டெல்லியில் புதுத் தம்பதியாய் கால்வைத்த போது, சொந்த வீடு வாங்குவது போகட்டும்... பட்ஜெட்டுக்குள் ஒரு நல்ல வாடகை வீடு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சுந்தர் என் வாழ்க்கையில் ஒரு நல்ல வழிகாட்டியாகக் குறுக்கிட்டார். என்னை விட ஒரு ஆறு ஏழு வயதுதான் மூத்தவர். அவருடைய மனைவி மாலதியோ அப்படியே என் வயதுதான்!
நான் வீடு தேடி அலைவதைப் பார்த்த மாலதி, என்னை அன்போடு வீட்டிற்கு அழைத்து ஒரு கோப்பை சூடான காபியைக் கொடுத்து உபசரித்தார். பிறகு கூடவே வந்து அலைந்து திரிந்து ஒரு அருமையான வீட்டையும் கண்டுபிடித்துக் கொடுத்தார்.
வீடு கிடைத்த சந்தோஷத்தில் நான் மாலதியிடம் சிரித்துக் கொண்டே கேட்டேன், "முன்பின் தெரியாத ஒருத்தனை எப்படி இப்படி நம்பி வீட்டுக்குள்ள கூப்பிட்டீங்க மாலதி? ஒருவேளை நான் ஏதாவது அசம்பாவிதம் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும்?"
அதற்கு மாலதி ஒரு மெல்லிய புன்னகையுடன், "முகத்தைப் பார்த்தாலே யார் நல்லவங்க, யார் கெட்டவங்கனு எங்களுக்குத் தெரியும்" என்றார்.
அவர் என் மீது வைத்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் எங்களை வெறும் நட்பிலிருந்து ஒரே குடும்பமாகவே மாற்றிவிட்டது. என் மனைவியின் அடுத்தடுத்த கருச்சிதைவுகள், பாஸ்போர்ட் வாங்கியது , நான் வேலை விஷயமாக வெளிநாடு போனது , சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்தது என எல்லாவற்றிலும் அவர்கள் என் நிழலாகவே இருந்தார்கள்.
சுந்தர்-மாலதி தம்பதியருக்கு இரண்டு மகன்கள்—நான்கு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவர்கள். மாலதி எப்போதும் தன் மகன்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி, "இவரைப் போல வாழப் பழகுங்கள்" என்று முன்மாதிரியாகச் சொல்வார். அவர்கள் என்னை அப்படிப் பார்த்தார்களா என்று தெரியாது, ஆனால் சென்னைக்கு வந்த பிறகும் தொடர்பில் இருந்தோம்.
பிறகு எனக்கு அமெரிக்கா வாய்ப்பு வந்தது. விடுமுறைக்கு இந்தியா வரும்போதெல்லாம் விசா அனுமதி பெற டெல்லியில் தான் முன்பதிவு தேதி கிடைக்கும். அப்போதெல்லாம் எங்கள் சொந்த வீடு போல அவர்கள் வீட்டில்தான் தங்குவோம். ஆனால், அமெரிக்காவில் இருந்து முற்றிலும் இந்தியா திரும்பிய பிறகு, ஏனோ தொடர்புகள் மெல்ல மெல்ல குறைந்து, ஒருகட்டத்தில் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.
சமீபத்தில் பெங்களூரில் எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்தபோது, நினைவு வந்து அவர்களுக்குத் தொலைபேசியில் அழைத்தேன். பெங்களூரில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கிறார்கள் என்று தெரியும். சுந்தர் பேசினார். என் குரலைக் கேட்டதும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்! நலவிசாரணைகளுக்குப் பிறகு, குரலைத் தாழ்த்தி தன் மனவேதனையைக் கொட்டினார்.
ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த அவருடைய மூத்த மகன் கார்த்திக்கு இப்போது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறதாம்! அவனுடைய மனைவி திவ்யா திடீரென்று "இனிமேல் இவனுடன் வாழ முடியாது" என்று பிடிவாதம் பிடித்து பிரிந்து சென்றுவிட்டாளாம். நீதிமன்றத்தில் நீதிபதி அறிவுரை சொல்லியும் இருவருமே இறங்கி வரவில்லையாம். "தம்பி, நீயாவது கார்த்திக்கிட்டயும் திவ்யாகிட்டயும் கொஞ்சம் பேசி என்ன பிரச்சனைனு கண்டுபிடியேன்... நீ சொன்னா கேட்பாங்க" என்று சுந்தரும் மாலதியும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.
"சரி, நான் பேசுறேன்" என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
பிரச்சனையைத் தோண்டிப் பார்த்தபோது காரணம் மிகவும் சாதாரணமானது... ஆனால் அகந்தை பெரிதாக இருந்தது. கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. திவ்யாவின் அம்மா தினமும் தொலைபேசியில் அழைத்து, "உனக்கு வயசு 34 ஆச்சுடி... இந்த வயசுக்கு மேல குழந்தை பெத்துகிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அந்த கையாலாகாதவனை வச்சுக்கிட்டு என்ன பண்ற?" என்று மாப்பிள்ளை மீது பழியைப் போட்டு மகளின் மண்டையைக் கழுவியிருக்கிறார்.
ஒரு நாள், அதே கடுப்பில் திவ்யா இதைக் கார்த்திக்கிடம் கேட்க... கார்த்திக் அன்றைக்கு அலுவலக மன அழுத்தத்தில் மோசமான மனநிலையில் இருந்திருக்கிறான். "என்கிட்ட என்ன பிரச்சனை? உன்கிட்டதான் ஏதோ குறை இருக்கு!" என்று பதிலுக்குப் பாய... வார்த்தைகள் வண்ணம் மாறின, வாதம் முற்றியது, நீதிமன்ற வாசல் வரை கொண்டு போய் நிறுத்திவிட்டது!
"நான் திவ்யாவைத் தனியாகச் சந்தித்துப் பேசட்டுமா?" என்று கார்த்திக்கிடம் கேட்டேன். மறுநாள் அதே உணவகத்திற்கு அவளை வரவழைப்பதாகச் சொன்னான்.
அடுத்த நாள் உணவகத்தில் நான் காத்துக் கொண்டிருந்தேன். திவ்யா உள்ளே நுழைந்தாள்.
அடடே! நல்ல அழகான பளிங்கு போன்ற முகம், நீண்ட கூந்தல்... கொஞ்சம் தொப்பை இருந்தாலும், எடுப்பான மார்பகங்களும், உருண்டையான பின்னழகும் கொண்ட ஒரு கம்பீரமான பெண்மணி! அவள் நடந்து வரும்போதே என் கண்கள் இயல்பாக அவளது மார்பகத்தின் பக்கம் நிலைத்துவிட்டன. அவளும் நான் கவனிப்பதை சட்டென்று பார்த்துவிட்டாள். ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுக்காமல், ஒரு மெல்லிய சிரிப்புடன் வந்து என் எதிரே அமர்ந்தாள். "சொல்லுங்க அங்கிள்..." என்று அவள் சிரித்துக் கொண்டே பேசிய விதம் , சூழ்நிலையின் அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்தது.
கொஞ்ச நேரத்தில் நம் நாயகன் கார்த்திக்கும் வந்து சேர்ந்தான். ஒல்லியான உடலமைப்பு, மூக்குக்கு மேலே கோபம், முகத்தில் சோகம்.
நான் திவ்யாவிடம் பேசத் தொடங்கினேன். "நீங்க ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க. எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லாம ஒருத்தரையொருத்தர் இப்படி பழி போட்டுக்கலாமா? ஒரு PM ஆக இருந்துட்டு, நிரூபணம் இல்லாம குற்றம் சாட்டுவது ஒரு முடிவுக்கு வரது நியாயமா திவ்யா?" என்றேன்.
அவள் சட்டென்று, "அங்கிள், நான் இன்னும் PM எல்லாம் ஆகல... வெறும் TL தான். அவன் தான் PM" என்று திருத்தினாள். பிறகு கொஞ்சம் குரலைத் தளர்த்தி, "ஆனா நீங்க சொல்றது உண்மைதான்... அவர் அப்படிப் பேசினதும் என்னால தாங்கிக்க முடியாம ஆவேசப்பட்டுட்டேன்" என்று ஒப்புக்கொண்டாள்.
அப்போது நான் என் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கொஞ்சம் சுவாரசியம் கூட்டி விவரிக்கத் தொடங்கினேன்:
"எனக்கு கல்யாணமாகி 12 வருஷம் கழிச்சுதான் என் பொண்ணு பிறந்தா! இந்த உலகம் எங்களை என்னவெல்லாம் பேசிச்சு தெரியுமா? சொந்தக்காரங்க அத்தனை பேரும் எங்களை ஏளனமா பார்த்தாங்க. ஆனா நாங்க சோர்ந்து போகல. பரிசோதனை செஞ்சு பார்த்தப்போ ரெண்டு பேருக்குமே எந்தக் குறையும் இல்லைனு வந்துச்சு. அப்புறம் அமெரிக்கா போனப்போதான் தெரிஞ்சது... என் மனைவிக்குக் கருப்பைக் குழாயில் ஒரு சின்ன அடைப்பு இருந்தது. அதைச் சரி பண்ணின பிறகுதான் கரு நின்னது.
ஆனா அது சாதாரண கர்ப்பம் இல்லை... ரொம்பக் கடுமையான காலகட்டம்! கூட உதவிக்கு யாரும் கிடையாது ரெண்டாவது மாசக் கடைசியில குருதிப்போக்கு பிரச்சனை, பயங்கரமான வாந்தி, தாங்க முடியாத மனநிலை மாற்றங்கள்! நான் வேலை விஷயமாக வேற ஊர்ல இருக்க வேண்டியிருந்தது. வாரக் கடைசியில மட்டும்தான் வீட்டுக்கு வருவேன். வந்து அவளுக்காக ஆசையா சமைச்சு வைப்பேன். ஆனா நான் அடுத்த வாரம் வந்து பார்க்கும்போது, நான் செஞ்சு வச்ச சாப்பாடு அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாம இருக்கும்... அவளால சாப்பிடவே முடியாது! அவ்ளோ கஷ்டப்பட்டோம். ஆனா இன்னைக்கு என் பொண்ணு பெரிய மனுஷியாகி என் முன்னாடி நிக்குறா! அவளைப் பார்க்கும் போது வாழ்க்கையின் பொருளே அவள் தான் என்று தோன்றுகிறது"
அவர்கள் இருவருமே வாய் அடைத்துப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"நீங்க தயவுசெஞ்சு எந்தச் செயற்கைக் கருத்தரிப்பு மையத்திற்கும் போகாதீங்க... முதல்ல ஒரு நல்ல பாலினவியல் மருத்துவரைப் போய் பாருங்க. அவர் சொல்வதை செய்யுங்கள்.. மற்றவர்கள் சொல்வதை இப்போது கேட்க வேண்டாம்." என்று அறிவுரை கூறினேன்.
அவர்களும் போய் பார்த்தார்கள். பரிசோதனையில் இருவருமே ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது. மருத்துவர் அவர்களை அவசரப்படாமல், 'கருவுறுதல் சுழற்சி' (fertility cycle) கணித்து 3 மாதங்கள் முயன்று பார்க்கச் சொன்னார்.
என்ன ஆச்சரியம்! இரண்டே மாதத்தில் திவ்யா எனக்கு தொலைபேசியில் அழைத்து, "அங்கிள்... நற்செய்தி!" என்று மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள்.
நான் கார்த்திக்கையும் திவ்யாவையும் ஒன்றாக உட்கார வைத்து, "அலுவலகத்தில் ஒரு பிரச்சனை வந்தா வாடிக்கையாளர், குழு உறுப்பினர்கள், நிர்வாகம்னு எல்லாரேகிட்டயும் பேசி தீர்த்துக்கிறீங்கதானே? வாழ்க்கையில ஒரு பிரச்சனை வந்தா ஏன் உட்கார்ந்து பேசி தீர்க்கக் கூடாது? இனிமே என்ன பிரச்சனை வந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து சண்டை போட்டு, பேசி முடிவெடுங்க" என்று தலையில் கொட்டி அறிவுரை சொன்னேன்.
அவனைத் தனியாக அழைத்து.. சினிமா நடிகை மாதிரி ஒரு மனைவி கிடைக்குமா.. அவ கைல காலுல விழுந்து சந்தோஷமா குடும்பம் நடத்து என்று கூறினேன்
இப்போது அவர்கள் வீட்டில் குழந்தைச் சிரிப்புடன் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் வாழ்கிறது.
இதற்குள் என் பணி பெங்களூரிலிருந்து துபாய்க்கு மாறிவிட்டது. எனக்கு ஒரு நாள் வீட்டில் திவ்யா வே சமைத்து சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாள். வாழ்க்கை போகிற போக்கைப் பார்த்தால்... அநேகமாக அவர்களின் மகளின் திருமணத்தின் போதுதான் நான் அவர்கள் வீட்டில் சாப்பிடுவேன் போலிருக்கிறது! :-)