்கீகாரம் தேவையாம் அரவாணியாக..

அரவாணிகள் கொண்டாடும் பால் ஊற்றும் திருவிழா!

சென்னை : ஆணாக இருந்தவர் அறுவை சிகிச்சை செய்து அரவாணியாக மாறியதை அங்கீகரிக்கும் பால் ஊற்றும் திருவிழா சென்னையில் விடிய விடிய கோலாகலமாக நடைபெற்றது.

பெற்ற மகள் பூப்பெய்தியதும், நாள் குறித்து, பத்திரிகை அச்சடித்து உற்றார் உறவினர்களுக்கு வினியோகித்து தங்கள் சமுதாயத்திற்கு தெரிவிக்கும் வகையில் மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல் ஆண் ஒருவர் அறுவை சிகிச்சையின் மூலம் அரவாணியாக மாறும்போது, அதை அரவாணிகளின் சமூகத்திற்கு அறிவிக்கும் வகையில் பால் ஊற்றும் திருவிழாவாக அரவாணிகள் கொண்டாடுகின்றனர்.

இந்த வினோத திருவிழா சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தத்தெடுத்த மகள்கள் சத்யா, வித்யாவுக்கு தாய் ஸ்தானத்தில் இருந்து அருணா என்ற அரவாணிபால் ஊற்றும் திருவிழாவை நடத்தினார். இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக அரவாணிகளின் உற்றார் உறவினர்களுக்கு பத்திரிகை அச்சடித்து வினியோகிக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் தத்தெடுத்த மகள்களை மேடையில்அமர வைக்கின்றனர். உற்றார் உறவினர்கள் ஒன்று கூடி நலங்கு (மஞ்சள், மருதாணி, சீயக்காய், எண்ணெய்) வைத்துவிட்டு வரும் அரவாணிகள் ஆரத்தி எடுத்து மொய் பணம் வைக்கின்றனர். இந்த விழா மூலம் சத்யா, வித்யா அரவாணிகளாக அங்கீகரிக்கப் படுகின்றனர்.

பின்னர் அரவாணிகள் தங்களது கவலைகளை மறந்து விடிய விடிய ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடுகின்றனர். விடியற்காலையில் தத்தெடுக்கப்பட்ட மகள்களை நீராட்டுகின்றனர். கடந்த நாற்பது நாட்களாக நகைகள் கூட அணியாமல் இருந்த அவர்களுக்கு வண்ண வண்ண சேலைகள் கட்டியும், நகைகள் மற்றும் மலர்களால் ஜடை தைத்து அலங்கரிக்கின்றனர்.
அதன் பின்னர் அரவாணிகள் மாத்தா (காளி) பூஜை செய்து படையல் போடுகின்றனர். மாத்தாவை வணங்கி, தத்தெடுத்த மகள்கள் பால் குடங்கள் சுமந்து வர, அவர்களை சூழ்ந்துகொண்டு அரவாணிகள் மாத்தா பற்றிய பாடல்களை பாடி அழைத்து செல்கின்றனர். சூரிய உதயத்திற்கு முன்பு கடற்கரையில் கடல் தாய்க்கு கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர்.

தலையில் சுமக்கும் குடத்தில் எடுத்து வந்த பாலை கடலில் ஊற்றி விட்டு, கடல் தண்ணீரை எடுத்துக் கொள்கின்றனர். திரும்பி பார்க்காமல் வந்ததும் மாத்தாவை வணங்கிவிட்டு, தங்களுக்கு பிடித்த பெண் சாயலில் இருக்கும் அரவாணிகளின் முகத்தை பார்த்து கண்ணை திறக்கின்றனர்.

அதன் பிறகு தத்தெடுத்த மகள்கள் முழு அரவாணிகளாக சுதந்திரமாக நகரில் உலா வரலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மலேஷியா, மும்பை, புனே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் அரவாணிகள் ஏராளமாக வந்திருந்தனர்.

ஜாதி இல்லை; மதமும் இல்லை : அரவாணிகளுக்கு வசிக்க நிரந்தர வீடுகள் இல்லாததால் நாடோடி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜாதி, மதம் என்பது கிடையாது. அரவாணிகளில் அனைத்து மதத்தவர்களும் உள்ளனர். இவர்களுக்கு குறிப்பிடும் படியான விழா அரவாணிகளாக அங்கீகரிக்கப்படும் பால் ஊற்றும் திருவிழா மட்டும்தான்.

இந்த விழாவில் நாடோடியாக சுற்றித் திரியும் அரவாணிகள் ஒன்று கூடுகின்றனர். சமுதாயத்தில் அனுபவிக்கும் துன்பங்களை எல்லாம் மறந்து தங்கள் உறவினர்களை சந்திக்கும்போது ஏற்படும் சந்தோஷம் அளவிடற்கரியது. அப்போது, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். அதன் பிறகு மீண்டும் நாடோடி வாழ்க்கையை தொடர்கின்றனர்.

(இதுல என்னமோ இருக்கு.. இல்லன்னா யாராவது மாறுவாங்களா?)

"பயணச் சலுகை... ஓய்வூதியம்...' அரசுக்கு அரவாணிகள் கோரிக்கை :பால் ஊற்றும் விழாவில் அரவாணியாக அங்கீகரிக்கப்பட்ட வித்யா கூறுகையில்,"எனது சொந்த ஊர் திருச்சி. பெற்றோர் என்னை வெறுக்கவில்லை. குடும்பத்துடன் வசித்து வந்தபோதே டிகிரி முடித்து, கருத்து கணிப்பு குறித்த பணியில் ஈடுபட்டேன். அப்போதும் பேன்ட், சட்டை அணிந்து தான் செல்வேன். பி.எச்.டி., படிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அதில் முழு ஈடுபாடு இல்லை. அரவாணியாக அங்கீகரித்த பிறகு பி.எச்.டி., படிக்க ஆர்வமாக உள்ளேன்' என்றார்.

செங்கல்பட்டை சேர்ந்த சுடர் பவுண்டேஷனை நிர்வகிக்கும் பிரியா பாபு (அரவாணி) கூறியதாவது:

கண்ணாடி கலைக் கூடம் சார்பில் அரவாணிகள் சமுதாயத்தில் எங்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களை விளக்கும் வகையில் "மனசின் அழைப்பு' நாடகத்தை அரசு உயரதிகாரிகள் முன்பு நடத்தி காட்டினோம். அதன் பிறகு தான் எங்களுடைய நிதர்சனத்தை புரிந்து கொண்டு உதவ முன்வந்தனர். மும்பை, கடப்பா ஆகிய பகுதிகளில் அரவாணிகளுக்கு டாக்டர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மார்பகம் பெரிதாவதற்காக மாத்திரை உட்கொள்கிறோம். இவை சட்டவிரோதமாக செய்யப்படும்போது சில சமயம் சிறுநீர் வெளியேறுவதில் பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது.

அரவாணிகளுக்கு அரசு பொது மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். எங்களை போலீசார் பிடிக்கும்போது ஆண்கள் அல்லது பெண்கள் சிறையில் வைக்க முடியாமல் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்கின்றனர். சமுதாயத்தில் நாங்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாகிறோம். இதனால், மனரீதியாக பாதிக்கப்படுகிறோம். இதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரியா பாபு கூறினார்.

அரவாணி தனம் கூறுகையில்,"எம்.ஏ., வரலாறு படித்துவிட்டு, என்.ஜி.ஓ., நிறுவனத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் நான், எனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். 2007ம் ஆண்டில் எய்ட்ஸ் இல்லாத உலகம் படைக்க பாடுபட்டு வருகிறோம். என்னை யாராவது கிண்டல் செய்தால் அவர்களின் வழியிலேயே சென்று அவர்களை திருத்த முயற்சிப்பேன்' என்றார்.

அரவாணிகள் அரசுக்கு முன் வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள்:
தமிழகம் முழுவதும் அரவாணிகளுக்கென்று வீடுகளை ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.

அரவாணிகளை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் பெண் மற்றும் ஆண் அரவாணிகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எல்லாருக்கும் இடஒதுக்கீடு செய்வதுபோல் அரவாணிகளுக்கும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மூத்த குடிமகன்கள் ரயில், பஸ்களில் சலுகைகள் வழங்குவதுபோல் அரவாணிகளுக்கும் 40 வயதுக்குமேல் சலுகைகள் வழங்க வேண்டும். அரவாணிகளுக்கு வாழ்நாளின் இறுதி கட்டத்தை கழிக்க ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு ஆணை பிறப்பித்தால் சமூகத்திலும் அங்கீகாரம் கிடைப்பதோடு, பாதுகாப்புடன் வாழமுடியும் என்று அரவாணிகள் தெரிவித்தனர்.

(இன்னும் பெண்களுக்கே இதுல பாதி சமாசாரம் கிடைக்க மாட்டேங்குது.. ஒரு நூறு வருஷம் ஆகும்...)

தேர்வுகள் உண்டா இல்லையா?

இரண்டு தொடர்பில்லாத (நேர் எதிரான) செய்திகள்

செய்தி 1:

தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து!:
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 'சீட்'!!
ஜூன் 6, 2005

http://thatstamil.indiainfo.com/news/2005/06/06/mbbs.html

சென்னை:

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டு முதல் (20052006) பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. பிளஸ்2 தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.

மேலும் பிளஸ் டூ இம்ப்ரூவ்மெண்ட் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:

பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான கல்லூரிகளில் இடங்கள் குறைவாக இருந்த நேரத்தில், ஏராளமான மாணவர்கள் அதில் சேர விண்ணப்பித்ததால் கடந்த 1984ம் ஆண்டில் நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. அதே நேரத்தில் மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகளுக்கு இன்னும் கூடுதல் இடங்கள் தேவைப்படுகின்றன.

இந்த விஷயத்தில் அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும்.

இப்போதுள்ள பொது நுழைவுத் தேர்வு முறை பொற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரும் மனச் சோர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நுழைவுத் தேர்வு முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளால் பாதிக்கப்பட்டு தொழில் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். பிளஸ் 2 படித்து முடித்தவுடனேயே தொழில் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக தங்களை மிகக் கடுமையாக தயார் படுத்த வேண்டிய சூழல் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.

இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் மன உளைச்சலைத் தருகிறது.

அனைத்து மாணவர்களின் நலன் கருதியும், குறிப்பாக கிராமப் புற மாணவர்களின் நலன் கருதி இந்த நுழைவுத் தேர்வு முறையில் உடனடியாக மாற்றம் தேவை என உணர்கிறேன்.

இந்தக் கல்வி ஆண்டு முதலே (20052006) முதலே இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன்படி பிளஸ்2 தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவார்கள். புதிதாகவும் மாணவ, மாணவிகள் விண்ணிப்பிக்கலாம். இதற்கான கால நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும்.

பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூலை மாத தொடக்கத்தில் கவுன்சிலிங் நடக்கும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தொழில் கல்லூரிகளில் சேர தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த புதிய திட்டம் பிஇ, பிடெக், பி.ஆர்க் மற்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், விவசாயம், வெட்னரி சயின்ஸ், சட்டம் ஆகிய படிப்புகளுக்கு பொருந்தும்.

வெறும் பிளஸ் டூ மார்க் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். வேறு எந்த வகையிலும் நுழைவுத் தேர்வு முறை கிடையாது. அதிக மதிப்பெண்கள் பெற்று இந்தப் படிப்புகளில் சேர தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிங்கிள் வின்டோ முறையில் கலந்தாய்வு நடத்தி படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

நுழைவுத் தேர்வு ரத்தாவதால், பிளஸ் டூவில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு ரத்தாகிறது. இந்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி 2.

No more board exams! http://in.rediff.com/getahead/2005/jun/02exam.htm

June 02, 2005


Good news for students. You may no longer need to appear for board examinations!

With exam-related stress primarily in view, the National Curriculum Framework Report 2005 has some novel suggestions:

Make Class X board tests optional
De-linking school leaving board examinations from entrance tests
A single nodal agency to conduct entrance examinations
Under no circumstances should board or other examinations be conducted at the Class V, VIII or XI levels.
What is more: the Class X examination can be made optional only for those who want to continue to Class XI.

Other students could receive a certificate from the school, according to the National Council of Education Research and Training, which drew up the draft after a nine-month exercise.

More on the draft:

1. The advantage of de-linking school leaving board examinations from competitive entrance examinations would mean that students would be less stressed if they could take fewer examinations.

2. The stress on pre-board examinations must be reversed.

3. Strategies to enable children to opt for different levels of attainment should be encouraged to overcome the present system of generalised classification into 'pass' and 'fail' categories.

4. Since learning has become a source of burden on children, the draft proposed four guiding principles for curriculum development:

Connecting knowledge to life outside school
Ensuring that learning shifts away from having to mug textbooks
Enriching the curriculum so that it goes beyond textbooks
Making examinations more flexible
5. A single nodal agency could coordinate the design and conduct the examinations several times a year at centres
located all over the country, monitor and ensure timely conduct and release of students' achievements.

6. All institutions can access the students' scores through this national testing service for admissions.

7. Since examination reforms are important to reduce psychological pressure, particularly on children in Class X and XII, the questions could be changed so that reasoning and creative abilities replace rote learning as the basis of evaluation.

The NCF has also recommended significant changes in school curriculum with a view to making education more relevant to the present day and future needs and to alleviate the stress children are coping with today:

i. Subject boundaries could be softened so that children could get a taste of integrated knowledge.

ii. Students should have many textbooks and material which incorporate local knowledge and traditional skills.

iii. Children must have a stimulating school environment responding to their home and community environments.

iv. There must be a renewed attempt to implement the three-language formula. The child's mother tongue, including tribal languages, must be emphasised as the best medium of instruction.

This draft will be presented for consideration at the Central Advisory Board of Education on June 7.

Sunday, June 05, 2005

நக்கல் - 2.நக்மாவில் தொடங்கியது?

பாவம் காங்குலி.. அவர் பிரசினைகள் முடிகிற மாதிரி தெரியவில்லை..

டாடா இன்டிகாம் விளம்பரம் பாருங்கள்.


http://img3.picsplace.to/img3/2271/ganguli.PNG

Saturday, June 04, 2005

சந்திரமுகி - ஒரு கண்ணீர் கதை

ரஜினி அப்படி விடமட்டாரே..

இந்த கலைஞன் கண்ணீர் கதை அவர் வரை போக வில்லையா..

சம்பாதித்த பல கோடி களில் சில லட்சங்கள் இவருக்கு தரக்கூடாதா..

கூடிய விரைவில் செய்தி வரும் என்று எதிர்பார்ப்போம்.

****************************************


சந்திரமுகி - ஒரு கண்ணீர் கதை

மதுமுட்டம். இந்தப் பெயரைச் சொன்னால் நம்மில் பலருக்கு யாரென்று தெரியாது. சந்திரமுகியின் ஒரிஜினல் கதாசிரியர் இவர்தான். இவர் எழுதிய ‘மணிச்சித்திரதாழ்’ மலையாளத்தில் சக்கைப் போடு போட, அதை கன்னடத்தில் ‘ஆப்த மித்ரா’வாக மாற்றினார்கள். தமிழில் ‘சந்திரமுகி’. இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட். நிறைய பணம் சம்பாதித்துக் கொடுத்தன. ஆனால் ஒரிஜினல் கதாசிரியர் மதுமுட்டமின் நிலை...? வாருங்கள் சந்திப்போம்.

கேரளா ஆலப்புழாவில் ஒரு சிறிய வாடகை வீடு. சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த மதுமுட்டமிற்கு சகோதர, சகோதரிகள் கிடையாது. கதை எழுதும் ஆர்வத்தால் திருமணம் செய்துகொள்ளாமல் தானே சமைத்து அக்மார்க் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வருகிறார்.

உங்களுடைய ‘மணிசித்திரதாழ்’தான் ‘ஆப்தமித்ரா’, ‘சந்திரமுகி’ என்று உருமாறியது உங்களுக்குத் தெரியுமா?

‘‘என்னுடைய ‘மணிசித்திர தாழ்’ கதையை தழுவித்தான் ‘ஆப்த மித்ரா’ கன்னடப் படத்தை எடுத்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்த சமயம், மோகன்லால் என்னிடம், ‘சௌந்தர்யா கடைசியாக நடித்து வந்தது மணிசித்திரதாழின் ரீமேக்கில்’ என்று சொன்னபோது என் தலையில் இடி இறங்கியதுபோன்று இருந்தது. மணிசித்திரதாழை தழுவி எடுத்திருக்கிறார்களா என்று அப்போதுதான் அதிர்ச்சி அடைந்தேன்! எனக்கு அதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாருமே அதற்குமுன் சொல்லவில்லை.’’

‘ஆப்த மித்ரா’ உங்க கதை என்று தெரிந்ததும் என்ன செய்தீர்கள்?

‘‘மணிசித்திரதாழின் தயாரிப்பாளரான நவோதயா அப்பச்சன், அந்தக் கதைக்கான உரிமையை விற்று விட்டார். இது பற்றி தெரிந்த இயக்குநர் பாசில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடவே, அப்பச்சன் அதற்கு ஈடாக ஒரு தொகையைத் தந்து பாசிலைச் சமாதானப்படுத்தி விட்டார். இதெல்லாம் எனக்கு பின்னர்தான் தெரிந்தது. இந்த விஷயத்தை அப்பச்சனும்என்னிடம் சொல்லவில்லை. பாசிலும் சொல்லவில்லை.’’

சந்திரமுகி கதையும் உங்களுடைய கதைதான் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?

‘‘‘ஆப்த மித்ரா’ திரைப்படம் ஏகப்பட்ட லாபத்தை வாரிக் கொடுத்தது. அதை இயக்கிய பி.வாசு தமிழில் ‘சந்திரமுகி’ படத்தை எடுத்து வந்த போது, ‘குமுதம்’ இதழில் ‘பழைய கதையை தூசி தட்டி சம்பாதித்தார்கள்’ என்று செய்தி வந்தது. அதைப் படித்து விட்டு என் நண்பர்கள் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்கள்.

உடனே நான் இயக்குநர் பாசிலைக் கேட்டபோது, பாசில் என் வீடு தேடி வந்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், நான் அவரைப் பார்த்து, ‘எனக்குத் துரோகம் இழைத்து விட்டீர்கள்’ என்று சத்தம் போட்டு அவரை அனுப்பிவிட்டேன்.

உங்கள் குழந்தையை அடுத்தவர்கள் தட்டிப் பறித்துக்கொண்டு, ‘குழந்தை எங்களுடையது’ என்றால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அந்த நிலையில்தான் நானும் உள்ளேன்! இது பற்றி அதிகமாகப் பேச இயலாது. ஏனென்றால் இப்போது நான் நீதி மன்றத்தில் இதற்காக வழக்குத் தொடுத்துள்ளேன்.’’

சரி, உங்களின் ‘மணிச்சித்திரதாழ்’ கதை மூன்று மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. கதை உருவானது எப்படி?

‘‘திருச்சூர் பக்கம் ‘சாந்தன் கதைகள்’ என்று பேய்க் கதைகள் சொல்லப்படுவதுண்டு. என்னுடைய அம்மா இந்தக் கதைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதைகள் எல்லாம் என் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அவற்றின் தாக்கம்தான் ‘மணிச்சித்திரதாழ்’. கிட்டத்தட்ட மூணு வருஷமாகியது அந்தக் கதையை உருவாக்க. ரசிச்சு ரசிச்சு செஞ்சேன்.

மணி சித்திரதாழ் கதையில் சந்திரமுகி ரோலின் பெயர் ‘நாகவல்லி’. தஞ்சாவூரில் நடன மங்கையாக இருக்கும் நாகவல்லியை ஒரு நிகழ்ச்சியில் பார்த்த சங்கரன் தம்பி (இவர்தான் ராஜா) வலுக்கட்டாயமாக நாகவல்லியை கடத்தி வந்து வைப்பாட்டியாக்கிவிடுகிறார்.

நாகவல்லி தன்னுடைய காதலன் ராமநாதனை தன் மாளிகைக்கு அருகிலேயே குடி வைத்து விடுகிறார். இதைக் கண்டு பிடித்து சங்கரன் தம்பி, காதலனையும், நாகவல்லியையும் கொன்று விடுகிறார். (கதையை சொல்லும்போதே மதுமுட்டம் அழத் துவங்குகிறார்) அந்தக் கதை என் உயிரில் கலந்துவிட்டது.’’

சந்திரமுகி படம் பார்த்தீர்களா?

‘‘சங்கனாச்சேரியில் படம் பார்த்தேன். சந்திரமுகியில் தொடக்கத்திலிருந்தே ரஜினி வருகிறார். அவரை மையப்படுத்தியே படம் எடுத்துள்ளார்கள். ஆனால் மணிச்சித்திரதாழில் இந்த ரோலை செய்த மோகன்லால் படம் தொடங்கி அரை மணி நேரம் கழித்து தான் வருவார். பிரபு கேரக்டரில் சுரேஷ் கோபியும், ஜோதிகா ரோலில் ஷோபனாவும் நடித்திருந்தார்கள். ஷோபனா நிஜமாகவே பயமுறுத்தியிருந்தார். அதற்காக அவருக்கு அவார்டு கிடைத்தது.

எது எப்படியோ என்னுடைய கதை பலருக்கு வாழ்வு தந்துள்ளது. நிறையப் பேர் இதனால் பலனடைந்து விட்டு என்னை மட்டும் மூலையில் தள்ளி விட்டார்கள்’’ என்று சொல்லும்போது மதுமுட்டத்தின் கண்கள் மீண்டும் கலங்குகின்றன.

அவர் கண்ணீரைத் திரையுலகத்தினர் துடைப்பார்களா?

நன்றி குமுதம்

அன்புடன் விச்சு

தருமபுரி எங்கே இருக்கிறது?

இரண்டு செய்திகளைப் படித்ததும், ஒரு கேள்வி மனதில் வந்தது. யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

அன்புடன்

விச்சு

செய்தி 1.


தண்டனை வழங்குவதில் தமிழகம் சாதனை: ஜெ
ஜூன் 3, 2005
சென்னை:
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தமிழக காவல் துறை சாதனை படைத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் நிம்மதிக்கும் அடிப்படையாக இருப்பது அமைதியான சூழ்நிலையே ஆகும். அத்தகைய அமைதியான சூழலை உருவாக்கிட அடித்தளமாக அமைவது காவல் துறைப் பணியே. எனவே தான் எனது தலைமையிலான அரசு காவல்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் தான் தமிழ்நாடு காவல்துறை உற்சாகத்துடன் செயல்பட்டு குற்ற எண்ணிக்கையை குறைத்து குற்றங்களை கண்டுபிடிக்கும் சதவீதத்தை உயர்த்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தருவதில் சாதனை படைத்து வருகிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 17 நாட்களுக்குள் ஒரு கொலை வழக்கிலும், 16 நாட்களுக்குள் மற்றொரு கொலை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்து தமிழ்நாடு காவல் துறை சாதனை படைத்துள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற அடிப்படையில் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும், குற்றம் செய்தவர்கள் அதற்குரிய தண்டனையை விரைந்து பெற்றிட வேண்டும் என்பது தான் எனது அரசின் எண்ணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தி 2.

தர்மபுரி மாணவிகள் எரிப்பு வழக்கு: அரசுக்கு நீதிபதி மீண்டும் 'டோஸ்'
சென்னை:
தர்மபுரியில் 3 கல்லூரி மாணவிகள் அதிமுகவினரால் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு அலட்சியமாக நடந்து கொள்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தøத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்¬றையில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. 31 அதிமுகவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விசாரணை 'உல்டா புல்டா' ஆனது.
ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக விசாரணை நடந்து வருவதாக கூறி இறந்த மாணவிகளில் ஒருவரான கோகில வாணியின் தந்தை வீராசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ் கடந்த 2003ம் ஆண்டு, வழக்கை சேலம் விரைவு நீதிமன்றதிதற்கு மாற்றி உத்தரவிட்டார். அங்கும் இந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.
காரணம், இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு தமிழக அரசு இரண்டு வருடமாகியும் இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே தரவில்லை.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் கோகிலவாணியின் தந்தø வீராசாமி அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கனகராஜ், விசாரணையை தாமதப்படுத்தி வருவதற்காக தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், பஸ் எரிப்பு வழக்கு தொடர்பான முக்கிய ஆவண கட்டுகள் தொலைந்து போய் விட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனால் கோபமடைந்த நீதிபதி, இந்த வழக்கின் ஆவணங்களை 3 நாட்களுக்குள் போலீசார் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இந்த மனு மீது இன்றும் நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தினார். அப்போது, மிகவும் முக்கியமான இந்த வழக்கை அரசுத் தரப்பு இவ்வளவு அலட்சியமாகவும், அக்கறையில்லாமலும் நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நாளிலிருந்து இன்று வரை வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு விசாரணையை காலதாமதம் செய்ததற்கான காரணங்கள் ஆகியவற்றை அறிக்கையாக, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட நாளிலிருந்து இன்று வரை அந்தந்த காலகட்டத்தில் உள்துறை செயலாளர்களாக இருந்தவர்கள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி கனகராஜ், வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

Friday, June 03, 2005

அறிவு சார் கழகம்.

இது புதிய கட்சியா? யார் தலைவர்? சினிமா காரர்கள் இருக்கிறார்களா.. அறிக்கை தயார் செய்யலாமா?


பொறுங்கள்..


பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ள புதிய அமைப்பு.. CDOT மூலம் இந்திய தொலைபேசி நிறுவனங்களை உலக தரமாக்குவேன் என்று கூறி அப்படியே செய்து காட்டிய சாம் பிட்ரோடா தலைமையில் இது அமைக்கப்படுகிறது.

நம் நாட்டின் அறிவியல், கல்வி மற்றும் தொடர்புடய பகுதிகளில் (அறிவுசார் பகுதிகளில்), என்ன தேவைகள் வாய்ப்புகள் என்று அறிய இது அமைக்கப்படுகிறது. அக்டோபரில் முதல் அறிக்கையும் 2008ல் இறுதி அறிக்கையும் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

(அது வரை பாஜக குதிரை விற்று ஆட்சியை மாற்றாமல் இருந்தால் என்பது நம் இடை சொருகல்.)

http://sify.com/finance/fullstory.php?id=13815820

அன்புடன்
விச்சு

வாபஸ் வாங்கும் காலம்.

அம்மா வாபஸ் வாங்கி முடித்து விட்டார்.. இப்பொது அன்னையின் காலம்.. நடை மேடை சீட்டு விலை அதிகரிப்பு வாபஸ்.. பெட்ரோல் விலையில் வாபஸ் உண்டா?





ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு "திடீர்' வாபஸ்!
சென்னை: ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே திடீரென வாபஸ் பெறப்பட்டது. பிளாட்பார டிக்கெட்டுக்கு வழக்கம்போல் மூன்று ரூபாய் கட்டணமே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்கள், தொலைதூர பயணிகளை வழியனுப்பி வைப்பவர்கள் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்கான கட்டணம் மூன்று ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ரயில் நிலையங்களுக்கு வருபவர்கள் டிக்கெட் மிஷின் மூலமாகவும், நீண்ட வரிசையில் நின்று கவுன்ட்டர்களிலும் பிளாட்பார டிக்கெட்டைப் பெற்று வந்தனர். இந்த டிக்கெட் மூன்று மணி நேரம் மட்டுமே செல்லத்தக்கது.

மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், பிளாட்பார டிக்கெட் கட்டணம் ஐந்து ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு நேற்று முன்தினம் (ஜூன் 1 ) அமலுக்கு வந்தது. இந்த டிக்கெட் கட்டண உயர்வுக்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், கட்டண உயர்வு அமலுக்கு வந்து இரண்டாவது நாளான நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. வழக்கம்போல் பிளாட்பார டிக்கெட் கட்டணம் மூன்று ரூபாயாகவே இருக்கும் எனவும், இந்த கட்டண முறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிளாட்பார கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வால் கூட்ட நெரிசல் குறைவதுடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று நம்பப்பட்டது. எனினும், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- நன்றி தினமலர்.

அன்புடன்

விச்சு

ரோஜா ரோஜா

சென்ற வலைப்பதிவில் இணைய இணைப்பு தர மறந்து விட்டேன்..

முதல் பத்து படஙளில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் இதோ.

http://www.time.com/time/2005/100movies/0,23220,soundtracks,00.html

நல்லதாக நாலு வார்த்தை எழுதி இருக்கிறார்கள். இந்தி படப்பாடலைப்பற்றித்தான் எழுதி இருக்கிறார்கள்.. இருந்தாலும் என்ன.. நம்ம ரகுமான் தானே.. (சமீபத்தில் தமிழ்பக்கம் யாரும் பார்த்தீங்களா?)

( மொழி பெயர்க்க நேரமில்லாததால், அப்படியே ஆங்கிலத்தில்..)

Roja:Though he is renowned as the preeminent composer of modern Bollywood, A.R. Rahman was born and still works in Madras, 1,000 miles south of Bombay. His Tamil compatriot, the writer-director Mani Ratnam, yanked him out of jingle-writing to compose his first full score for Roja (The Rose) the tale of a woman whose lover is kidnapped by terrorists. Through this grim political parable, Rahman laced some spectacular melodies that not only serve the drama, they create their own[EM]as in the duet ballads "Yeh Haseen Vadiyan" and "Roja Jaaneman," which first are grounded in recitative, then suddenly ascend into celestial melody. This astonishing debut work parades Rahman's gift for alchemizing outside influences until they are totally Tamil, totally Rahman. He plays with reggae and jungle rhythms, fiddles with Broadway-style orchestrations, runs cool variations on Morricone's scores for Italian westerns.


பின்னோட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அன்புடன்

விச்சு..

தமிழா தமிழா நாளை உன் நாளே

A.R. ரகுமானின் முதல் படமான "ரோஜா" உலகில் தலை சிறந்த இசை அமைந்த படங்களில் ஒன்றாக TIMES பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

இதே படத்துக்காக இந்தியா அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருது அவருக்கு கிடைத்தது நினைவிருக்கலாம்.

மனி ரத்தினத்திற்கு மீண்டும் ஒரு சிறப்பு.. முன்னர் நாயகன் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தளபதி படத்திலிருந்து "ராக்கம்மா கையை தட்டு" சிறந்த பாடலாக BBC யில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

"தமிழா தமிழா நாளை உன் நாளே" என்று வைரமுத்து எழுதிய பாடல் இந்த படத்தில் தான் அமைந்திருக்கிறது.

பாராட்டுக்கள்.

அன்புடன்

விச்சு

Thursday, June 02, 2005

தமிழ்ச் சான்றோர்?

சான்றோர் என்பார் யாவர்.. இதற்கு முன் எழுதிய வலைப்பதிவை மீண்டும் படிக்கையில் வந்த சந்தேகம் இது.

கள்ளுண்போர் சான்றோர் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் என்று வருகிறது. அப்படியானால் சான்றோர் கள்ளுண்ணாதவராயிருக்க வேண்டும். அல்லது நல்லொழுக்கம் மிகுந்தவராயிருக்க வேண்டும் எனக்கொள்ளலாம்.

தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவப்பாள் என்று படித்த போது மற்றவர்களால் போற்றப் படுதல் மற்றொரு தகுதியாக தெரிகிறது.

சரி இன்றைய தினம் அப்படி போற்றுதலுக்குடையவராகவும், நல்லொழுக்கம் மிகுந்தவராகவும் உள்ள தமிழர்களை தேடினேன்.

இரு தார மணம் அல்லது பிறன் மனை நோக்கார், கள்ளுண்ணாதார், உத்தமர் என்று யாரும் தென் படவில்லை.. அரசியல் வாதிகள் பலர் பேசுவது மட்டுமே கொள்கை, கடைபிடிப்பது இல்லை என்பது போல் தென் பட்டது.. திரைப்படக் கலைஞர்கள் சிலர் தேறினார்கள்.. ஆனால் சான்றோன் என்று கூற நல்லொழுக்கம் மட்டுமன்றி மக்கள் சேவையும் தேவைப்படுவதாகத் தோன்றியது..

இலக்கிய கர்த்தாக்கள் பலரது தனிப்பட்ட வாழ்க்கை தெரியாதது. அப்படி தெரிந்தவர்கள் எதோ ஒரு காரணதில் அடி பட்டுப்போனார்கள்.. மதத் தலைவர்கள் .. அவர்களும் அதே நிலையில் தான் தென்பட்டார்கள்..

தவறுகளும் குற்றங்களும் செய்தால் பரவாயில்லை.. குறைந்த அளவு தவறு செய்தவர்கள் நல்லவர்கள்.. ஊரில் வசிக்கலாம்.. பெரிய குற்றங்கள் செய்து பிடிபட்டால் (இது தான் முக்கியமானது) சிறைக்குச் செல்ல வேண்டும் போல..

என்னடா இது.. தமிழகத்தில் சான்றோர் எனக்கூற யாருக்குமே தகுதி இல்லையா? இப்போது தான் விளங்கியது ஏன் மக்கள் குறள் வழி நடக்க வில்லை என்று.. தலைமையேற்றுச்செல்ல யாருமே இல்லாததால் ஆடுகள் வழி தவறிப்போய் விட்டனவா?

யாருக்குத் தெரியும்? உங்களுக்குத் தெரிந்தால் எழுதுஙகள்..

அன்புடன்

விச்சு

அப்துல் கலாம் என்று ஒரு மனிதர் இருக்கிறார் என்று தோன்றியது. சாமிக்கண்ணு (kanchifilms) என்று ஒரு பேர் நேற்று படித்தேன் (பிரபலர் இல்லவிடினும்..) ஓரு சில பெயர்கள் மனதில் வருகிறது.. ஆனால் எந்த புற்றில் எந்தப்பாம்பொ என்ற பயமும் வருகிறது.. என்ன ஒரு நம்பிக்கையான சமூகம் பார்த்தீர்களா..