Saturday, May 09, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 3

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

மூன்றாம் பாடல்: 

நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர்  நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இது என்னப்
பேர்பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

அருஞ்சொற்பொருள் :

நீர் - கங்கை, நிமிர்புன்சடை - நிறைந்த சுருண்டு நீண்ட சடை ஓர் நிலா வெண்மதி - பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை. சோர - நழுவ,  பேர் - புகழ்.

பொருள்  :

கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரே இனமான  சங்குகளால் செய்யப்பட்ட  வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ எனக்குப் பாலூட்டியவன்.

கங்கையை பகீரதன் மேலுலகத்திருந்து பூமிக்கு கொண்டு வரும் போது, கங்கையின் வேகத்தை பூமி தாளாது என்பதால், சிவனாரிடம் வேண்டிய அவர் தான் சடையில் தாங்கி வேகம் குறைத்து பூமியில் விட்டார் என்பது புராணம்.

சடை மேல் மதியைச் சூடிய அழகு கண்டு விரகமிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். இது நாயகி பாவம் எனப்படும்.

மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீர்காழி என்பது.

முதல் ஊர் எனப்படும் சீர்காழியின் பெருமை இங்கே.

No comments: