Sunday, May 17, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம், பாடல் 11.

முதல் திருமுறை, முதல் பதிகம், பதினொன்றாவது பாடல்:

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய    
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை    
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த    
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே.    


அருஞ்சொற்பொருள்:

 அலர்=மலர், இங்கே தாமரை மலரைக் குறிக்கும்;
அருநெறி=அருமையான நெறி.

அருநெறியமறை வல்லமுனி - அருமையான நெறி களை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். 
ஒருநெறியமனம் - ஒன்றுபட்ட மனம். 
மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள்.  
திரு நெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். 

தொல் வினை - பழமையாகிய வினை; "போய  பிழையும் புகுதருவான் நின்றனவும் " என்று ஆண்டாள் சொன்னது போல ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக கூடிய  பிராரத்த சேடத்தையும். பழ வினைகள்  தீரினும் பிராரத்த சேடம் அனுபவித்தே தீர  வேண்டியதாக உள்ளதால், நான் அனுபவிக்கிறேன்  என்ற எண்ணமின்றிக் கழிக்கப்படும்  என்பதால் பழ வினை களைதலே இப்பாடலின் பலனாய் கொள்ளலாம்.

மேற்கூறிய பாடல்களில் பெருமானின் பல பெருமைகளை எடுத்துரைத்த சம்பந்தர், இந்த பாடலில் மனம் ஒன்றி பெருமானை வழிபட வேண்டுமென்று உணர்த்துகின்றார்.

இந்த பாடலில் சம்பந்தர், பதிகத்தைப் பாடுவதால் விளையும் பலன்களை எடுத்துக் கூறுகின்றார். இவ்வாறு அனைத்துப் பதிகங்களிலும், அந்த பதிகங்களைப் பாடுவதால் விளையும் பலன்களை குறிப்பிடுவதால், சம்பந்தர் அருளிய பதிகங்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப் படுகின்றன.

பல வடமொழி தோத்திரங்களில் பலஸ்ருதி என்று அந்த தோத்திரங்களைச் சொல்வதால் விளையும் பலன்கள் உணர்த்தப் பட்டுள்ளதை நாம் அறிவோம். காரைக்கால் அம்மையாரும் தனது பதிகங்களில் கடைப் பாடலில், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பயனை குறிப்பிடுகின்றார்.தேவாரப் பதிகங்களுக்கு காலத்தால் முந்தையது காரைக்கால் அம்மையார் அருளிய பாடல்கள். அம்மையார் அருளிய கொங்கை திரங்கி என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் நட்டபாடை பண்ணிலும் எட்டியிலவம் என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் இந்தளம் பண்ணிலும் அமைக்கப் பட்டுள்ளன. அம்மையாரை பின்பற்றி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தரும் சுந்தரரும், அவர் அருளிய நட்டபாடை மற்றும் இந்தளம் பண்களில் தத்தமது முதல் பாடல்களை அமைத்துள்ளது அம்மையாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

பொருள் :



அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் அவனை உணர்ந்து தியானித்து ஞானாசம்பந்தர் உரைத்த சிறந்த தமிழ் வேதமாகிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களின் பழவினைகள் எளிதினில் தீர்ந்துவிடும்.  

ஞானசம்பந்தரின் தந்தையார் கேட்ட கேள்விக்கு, யார் கொடுத்த எச்சில் பாலினை உண்டாய் என்ற கேள்விக்கு, விடை அளிக்கும் முகமாக மொழிந்த பதிகம் என்பதால், தனது  தந்தையார் கேட்ட கேள்வியையோ, பால் கொடுத்தவர் என்று குறிப்போ இந்த பதிகத்து பாடல்களில் காணப்படவில்லை.

இந்த பதிகத்தை நாம், பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தந்தையார் கேட்ட கேள்வியுள் பாலைக் குடித்த விடயம் அடங்கியுள்ளது எனவே அந்த கேள்வியுடன் நாம் இந்த பதிகத்தில் சொல்லப்படும் பதிலை இணைத்துக் கொள்ளவேண்டும்.

உமையம்மை தனக்கு அளித்த பொன் கிண்ணத்தில் இருந்த பால் பற்றியும், அயலாரிடம் பால் உண்டதற்காக கோபித்துக்கொண்ட தந்தை பற்றியும் கூறி தன்னை ஆட்கொண்ட அப்பனையும் அம்மையையும் நினைவு கூறுகிறார்.

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள் என்ற தலைப்பின் கீழ் தோடுடைய செவியன் என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் பதிகமும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகமும் பித்தா பிறைசூடி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும்  வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பதிகங்களும் தேவார ஆசிரியர்கள் பாடிய முதல் பதிகங்கள் ஆகும்.

இவை முறையே முதல், நான்காம் மற்றும் ஏழாம் திருமுறைகளில் முதல் பாடலாக அமைந்துள்ளன. கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர் அப்பர் பிரானுக்கு உலகத்தின் குருவாகிய இறைவனின் அருள் கிடைத்து, சூலை நோய் அவரை விட்டு நீங்கியது; சுந்தரரும் திருஞான சம்பந்தரும் இறைவன் அருள் பெற்ற பின்னர் பாடிய முதல் பதிகங்கள் மற்ற இரண்டு பதிகங்கள். எனவே இந்த மூன்று  பதிகங்களையும் தினமும் பாடினால் குருவருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது., 

இயற்கை காட்சிகளை கவினுறக் கூறுவதில் சம்பந்தர்க்கு இணை சம்பந்தர் தான் என்று கருதும் அளவுக்கு, இயற்கைக் காட்சிகளை நயமாக எடுத்துரைப்பதை நாம் பல பாடல்களில் காணலாம். பாடலின் இரண்டு அடிகளில் பெருமானது பண்பு, மாண்பு, அவருடன் தொடர்பு கொண்ட பல புராண நிகழ்சிகளை ஆகியவற்றை குறிப்பிடும் சம்பந்தர் இரண்டு அடிகளில் இயற்கைக் காட்சிகளை குறிப்பிடுகின்றார்.

பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடிய பின்னர் திருக்கடைக்காப்பு பாடி, பதிகம் நிறைவு பெற்றதை உணர்த்தும் வண்ணம், பதிகம் அளிக்கும் பயன் மற்றும் தனது பெயரையும் சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டு இறைவனைத் தொழுது நின்றார்.

அப்போது வானத்தில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள், கின்னரர்கள் ஒன்று கூடி மலர்மாரி பொழிந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் திருஞானசம்பந்தர் திருக்கோயிலின் உள்ளே செல்ல, அவரது தந்தையாரும் அவரைத் தொடர்ந்து பின் சென்றார். அவரது கையில் இருந்த சிறு கொம்பு, பிள்ளையாரை மிரட்டுவதற்காக எடுத்த கொம்பு, அவரையும் அறியாமல் கீழே விழ, ஆனந்தக் கூத்து ஆடியவராய் பிள்ளையார் அருளிய பாடலினைக் கேட்கும் விருப்பும் வியப்பு கலந்த உணரவும் உடையவராய், சிவபாத இருதயர் இருந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.

உமையன்னை பால் ஊட்டிய நிகழ்ச்சியை நேரில் காணும் பேற்றினை பெறவில்லை எனினும், மூன்று வயதுக் குழந்தை பதிகம் பாடியதையும், தான் கேட்ட கேள்விக்கு பதிலாக இறைவன் அடையாளங்களை உணர்த்தி பாடியதையும் உணர்ந்த, சிவபாத இருதயர் நடந்த அதிசயம் இறைவனின் அருளால் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டார்.

விவரம் அறிந்த ஊர் மக்கள் பலரும், திருஞானசம்பந்தரை நேரில் காணும் விருப்பம் உடையவர்களாய்  திருக்கோயிலின் முன்னர் சூழ்ந்தனர். சம்பந்தப் பெருமான் மூலம் இறைவனது பண்புகளையும் பெருமையினையும் அறிந்து கொண்ட நாம், உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்பதை உணர்ந்து, திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் சென்று, பெருமானை வணங்கி, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

No comments: