Wednesday, July 29, 2026

முடிவு

 டெல்லியில் புதுத் தம்பதியாய் கால்வைத்த போது, சொந்த வீடு வாங்குவது போகட்டும்... பட்ஜெட்டுக்குள்  ஒரு நல்ல வாடகை வீடு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சுந்தர் என் வாழ்க்கையில் ஒரு நல்ல வழிகாட்டியாகக் குறுக்கிட்டார். என்னை விட ஒரு ஆறு ஏழு வயதுதான் மூத்தவர். அவருடைய மனைவி மாலதியோ அப்படியே என் வயதுதான்!

நான் வீடு தேடி அலைவதைப் பார்த்த மாலதி, என்னை அன்போடு வீட்டிற்கு அழைத்து ஒரு கோப்பை சூடான காபியைக் கொடுத்து உபசரித்தார். பிறகு கூடவே வந்து அலைந்து திரிந்து ஒரு அருமையான வீட்டையும் கண்டுபிடித்துக் கொடுத்தார்.

வீடு கிடைத்த சந்தோஷத்தில் நான் மாலதியிடம் சிரித்துக் கொண்டே  கேட்டேன், "முன்பின் தெரியாத ஒருத்தனை எப்படி இப்படி நம்பி வீட்டுக்குள்ள கூப்பிட்டீங்க மாலதி? ஒருவேளை நான் ஏதாவது அசம்பாவிதம் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும்?"

அதற்கு மாலதி ஒரு மெல்லிய புன்னகையுடன், "முகத்தைப் பார்த்தாலே யார் நல்லவங்க, யார் கெட்டவங்கனு எங்களுக்குத் தெரியும்" என்றார்.

அவர் என் மீது வைத்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் எங்களை வெறும் நட்பிலிருந்து ஒரே குடும்பமாகவே மாற்றிவிட்டது. என் மனைவியின் அடுத்தடுத்த கருச்சிதைவுகள், பாஸ்போர்ட் வாங்கியது , நான் வேலை விஷயமாக வெளிநாடு போனது , சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்தது என எல்லாவற்றிலும் அவர்கள் என் நிழலாகவே இருந்தார்கள்.

சுந்தர்-மாலதி தம்பதியருக்கு இரண்டு மகன்கள்—நான்கு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவர்கள். மாலதி எப்போதும் தன் மகன்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி, "இவரைப் போல வாழப் பழகுங்கள்" என்று முன்மாதிரியாகச் சொல்வார். அவர்கள் என்னை அப்படிப் பார்த்தார்களா என்று தெரியாது, ஆனால் சென்னைக்கு வந்த பிறகும் தொடர்பில் இருந்தோம்.

பிறகு எனக்கு அமெரிக்கா வாய்ப்பு வந்தது. விடுமுறைக்கு இந்தியா வரும்போதெல்லாம் விசா அனுமதி பெற டெல்லியில் தான் முன்பதிவு தேதி கிடைக்கும். அப்போதெல்லாம் எங்கள் சொந்த வீடு போல அவர்கள் வீட்டில்தான் தங்குவோம். ஆனால், அமெரிக்காவில் இருந்து முற்றிலும் இந்தியா திரும்பிய பிறகு, ஏனோ தொடர்புகள் மெல்ல மெல்ல குறைந்து, ஒருகட்டத்தில் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.


சமீபத்தில் பெங்களூரில் எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்தபோது, நினைவு வந்து அவர்களுக்குத் தொலைபேசியில் அழைத்தேன். பெங்களூரில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கிறார்கள் என்று தெரியும். சுந்தர் பேசினார். என் குரலைக் கேட்டதும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்! நலவிசாரணைகளுக்குப் பிறகு, குரலைத் தாழ்த்தி தன் மனவேதனையைக் கொட்டினார்.


ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த அவருடைய மூத்த மகன் கார்த்திக்கு இப்போது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறதாம்! அவனுடைய மனைவி திவ்யா திடீரென்று "இனிமேல் இவனுடன் வாழ முடியாது" என்று பிடிவாதம் பிடித்து பிரிந்து சென்றுவிட்டாளாம். நீதிமன்றத்தில் நீதிபதி அறிவுரை சொல்லியும் இருவருமே இறங்கி வரவில்லையாம். "தம்பி, நீயாவது கார்த்திக்கிட்டயும் திவ்யாகிட்டயும் கொஞ்சம் பேசி என்ன பிரச்சனைனு கண்டுபிடியேன்... நீ சொன்னா கேட்பாங்க" என்று சுந்தரும் மாலதியும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

"சரி, நான் பேசுறேன்" என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.


பிரச்சனையைத் தோண்டிப் பார்த்தபோது காரணம் மிகவும் சாதாரணமானது... ஆனால் அகந்தை பெரிதாக இருந்தது. கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. திவ்யாவின் அம்மா தினமும் தொலைபேசியில் அழைத்து, "உனக்கு வயசு 34 ஆச்சுடி... இந்த வயசுக்கு மேல குழந்தை பெத்துகிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அந்த கையாலாகாதவனை வச்சுக்கிட்டு என்ன பண்ற?" என்று மாப்பிள்ளை மீது பழியைப் போட்டு மகளின் மண்டையைக் கழுவியிருக்கிறார்.

ஒரு நாள், அதே கடுப்பில் திவ்யா இதைக் கார்த்திக்கிடம் கேட்க... கார்த்திக் அன்றைக்கு அலுவலக மன அழுத்தத்தில் மோசமான மனநிலையில் இருந்திருக்கிறான். "என்கிட்ட என்ன பிரச்சனை? உன்கிட்டதான் ஏதோ குறை இருக்கு!" என்று பதிலுக்குப் பாய... வார்த்தைகள் வண்ணம் மாறின, வாதம் முற்றியது, நீதிமன்ற வாசல் வரை கொண்டு போய் நிறுத்திவிட்டது!


"நான் திவ்யாவைத் தனியாகச் சந்தித்துப் பேசட்டுமா?" என்று கார்த்திக்கிடம் கேட்டேன். மறுநாள் அதே உணவகத்திற்கு அவளை வரவழைப்பதாகச் சொன்னான்.

அடுத்த நாள் உணவகத்தில் நான் காத்துக் கொண்டிருந்தேன். திவ்யா உள்ளே நுழைந்தாள்.

அடடே! நல்ல அழகான பளிங்கு போன்ற முகம், நீண்ட கூந்தல்... கொஞ்சம் தொப்பை இருந்தாலும், எடுப்பான மார்பகங்களும், உருண்டையான பின்னழகும் கொண்ட ஒரு கம்பீரமான பெண்மணி! அவள் நடந்து வரும்போதே என் கண்கள் இயல்பாக அவளது மார்பகத்தின் பக்கம் நிலைத்துவிட்டன. அவளும் நான் கவனிப்பதை சட்டென்று பார்த்துவிட்டாள். ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுக்காமல், ஒரு மெல்லிய சிரிப்புடன் வந்து என் எதிரே அமர்ந்தாள். "சொல்லுங்க அங்கிள்..." என்று அவள் சிரித்துக் கொண்டே பேசிய விதம் , சூழ்நிலையின் அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்தது.


கொஞ்ச நேரத்தில் நம் நாயகன் கார்த்திக்கும் வந்து சேர்ந்தான். ஒல்லியான உடலமைப்பு, மூக்குக்கு மேலே கோபம், முகத்தில் சோகம்.

நான் திவ்யாவிடம் பேசத் தொடங்கினேன். "நீங்க ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க. எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லாம ஒருத்தரையொருத்தர் இப்படி பழி போட்டுக்கலாமா? ஒரு PM ஆக இருந்துட்டு, நிரூபணம் இல்லாம குற்றம் சாட்டுவது ஒரு முடிவுக்கு வரது நியாயமா திவ்யா?" என்றேன்.

அவள் சட்டென்று, "அங்கிள், நான் இன்னும் PM எல்லாம் ஆகல... வெறும் TL  தான். அவன் தான் PM" என்று திருத்தினாள். பிறகு கொஞ்சம் குரலைத் தளர்த்தி, "ஆனா நீங்க சொல்றது உண்மைதான்... அவர் அப்படிப் பேசினதும் என்னால தாங்கிக்க முடியாம ஆவேசப்பட்டுட்டேன்" என்று ஒப்புக்கொண்டாள்.


அப்போது நான் என் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கொஞ்சம் சுவாரசியம் கூட்டி விவரிக்கத் தொடங்கினேன்:

"எனக்கு கல்யாணமாகி 12 வருஷம் கழிச்சுதான் என் பொண்ணு பிறந்தா! இந்த உலகம் எங்களை என்னவெல்லாம் பேசிச்சு தெரியுமா? சொந்தக்காரங்க அத்தனை பேரும் எங்களை ஏளனமா பார்த்தாங்க. ஆனா நாங்க சோர்ந்து போகல. பரிசோதனை செஞ்சு பார்த்தப்போ ரெண்டு பேருக்குமே எந்தக் குறையும் இல்லைனு வந்துச்சு. அப்புறம் அமெரிக்கா போனப்போதான் தெரிஞ்சது... என் மனைவிக்குக் கருப்பைக் குழாயில் ஒரு சின்ன அடைப்பு இருந்தது. அதைச் சரி பண்ணின பிறகுதான் கரு நின்னது.


ஆனா அது சாதாரண கர்ப்பம் இல்லை... ரொம்பக் கடுமையான காலகட்டம்!  கூட உதவிக்கு யாரும் கிடையாது ரெண்டாவது மாசக் கடைசியில குருதிப்போக்கு பிரச்சனை, பயங்கரமான வாந்தி, தாங்க முடியாத மனநிலை மாற்றங்கள்! நான் வேலை விஷயமாக வேற ஊர்ல இருக்க வேண்டியிருந்தது. வாரக் கடைசியில மட்டும்தான் வீட்டுக்கு வருவேன். வந்து அவளுக்காக ஆசையா சமைச்சு வைப்பேன். ஆனா நான் அடுத்த வாரம் வந்து பார்க்கும்போது, நான் செஞ்சு வச்ச சாப்பாடு அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாம இருக்கும்... அவளால சாப்பிடவே முடியாது! அவ்ளோ கஷ்டப்பட்டோம். ஆனா இன்னைக்கு என் பொண்ணு பெரிய மனுஷியாகி என் முன்னாடி நிக்குறா! அவளைப் பார்க்கும் போது வாழ்க்கையின் பொருளே அவள் தான் என்று தோன்றுகிறது"


அவர்கள் இருவருமே வாய் அடைத்துப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"நீங்க தயவுசெஞ்சு எந்தச் செயற்கைக் கருத்தரிப்பு மையத்திற்கும் போகாதீங்க... முதல்ல ஒரு நல்ல பாலினவியல் மருத்துவரைப் போய் பாருங்க.  அவர் சொல்வதை செய்யுங்கள்.. மற்றவர்கள் சொல்வதை இப்போது கேட்க வேண்டாம்." என்று அறிவுரை கூறினேன்.


அவர்களும் போய் பார்த்தார்கள். பரிசோதனையில் இருவருமே ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது. மருத்துவர் அவர்களை அவசரப்படாமல், 'கருவுறுதல் சுழற்சி' (fertility cycle) கணித்து 3 மாதங்கள் முயன்று பார்க்கச் சொன்னார்.

என்ன ஆச்சரியம்! இரண்டே மாதத்தில் திவ்யா எனக்கு தொலைபேசியில் அழைத்து, "அங்கிள்... நற்செய்தி!" என்று மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள்.


நான் கார்த்திக்கையும் திவ்யாவையும் ஒன்றாக உட்கார வைத்து, "அலுவலகத்தில் ஒரு பிரச்சனை வந்தா வாடிக்கையாளர், குழு உறுப்பினர்கள், நிர்வாகம்னு எல்லாரேகிட்டயும் பேசி தீர்த்துக்கிறீங்கதானே? வாழ்க்கையில ஒரு பிரச்சனை வந்தா ஏன் உட்கார்ந்து பேசி தீர்க்கக் கூடாது? இனிமே என்ன பிரச்சனை வந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து சண்டை போட்டு, பேசி முடிவெடுங்க" என்று தலையில் கொட்டி அறிவுரை சொன்னேன்.

அவனைத் தனியாக அழைத்து.. சினிமா நடிகை மாதிரி ஒரு மனைவி கிடைக்குமா.. அவ கைல காலுல விழுந்து சந்தோஷமா குடும்பம் நடத்து என்று கூறினேன் 

இப்போது அவர்கள் வீட்டில் குழந்தைச் சிரிப்புடன் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் வாழ்கிறது.


இதற்குள் என் பணி பெங்களூரிலிருந்து துபாய்க்கு மாறிவிட்டது. எனக்கு ஒரு நாள் வீட்டில் திவ்யா வே சமைத்து சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாள். வாழ்க்கை போகிற போக்கைப் பார்த்தால்... அநேகமாக அவர்களின் மகளின் திருமணத்தின் போதுதான் நான் அவர்கள் வீட்டில் சாப்பிடுவேன் போலிருக்கிறது! :-)

சபலம்

திரு காலையிலிருந்தே கொஞ்சம் பரபரப்பாக இருந்தான். இன்று அவன் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். பார்த்துப் பார்த்து செய்த திருமணம் இன்று முடிந்து விடக் கூடும். காதலித்தது, கனவு கண்டது, குடும்பம் நடத்தியது எல்லாம் கண் முன் வந்து சென்றது. இவனுக்கு அனுராதாவை விட ஒரு நல்ல மனைவி கிடைத்து விட முடியாது. அவனும் அதை உணர்ந்திருந்தான். ஏதோ செய்யப் போய் ஏதோ ஆகி விட்டது.


திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆசை, காமம், வேலை, வெளிநாட்டுப் பயணம் என்று ஓடி விட்டது. ஒரு சலிப்பு தட்டும் அளவு இருவரும் சந்தோஷமாவே இருந்தார்கள். அப்போது தான் திடீரென்று சனியன் வாழ்க்கையில் எட்டிப் பார்த்தது ஒரு செயலி வடிவத்திலே.


அவனுடைய கல்லூரி நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு நண்பன் திருமணம் கடந்த அனுபவங்கள் பற்றி பேசப் போக, தீவிரமான தலைப்பாக மாறி, அவர் அவர்கள் யாரை எல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டார்கள் என்றும் வேறு என்ன முயற்சி செய்தார்கள் என்றும் இரண்டு மூன்று மணிநேரம் அதைப் பற்றி உரையாடினார்கள். தாய்லாந்து நாட்டில் மசாஜ், மாட்டாமல் தப்பிப்பது என்றெல்லாம் பேசும் போது, ஒரு செயலி  பற்றி ஒரு நண்பன் சொன்னான்... பக்கத்து வீட்டிலிருந்தாலும் மாட்டாமல் இருக்கலாம், உன் பெயர் கூட யாருக்கும் தெரியாது என்று சொன்னான். ஆசை யாரை விட்டது!


அது “கடித்த மாம்பழம்” என்று இந்தியில் பெயர் கொண்டிருந்தது. அணில் கடித்த மாம்பழமோ என்று நினைத்தேன். மாற்றான் வீட்டு மல்லிகை. சிரித்துக் கொண்டே திறந்து பார்த்தேன். காமம் ஒரு முறை ஒரே முறை என்று எழுதியிருந்தது. முயற்சி செய்து பாருங்கள், முழுவதும் அனுபவம். அனுபவமே கடவுள், அனுபவமே வாழ்க்கை. நண்பன் சொன்னான்... "எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது, தங்கமணி என்ஜாய்!"


மடிக்கணினியில் தரவிறக்கம் செய்து ஒளித்து வைத்தான். பிறகு மனைவி ஊருக்குப் போகப் போகிறாள் என்ற போது பயன்படுத்தினான். அவளும் அவன் போனது போலவே அவளது தோழிகளுடன் சேர்ந்து பெண்கள் மட்டுமான ஒரு சுற்றுலா திட்டமிட்டிருந்தாள். "ஒரு வாரம் உன் தொல்லை இல்லாமல் இருப்பேன்" என்று சொல்லி விட்டு, போகும் இடம் சொல்லாமல் காணாமல் போனாள்.


அந்த செயலியில் நான் கொடுத்த தேவைகளுக்கேற்ப ஒரு பெண் இருந்தாள். அவளுடன் பேசியதில் நிறைய பொருத்தங்கள் இருந்தன. முகத்தில் எமோஜி போட்ட புகைப்படம் நன்றாக இருந்தது. பெரிதாக மறைக்கவில்லை. வெள்ளி இரவு சந்திக்கலாம் என்று முடிவு... மகாபலிபுரம் தாண்டி ஒரு ரிசார்ட் பெயர் வந்தது. நான் இதுவரை போனதில்லை... கூகிளிடம் கேட்டதில் அது ஒரு கடற்கரை சார்ந்த தனியார் ரிசார்ட் என்று தெரிந்தது. ஆபத்து எதுவும் இருக்காது என்று முடிவு செய்து கிளம்பினேன்.


ஒரு இரண்டு மணிநேரம் வண்டியை ஓட்டிய பிறகு, ரிசார்ட் வாசலில் நின்றேன். காவலாளி அறை எண் கேட்டான். சொன்னேன். ஸ்பீக்கரில் போட்டிருந்த தகவலை பேசியில் "அனுராதா ஹியர்" என்று கேட்டது. அவன் தொலைபேசியை எடுத்து நான் வந்திருப்பதாக சொன்னான். (செயலியில் என் பெயர்: ராஜமகேந்திரன் 😊). காரை நிறுத்தி விட்டு நடந்து சென்று அறைக் கதவைத் தட்டினேன். ஒரு பெண் திறந்தாள். "அமருங்கள் மேடம் வந்து விடுவார்" என்று சொன்னாள். நான் தொலைக்காட்சியில் விஜய்-ரஷ்மிகாவை 'ரஞ்சிதமே' என்று கொஞ்சி கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என்மேல் ஏதோ விழுந்தது... தலையில் பட்டதும் மயக்கமானேன்.


இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் கண் விழித்த போது என் நண்பன் தான் அருகில் நின்றிருந்தான். "என்னடா?" என்று வினவினேன். “மச்சி, உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடிச்சிடா” என்றான். வரிசையாக எல்லாம் நினைவுக்கு வந்தது. அவனிடம் எதுவும் சொல்லி விடக் கூடாது என்று "அப்படியா?" என்று கேட்டு முடித்துக் கொண்டேன். இவனும் அந்த குழுவில் இருப்பவன்தான். தெரிந்தால் கிண்டல் செய்வான் என்று மறைத்து விட்டேன். அல்லது அப்படித் தான் நினைத்திருந்தேன்.


நினைவு வந்து விட்டது என்று தெரிந்த அடுத்த அரை மணியில் அகில உலகத்தில் இருந்த என்னுடைய அத்தனை பேரும் நேராகவோ, தொலைபேசி மூலமாகவோ என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்கள்... “மச்சி எப்படிடா?” அது விபத்து எப்படி என்பதல்ல, அந்த பெண்ணிடம் போனது எப்படி என்று. பிறகு நண்பன் சொன்னான்—அந்த ரிசார்ட் நிர்வாகி இவனுக்கு தொலைபேசி, நான் நினைவில்லாமல் கிடப்பதாகவும், அருகிலுள்ள சிறு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் சொன்னாராம். இவன் உடனே கிளம்பி இன்னும் இரண்டு பேரை துணைக்கழைத்துக் கொண்டு என்னை மீட்டு வந்த கதையை சொன்னான். அதில் துணைக் குறிப்பாக, எனக்கு பொறுப்பேற்று அந்த ரிசார்ட்டின் ஒரு பணிப்பெண் இருந்தாள் என்றும், அவள் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டாள் என்றும் சொன்னான்.


இது இப்படி இருக்க, மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். வீடு துடைத்தாற்போல் சுத்தமாக இருந்தது. என் பொருள்கள் எல்லாம் இருந்தது. அப்போது தான் கேட்டேன்... "என் மனைவிக்கு சொல்லவில்லையா?" என்று. "அவள் உன் எண்ணை பிளாக் செய்திருக்கிறாள்" என்று சொன்னான். நானும் என்முறையாக ஒரு முறை முயற்சி செய்தேன்; தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளுடைய ஒரு வாரம் முடிவடையவில்லை என்பதால் கிடைக்கவில்லை என்று நினைத்தேன்.


என் குடும்பத்தினர் ஊரிலிருந்து வந்து என்னை கவனித்துக் கொண்டனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் அவளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. திங்கள் கிழமை காலையில் கூரியரில் இடி வந்து இறங்கியது. திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதால் என்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றும், விவாகரத்து கோரியும் அவளது வக்கீல் விலாவாரியாக விளக்கி அறிக்கை அனுப்பி இருந்தார். 'தலை சுற்றியது' என்பது ஒரு மிக குறைந்த விளக்கம்!


என்னுடைய அம்மா உடனே அந்த கடிதத்தைப் படித்து விட்டு... "பரதேசி நாயே, லட்சணமா கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் உனக்கு ஒரு குரங்கு கேட்குதோ?" என்று அந்த கோப்பாலேயே இரண்டு அடி போட்டார். நான் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டேன். அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஒரு பெரிய சம்பந்தி சண்டையின் எல்லா வகைகளும் எங்கள் வீட்டில் காணக் கிடைத்தது. என் அம்மா தொலைபேசியிலேயே முழு சண்டையையும் துவக்கி விட்டார்கள். “உன் பொண்ணு ரொம்ப ஒழுங்கா? என் பிள்ளையை குத்தம் சொல்ல வந்துட்டீங்க... உன் பொண்ணுக்கு ஒரு சேலை கட்டத் தெரியாது!”


"சண்டை போடாதே அம்மா... எல்லாம் சரியாகி விட்டால், அப்புறம் முகம் பார்த்துக் கொள்ள முடியாது" என்று கூறினேன். அதற்கு அம்மா, "நீ அமைதியாக இருந்தால் எல்லா தப்பையும் உன்னுடையது என்று ஒப்புக் கொண்டதாகி விடும். இறங்கி அடி, சரியாகப் போனதும் எல்லாம் மன்னிக்கப்படும்" என்றாள். அக்கா வந்தாள், "இவர்களை எல்லாம் கவனிக்காதே... உன் மனைவி நல்லவள் என்று நம்பினால் அவள் காலில் விழுந்து விடு. அவள் தப்பைச் சொல்லாதே... உன் பேரில்தான் தவறு என்று கூறிவிடு, அவள் திரும்ப வருவாள். உன் பேரிலும் மரியாதை அதிகமாகும்" என்றாள்.


இரண்டு மணிநேரம் கழித்து என் மாமியார், மாமனார் உட்பட ஒரு 10 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். என்னை வாயில் வந்தபடி எல்லாம் திட்டினார்கள். அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது...


அன்றைக்கு என்னை அழைத்தது என் மனைவிதான்! நான் அந்த ரிசார்ட்டிற்கு அவளைப் பார்க்கத்தான் போயிருக்கிறேன். அவள் மறுபுற வாசல் வழியாக உள்ளே வந்து என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு, அங்கிருந்த ஏதோ ஒரு கனமான பொருளை என் மீது கோபத்தில் வீசியிருக்கிறாள். அதன் பிறகு கதை உங்களுக்குத் தெரியும். அவர்கள் என் மனைவியைக் கையும் களவுமாக எவளுடனோ பிடித்து விட்டதாகத்தான் சொன்னார்கள். எனக்குத் தெரியுமே என்ன நடந்திருக்கும் என்று...


ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்த அனுபவம் அப்போது அங்கே உதவியது. "நான் ஒரு பெண்ணைத் தேடிப் போனேன்... அவள் எதற்கு அந்த இடத்திற்கு வந்தாள்?" என்று ஒரே ஒரு கேள்வி கேட்டேன். பதில இல்லாமல் அனைவரும் திரும்பிப் போனார்கள்.


---


சிறிது நேரம் கழித்து நீதிமன்ற வளாகத்தில் அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நான் மெதுவாக அவள் அருகில் சென்று, தோளைத் தொட்டு, "அனு... ஒரு நிமிஷம் கேளு" என்றேன்.


அவளுடைய உறவினர்கள் குறுக்கிட வந்தனர். ஆனால், அவள் கை உயர்த்தி அவர்களைத் தடுத்து நிறுத்தினாள்.


நான் அவள் கண்களை நேராகப் பார்த்து மிருதுவாகப் பேசத் தொடங்கினேன். "நான் பண்ணது தப்புதான் அனு... ஏதோ ஒரு சபலம், யாரோ சொன்ன பேச்சுன்னு வழிமாறிட்டேன். ஆனா... நாம ரெண்டு பேருமே வெவ்வேற காரணத்துக்காக வெளியில ஏதோ ஒரு தேடல்ல இருந்திருக்கோம், இல்லையா? நான் பண்ண தப்புல ஒரு சின்ன ஆறுதல் என்னன்னா... அந்த செயலில தேடி நான் கடைசியா வந்து நின்னது உன்கிட்டதான். ஆனா..."


சிறிது இடைவெளி விட்டு, குரலை இன்னும் தாழ்த்தி, நுட்பமாகக் கேட்டேன்:


"*நான் தான் தப்புப் பண்ணி அந்த ஆப் வழியா உன்னைத் தேடி வந்தேன்னு வச்சுப்போம்... ஆனா, நான் தேடுற அளவுக்கு நீ எப்படிடி அதே ஆப்ல வந்து நினன?*"


அவள் அப்படியே உறைந்து போனாள். பதில் பேச முடியாமல் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.


நான் மெல்லிய புன்னகையுடன் தொடர்ந்தேன்: "நாம ரெண்டு பேருக்குமே ஏதோ ஒரு சலிப்பு இருந்திருக்கு. ரெண்டு பேருமே எல்லை மீற நினைச்சோம்... ஆனா நல்லவேளையா, அங்கே நாம ரெண்டு பேரும் மட்டும்தான் இருந்தோம்! நாம பண்ண போற தப்பிலிருந்து நாமளே ஒருத்தரையொருத்தர் காப்பாத்திக்கிட்டோம். உனக்கும் என் மேல கோபம் வர உரிமையிருக்கு, எனக்கும் இருக்கு. ஆனா, இந்த கோர்ட்டு, விவாகரத்துன்னு எதுக்குடி? நான் என்ன தினமும் தப்புப் பண்ணியா உன்னை வதைச்சேன்? இல்ல நீதான் பண்ணியிருக்கியா?"


அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. தன் தவறும் அவளுக்குப் புரிந்தது. சுற்றிலும் இருந்த குடும்பத்தினரை விடுத்து, என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து, என் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டாள்.


"இனிமே இந்த மாதிரி சபலம் எதுவும் வராதுடி..." என்று அவள் தலையைக் கோதினேன்.


"நம்பிட்டேன்..." என்று என் சட்டையைப் பலமாகப் பற்றிக்கொண்டாள்.


தூரத்தில் இருந்து இதைப் பார்த்த என் அம்மா, நிம்மதியுடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.


சந்தேகம் மட்டுமல்ல... சபலமும் சந்தோஷமான வாழ்க்கைக்கு எதிரிதான்!

அக்னி-செல்: இரட்டை அறிவியல் முத்திரை

சென்னையின் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அரங்கத்தில் அன்றைய மாலைப் பொழுது வழக்கம் போல் இல்லை. மெரீனா கடற்கரைக் காற்று கதவுகளின் இடுக்கின் வழியே உள்ளே நுழைந்தாலும், அரங்கத்தினுள் நிலவிய அனல் காற்று சற்றும் குறையவில்லை. மூத்த விஞ்ஞானிகள், தொழிற்துறை வல்லுநர்கள், சர்வதேசப் பத்திரிகையாளர்கள் என அரங்கம் நிரம்பி வழிய, மேடையில் அமைதியே உருவாய் நின்று கொண்டிருந்தார் டாக்டர் சுந்தரம் கோதண்டராமன்.

38 வயதான இந்த ஐ.ஐ.டி மெட்ராஸ் உலோகவியல் ஆராய்ச்சியாளரின் முன்னால், பட்டுத் துணியின் மீது மின்னிக் கொண்டிருந்தது அந்தச் சிறிய உருளை—'அக்னி-செல்' (Agni-Cell).

ஒரு சிறிய கை விளக்கு பேட்டரி -அளவு ரேடியோ ஐசோடோப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த அக்னி-செல், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் 50 கிலோவாட் மின்சாரத்தை எவ்வித ரீசார்ஜும் இன்றி வழங்கக்கூடிய ஒரு நவீன அற்புதம். வீடுகள், மின்சார வாகனங்கள், கிராமப்புற மருத்துவ மையங்கள் என அனைத்தின் ஆற்றல் தேவைகளையும் ஒரே அடியில் தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பிற்கு தேசிய விருது வழங்கப்படவிருந்த தருணம்தான் அது.

தலைமை விருந்தினர் விருதை வழங்க எழுந்தபொழுது, மூன்றாவது வரிசையிலிருந்து ஒரு குரல் உரக்க ஒலித்தது.

"இந்த விழாவை உடனடியாக நிறுத்துங்கள்!"

எழுந்தது 'உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பின்' சர்வதேசப் பிரதிநிதி. அவருடன் சில பன்னாட்டு எரிபொருள் நிறுவனங்களின் அதிகாரிகளும் நின்றிருந்தனர்.

"இதனுள் ஆபத்தான அணுக்கதிர்வீச்சுப் பொருள் உள்ளது. நாளை ஒரு வாகன விபத்திலோ அல்லது கட்டிட நெரிசலிலோ இதன் கவசம் உடைந்தால், நகரமே கதிர்வீச்சுப் பிழம்பாக மாறும். முறையான பாதுகாப்புச் சோதனை இல்லாத இந்த உபகரணத்திற்கு விருது வழக்கம் வழக்கம் போல அவசரக்கோலமானது!" என்று சாடினார்.

அரங்கத்தில் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது. அமைப்பாளர்கள் திகைத்தனர்.

ஆனால், சுந்தரத்தின் முகத்தில் எவ்வித பதற்றமும் இல்லை. தனது கண்ணாடியைச் சற்று உயர்த்திப் பிடித்தபடி மைக்கை கையில் எடுத்தார்.

"பாதுகாப்பு பற்றிய உங்கள் ஐயம் நியாயமானதுதான்," என்றார் தணிந்த ஆனால் தெளிவான குரலில். "நான் உங்களை  நம்பச் சொல்லவில்லை; நீங்கள் சோதித்துப் பாருங்கள்.  வெளிப்புறக் கூடத்தில் 500 டன் அழுத்தத் திறன் கொண்ட 'ஹைட்ராலிக் பிரஸ்' (Hydraulic Press) மற்றும் பிளாஸ்மா டார்ச் தயாராக இருக்கிறது. உங்கள் வல்லுநர்களைக் கொண்டே இதை உடைத்துத் தாருங்கள், பார்ப்போம்!"

சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டம் அரங்கை விட்டு வெளியே வந்து சோதனைக் களத்தைச் சூழ்ந்தது.

கனரக இரும்புக்கரம் அந்த அக்னி-செல்லின் மீது இறங்கியது. டன் கணக்கில் அழுத்தம் ஏற ஏற, எந்திரத்தின் உழைப்பு சத்தமாக ஒலித்தது.

டங்க்!

ஒரு பெரும் உலோக முழக்கம். 500 டன் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எந்திரத்தின் தடிமனான அடிப்பாகமே வளைந்து நொறுங்கியது. எந்திரம் செயலிழந்தது.

ஆனால், அக்னி-செல்? சிறு கீறல் கூட இன்றி, அதே பொலிவோடு மின்னிக்கொண்டிருந்தது!

அடுத்ததாக, 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உமிழும் பிளாஸ்மா டார்ச் மூலம் தொடர்ந்து 10 நிமிடங்கள் சுட்டெரித்தார்கள். சுடர் விலக்கப்பட்ட சில வினாடிகளிலேயே அது இயல்பு வெப்பநிலைக்குத் திரும்பியது. கைகர் கருவியில் கதிர்வீச்சின் அளவு 'பூஜ்ஜியம்' என்றே காட்டியது.

வந்திருந்த வல்லுநர்கள் வாயடைத்துப் போய் நின்றனர்.

சுந்தரம் அந்த அக்னி-செல்லைத் தன் கைகளில் ஏந்தியபடி கூட்டத்தைப் பார்த்தார்.

"நீங்கள் இதன் அணுக்கருப் பாதுகாப்பை மட்டுமே கேள்வி எழுப்பினீர்கள். ஆனால், அந்த அணுக்கரு மூலத்தைப் பாதுகாப்பாக அடைத்து வைக்கும் கவசம்தான் என் ஆராய்ச்சியின் முதல் பகுதி என்பதை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள்," என்றார்.

அவர் தொடர்ந்தார்: "இந்தக் கதிர்வீச்சு சிறிதும் வெளியேறாமல் இருக்க, வைரத்தை விட அதிக அடர்த்தியும், அணு-துளைக்காத  வலிமையும் கொண்ட ஒரு புதிய 'கார்பன்-இரும்பு கலவையை' (Ultra-dense Carbon-Iron Alloy) உருவாக்க எனக்கு ஏழு ஆண்டுகள் பிடித்தன. இந்த அக்னி-செல்லின் வெளிப்புறக் கூடு, உள்ளிருக்கும் சிறிய எஞ்சின் அனைத்துமே இந்த புதிய உலோகத்தால் தான் செய்யப்பட்டவை."

"எனவே, நான் ஒரே நேரத்தில் இரண்டு மகத்தான கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறேன்—ஒன்று உடைந்தே போகாத ஒரு புதிய 'உலோகக் கலவை', மற்றொன்று 'முடிவில்லா அணு ஆற்றல் பேட்டரி'. எனக்கு ஒரே ஒரு கண்டுபிடிப்புக்கான விருது போதாது, இந்தியாவை உலக எரிபொருள் சந்தையில் முதலிடம் பிடித்து, உலகின் தலையாய     நாடாக்கும் இந்த கண்டு பிடிப்பிற்கு 'இரட்டைக் கண்டுபிடிப்புக்கான' (Double Invention) அங்கீகாரமே தரப்பட வேண்டும்!"

அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. சுந்தரத்தின் பார்வை சர்வதேச பிரதிநிதிகளைச் சென்றடைந்தது.

"நமது சமூகத்தில் ஒரு பழக்கம் உண்டு," என்றார் ஆழமான தொனியில். "ஒரு வெளிநாட்டவர் எதைக் கண்டுபிடித்தாலும், அதில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் நாம் அதை உடனே தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறோம். ஆனால், இந்தியாவில்—நம்ம சென்னையில்—ஒரு பேனா முனை அளவு சாதனை நிகழ்த்தப்பட்டாலும், அதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம். இந்த அடிமைத்தனமான மனநிலையை நாம் என்றைக்கு மாற்றப்போகிறோம்?"

எதிர்ப்பு தெரிவித்த வல்லுநர்கள் தங்கள் தவறையும், சுந்தரத்தின் அறிவாற்றலையும் உணர்ந்து தலைகுனிந்தனர். விழா மேடையில் ஏற்பாட்டாளர்கள் சுந்தரத்திற்கு உரிய மரியாதையை வழங்கினர்.

"இந்தக் கண்டுபிடிப்பு முழுமையாகவும், எவ்வித ஆபத்துமின்றியும் பாதுகாப்பானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக டாக்டர் சுந்தரத்திற்கு இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics) கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்; அதற்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையை நாங்கள் உடனடியாகச் செய்கிறோம்!"

ஒரு பெண்ணின் கோபம்

நம்ம பெங்களூரு மெட்ரோவில்  ஏறினாலே ஒரு தனி அனுபவம் தான். அன்னைக்கும் அப்படித்தான், கே.ஆர்.புரம் ஸ்டேஷன்ல வண்டிய பிடிச்சு ஹூடி நோக்கிப் போயிட்டு இருக்கேன்.


ரயிலில் ஒரே கூட்டம். ஆனா அதிர்ஷ்டவசமா யாரோ ஒருத்தர் எழுந்து போகவும், எனக்கு அந்த கண்ணாடித் தடுப்பு ஓரமாக ஒரு சீட் கிடைச்சது. நிம்மதியா உட்கார்ந்தேன். எனக்கு அடுத்து ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். அவருக்கு பக்கத்துல அவரோட கணவன், அப்புறம் அவங்களோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க வரிசையா உட்கார்ந்திருந்தாங்க.


பொதுவா மெட்ரோவுல நமக்கு பக்கத்துல ஆள் உட்காரும்போது, ஆணோ பெண்ணோ ஒரு ரெண்டு இன்ச் இடைவெளி விட்டு உட்காருவது வழக்கம் தானே? அப்படித்தான் எனக்கும் அந்த பெண்ணுக்கும் நடுவுல ஒரு ரெண்டு இன்ச் இடைவெளி இருந்தது.


அந்தப் பெண்மணிக்கு ஒரு 45 வயசு இருக்கும். ஒல்லியா, மாநிறமா, பாக்குறதுக்கு ஒரு கிராமத்துப் பெண் போல இயல்பா இருந்தார்.


திடீர்னு அந்த ஆளு தன் பொண்டாட்டி கிட்ட ஏதோ தாழ்ந்த குரல்ல சொன்னான். என்ன சொன்னான்னு தெளிவா கேட்கல, ஆனா அவனோட வார்த்தைகள் அந்த அம்மாவோட மூஞ்சிய அப்படியே மாத்திடுச்சு. ஒரு கணத்துல அவங்க முகம் சுருங்கி, கோபமும் சுள்ளென எகிறின ஒரு வெளிப்பாடு.


அடுத்த கணமே, அந்த அம்மா மெல்ல என் பக்கமா நகர ஆரம்பிச்சாங்க. அந்த ரெண்டு இன்ச் இடைவெளியை கடந்து, இன்னும் ஒரு ரெண்டு இன்ச் என் பக்கம் நெருங்கிட்டாங்க. வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு இது பெருசா தெரியாது.


ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் மெட்ரோ வேகம் குறையும் போது, உடம்பு லேசா முன்னாடியோ பக்கவாட்டிலோ தன்னிச்சையா நகர்வது இயல்புதானே? அப்படி பிரேக் போடும்போதெல்லாம் என்னை நோக்கி நகர்ந்து வந்தவள், அதுக்கப்புறம் பழையபடி தன் இடத்துக்குத் திரும்ப நகரவே இல்லை!


கண்ணாடித் தடுப்பு சுவர்ல என்னை அப்படியே அமுக்குற அளவுக்கு நெருங்கி வந்து உட்கார்ந்துட்டாங்க. அவங்களோட மென்மையான தொடைகளின் அழுத்தம் என் தொடையில பலமாகவே பட்டது. உடம்பு சூடு சட்டையைத் தாண்டி அப்படி உறைச்சது. 'ஐயோ, என்னடா இது!'னு எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு.


எனக்கு அது ஒரு சாதாரண தொடுதல் மட்டுமே. ஆனா அவங்களுக்கு? அது ஒரு சத்தமில்லாத புரட்சி! தன் புருஷனைப் பழிவாங்கும் ஒரு நுட்பமான வழி. அவ புருஷனுக்கும் அது நல்லாவே புரிஞ்சிருக்கும். ஏன்னா, அவன் அமைதியா தலைகுனிஞ்சு உட்கார்ந்திருக்க, அந்த அம்மாவோட முகத்துல 'உனக்கு நல்ல பாடம் புகட்டிட்டேன்'ங்கிற மாதிரி ஒரு மெல்லிய புன்னகை அரும்பியிருந்தது.


ரெண்டு ஸ்டேஷன் தான்... ஹூடி வந்துடுச்சு. மெல்ல எழுந்து, அந்த அழுத்தத்துல இருந்து விலகி வண்டிய விட்டு இறங்கினேன். இறங்கி பிளாட்பாரத்துல நின்னு பாக்கும்போது, ரயில் கதவு மூடிடுச்சு. அந்த அம்மா அதே புன்னகையோட, அடுத்த ஸ்டேஷனை நோக்கி அந்தப் பயணத்துல போயிட்டே இருந்தாங்க.


நான் வீட்டிற்கு நடந்து போயிட்டு இருக்கும்போது யோசிச்சேன்... பொம்பளைங்களோட கோபமும், அதை அவங்க வெளிப்படுத்துற இந்த மாதிரி விசித்திரமான வழிகளும் உண்மையிலேயே புதிரானதுதான்!

Tuesday, June 09, 2026

ஹஸ்தல விஸ்தா

 

அவ்வப்போது சில வார்த்தைகள் மனதில் நிற்கும்.  யாராவது.. அது பற்றி பேசினால் மகிழ்ச்சியாக இருக்கும் .  

இன்று காலை அது போல ஒன்று நடந்தது.. அலுவலகத்தில் ஒரு பெண்ணின் அலை பேசியில் தகவல் தரும் சப்தம் ஒலித்தது.  அஸ்தல விஸ்டா என்று.
அந்தப் பெண்ணிடம் இந்த ஒலியை ஏன்  வைத்திருக்கிறாய் என்று கேட்டேன்.  ஏதோ ஒரு காரணம் சொன்னாள்.  புரியாத ஒரு வார்த்தையை வைக்க வேண்டும் என்று.

இந்த வார்த்தை ஒரு ஸ்பானிஷ் மொழி வார்த்தை.  குவாடமாலா  நாட்டிற்கு போயிருந்த போது  இது போன்ற பல வார்த்தைகளை அன்றாட செயல் பாடுகளை எளிதாக்குவதற்காக கற்றுக் கொண்டேன். 

ஆர்னோல்டு சுவார்செனேகர் ஒரு திரைப்படத்தில் இந்த வார்த்தையை பயன் படுத்தி இதை மிகவும் விளம்பரப் படுத்தி இருப்பார்.  டெர்மினேடர் 2 என்று நினைவு.. ஹஸ்தல விஸ்தா பேபி என்று திரும்ப திரும்ப சொல்லுவார்..
முதல் இரண்டு வார்த்தைகள் தான் ஸ்பானிஷ் மற்றது ஆங்கிலம் என்று ஒரு முறை யாரிடமோ சொல்லி அவர் முறைத்த பிறகு தான் புரிந்தது.  

இந்த வார்த்தைக்கு மீண்டும் சந்திக்கும் வரை என்று பொருள் கொள்ளலாம்.  ஹஸ்தா (h உச்சரிப்பில் வரும் )  என்றால் (அது )வரை .  இந்த வார்த்தைக்கு (மீண்டும் ) பார்க்கும் வரை.. சந்திக்கும் வரை என்று பொருள்

ஸ்பானிஷ் மொழியிலே ஹஸ்தா என்பதன் பின்னால்  லூயேகோ (அப்புறம் பார்க்கலாம்)  , ப்ரோன்டோ  (விரைவில் ), மன்யானா (நாளை) என்பது போல வரும்.

தமிழில் சிலர் “வரேன்”  என்றோ “பார்க்கலாம்” என்றோ கூறுவார்கள். போய்விட்டு அல்லது மீண்டும் என்ற வார்த்தைகள் ஒளிந்து கொண்டிருக்கும்.

ஹஸ்தா என்பது தமிழில் சிலரது பெயராகவும் இருக்கிறது.. ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்..

ஹஸ்தம் என்றால் கை என்றும் பொருள் படும். அபய  ஹஸ்தம் என்பது கடவுளின் அருள் வழங்கும் கை.  

ஒரு சிறிய வார்த்தை தான். நிறைய சிந்தனைகளைத் தூண்டி விட்டது.

Friday, November 01, 2024

சைக்கிள்

 தீபாவளிக்கு 4 நாள் முன்னால்.  10 வருடங்களுக்கு முன்னால். என்  பெண் மற்றும் பிள்ளைக்கு திருமணம் ஆவதற்கு முன்னால்..  இத்தனை முன்னால் களுக்கு முன்னால் , ஒரு இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய ஒரு சைக்கிளால் விளைந்த கதை.

திடீரென்று ஃப்யூஸ் பெட்டியிலிருந்து புகை வந்தது.. உடனே எலெக்டரிசியன்.  தீபாவளி அவசரத்தில் யாருமே கிடைக்க வில்லை.. பக்கத்து வீட்டு பெரியவர் ஒரு தொலைபேசி எண்ணைக்  கொடுத்தார்..

அவனை அழைத்து அவன் வருவதற்கு முன்னால், “சுருக்”காக என் சைக்கிளின் கதை.

நான் சிறுவனாக இருந்த  போது, எங்கள் ஊரில் சைக்கிள்கள்தான் முக்கிய பயண வாகனம். எல்லாரிடமும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டதோ இருக்கும்.

எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தா என்று தந்தையை தொந்தரவு செய்து ஒரு நாள் “வா போய்  வாங்கிக் கொண்டு வரலாம்” என்று சொன்னார்.  கடைத் தெருவுக்கு போவார் என்று பார்த்தால், கடைசி வீட்டின் கதவைத் தட்டினார். 

ஒரு பெரியவர் வெளியே வந்து, வா ஸ்வாமிநாதா , இவன் தான் உன் பிள்ளையா என்று கேட்ட படி கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

பரஸ்பரம் உபசாரம் முடிந்த பிறகு, இந்த ரூமில் இருக்கிறது. போய்  எடுத்துக் கொள் என்று சொல்லி கை  காட்டினார்..

ஒரு புதியதும் இல்லாத ஆனால் பயன் படுத்திய அறிகுறியே தெரியாத ஒரு சைக்கிள் அங்கே இருந்தது. கிடைக்காத பொருள் கிடைத்த பெருமை , சந்தோஷம், கொஞ்சம் வருத்தம் (புத்தம் புதுசு இல்லையே), எல்லாம் நிறைய, அதை ஒட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
அன்றிலிருந்து நான் அந்த சைக்கிளை ஒரு முறையாவது  ஓட்டாத நாட்கள் குறைவு.. சென்னைக்கு வந்ததும் இங்கேயும் எடுத்து வந்து விட்டேன்.
அந்த சைக்கிளில் ஸ்ரீ ராம்  என்று ஆங்கிலத்தில்  பாத்திரங்களில் பொறிப்பது போல பொறித்திருக்கும். 

நான் ஸ்ரீராமும் நானுமா கடைத்தெரு வரை போய் விட்டு வருகிறேன் என்று சொல்லும் போது என் மனைவி, பின் என் குழந்தைகள் எல்லாரும் ஒரு மாதிரி சிரிப்பார்கள்.  

என் வீட்டில் 5 ஆவது உருப்படி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ரொம்ப நேரமாக எலெக்ட்ரீஷியன் வரலையே என்று என்  மனைவி என்  சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்தாள் . வெளியில் போய நின்றதும் என்  வயதை ஒத்த ஒருவர் என்னிடம் வது 18 ம் நம்பர் வீடு இது தானா என்று கேட்டார் .. ரொம்ப தெரிந்த முகமாய் இருந்தது..

ஆமாம், நீங்கள் தான் எலெக்ட்ரீஷியனா என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தோம்.. வாசலில் நின்ற சைக்கிளை பார்த்து விட்டு, அவர் நின்று விட்டார்.

உள்ளே வாங்க என்று சொன்னதும், அரை மனசாக அந்த சைக்கிளைப் பார்ப்பதை விட்டு விட்டு பிரியா மனமில்லாமல் வருவது போல உள்ளே வந்தார்..

அடுத்த 30 நிமிடங்களில் வேலையை முடித்து விட்டார்.  என்னிடம் பணம் பெற்றுக்கொள்ளும் பொது , “சார் தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த சைக்கிள் உங்களிடம் எப்படி?” என்று கேட்டார்.

நான் உடனே ஏன்  அய்யா  ஏதாவது பிரச்சினையா என்று கேட்டேன். 

அவர் கண்களிலிருந்து கண்ணீர் போல போல வென்று கொட்டியது..

ஏதோ பழைய ஞாபகம் போல என்று நினைத்து.. அழுவாதீங்க அய்யா  , இங்க உட்காருங்க என்று சோபாவில் உட்கார வைத்தேன்.

பிறகு அவர், சார் இது என்னுடைய சைக்கிள் என்று சொன்னார்.

இல்லையே அய்யா, இருக்க முடியாதே.. 25 வருடமாக என்னிடம் தானே இருக்கிறது என்று சொன்னேன்.

நீங்கள் பரசுராமபுரமா, என்று கேட்டார்..

"அது தான் எங்க ஊர். ஆமாம், உங்களுக்கு அங்க யாரையாவது தெரியுமா?" 

"நானும் அதே ஊர் தான் , வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். அப்புறம் திரும்ப போக வில்லை."
"இந்த சைக்கிள் என்  தந்தையார் எனக்கு பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலாவதாக வந்ததற்காக வாங்கித் தந்தது.. அதில் போட்டிருக்கும் ஸ்ரீராம் என்ற பெயர் என் பெயர்தான். 
கடைத் தெருவிற்கு அழைத்துச் சென்று பாத்திரக் கடையில் என் பெயரை சைக்கிளில் பொறித்து, இது போலவே எந்த வேலை செய்தாலும் அதில் முதன்மையாக சிறப்பாக செயல்படவேண்டும் என்று சொன்னார்.  அருகில் ஏன் மனைவி முறைத்தால். பேச்சை மாற்றும் விதமாக, மிக அருமையாக  வேலை செய்தீர்கள், எத்தனை வருடமாக இந்த தொழில் செய்கிறீர்கள் என்றேன்.  

"ஒரு முப்பது வருடம் இருக்கும்.. வேலை கற்றுக் கொண்டதும் தொடங்கியது.. இப்போது ஸ்ரீராம் எலெக்ட்ரிக்கல்ஸ் என்று கடைத்தெருவில் கடை வைத்திருக்கிறேன்.  வழக்கமாக நான் வரமாட்டேன். இன்று மற்ற பணியாளர்கள் தீபாவளிக்காக ஊருக்குப் போய் விட்டதால், நானே வந்தேன்"

வேளச்சேரி பகுதியில் மிகப் பெரிய கடை.  இவன் சோடை போக வில்லை என்பது புரிந்தது. 

இந்த சைக்கிள் அந்த வீடு என்று ஒரு கணக்கில், ராமச்சந்திரன் சார் பையனா நீங்க என்று கேட்டேன். 

"ஆமாம் அவரைத் தெரியுமா?" 

"நானும் அதே தெருவில் தான் இருந்தேன். விளக்கு கம்பத்துக்கு பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில்  ருக்குமே அந்த வீடு." 

ஸ்வாமினாதன் சார் பையனா? நீங்க என்று உடனே வியப்புடன்  கேட்டார்.  "நான் உங்க அக்கா  சாந்தி செட். அவங்க நல்லா இருக்காங்களா?"

அக்கா என்னைவிட பன்னிரெண்டு  வயது பெரியவள்.  "நன்றாக இருக்கிறார்கள்,. பெங்களூரில் பையனுடன் இருக்கிறார்"

"உங்கப்பா இன்னும் அதே வீட்டில் தான் இருக்கிறார்" என்று சொன்னேன். 

 "அப்படியா, தயங்கிய படியே, நான் ஒரு சின்ன பிரச்சினையினால் ஊரை  விட்டு வெளியேறி விட்டேன்.  பல இடங்களில் சுற்றி, இந்த வேலையை கற்றுக் கொண்டு இங்கேயே இருந்து விட்டேன், வீட்டுக்கு சென்றால் உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன் இப்படி தறுதலையா ஓடி விட்டாயே என்று திட்டுவாரோ என்று பயம்.  திரும்ப ஊருக்கு போய் அவமானப் பட வேண்டாம் என்று விட்டுவிட்டேன் என்று சொன்னான்.

இருங்க அய்யா, சாப்பிட்டு விட்டு போகலாம் என்று சொன்னேன்.. பிறகு ஊரில் அப்பாவை தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னேன். அவர் பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை.. பிறகு வற்புறுத்தியதால் ராமச்சந்திரன் சார் வீட்டு போன்  நம்பர் கொடுத்தார். 


அங்கேயே இருவரையும் பேச வைத்தேன். நிறைய அழுதார்கள், அவர்கள் பேசியதில் “அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல இருக்குதுப்பா. நீதான் எல்லாரையும் கஷ்டத்துல விட்டு போயிட்ட .. என்பது கேட்டது.. உடனே ஊருக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி போனான். 

மாலையில் அக்காவிற்கு போன் போட்டு தகவல் சொன்னேன். அவன் கூட ரொம்ப வச்சுக்காதே என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டாள்.

அவளுடைய குரல், கட் செய்த அவசரம் எல்லாம் ஏதோ சொன்னது.  அப்போது தான் அவளுடைய திருமணம் ஒரே மாதத்தில் நிச்சயம் செய்து முடிக்கப் பட்டதும் நினைவுக்கு வந்தது.

 “இதெல்லாம் ரகசியம்”  என்று யாரோ சொல்வது போல இருந்தது.  சைக்கிள் என்னை பார்ப்பது போல ஹாண்டில் பார் திரும்பி இருந்தது.

உங்களுக்கு ஒரு இழவும் புரியாது என்று ஏன் மனைவி சொல்வதன் பொருள் புரிந்தது போல இருந்தது.


Saturday, March 05, 2022

நம்பிக்கை

 ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.


🌹 🌿 அப்போது பார்வதி கேட்டார் .

“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?

குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,

அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,

ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "

என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,

அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.

சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.

மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?

என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை

“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “

என வினவினார்.


🌹 🌿 "அவன் சொன்னான்”

எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.

கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.

நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.


🌹 🌿 " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."

"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை


🌹🌿"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""

Thursday, March 03, 2022

நேர்மை கூட ஒரு வரப்பிரசாதம்..

 நேர்மை கூட ஒரு வரப்பிரசாதம்..


ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப் போனான்.


ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு ஓட்டி வந்தான்.


ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 


வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.


அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.


தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..


ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்துப் பார்த்தான்.


அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.


அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி வந்து அதைக் காண்பித்தான்.


உடனே வியாபாரி, "அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்"னு சொல்லி புறப்பட்டான்.


பணியாளோ, "ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நாமே வைத்து கொண்டால் என்ன? தாங்கள் அதிகமாக வைத்துக் கொண்டு எனக்கு கொஞ்சமாகக் கொடுங்கள்" என மிகவும் வற்புறுத்தினான்.


வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் ஒட்டக வியாபாரியைப் பார்த்து ஒப்படைக்கப் புறப்பட்டுப் போனான்.


ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, "உங்கள் நேர்மையை நான் பெரிதும் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள்" என்று நீட்டினான்.


அதற்கு அந்த வியாபாரியோ சிரித்துக் கொண்டே " உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் எடுத்து வைத்து கொண்டேன் " என்றான்.


உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.


உடனே அந்த வியாபார-

" நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

*1. எனது நேர்மை

2. எனது சுயமரியாதை

*என்றான் கம்பீரமாக 

சிறிது கர்வமாகக் கூட*


*நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்


*வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.


*நேர்மை கூட ஒரு போதை தான், அதை அனுபவித்து விட்டால், அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாது - ஆனால் மன நிம்மதி கிடைக்கும்..


நேர்மை ஒரு வரப்பிரசாதம்..

கோபாலா கோபாலா

 மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது


கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்


இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்


யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்


யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்


அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது


தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை


அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்


அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது  பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்


12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என  12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்


ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்


அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்


அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது


பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்


இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது


ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது


இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்


ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என  உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று


அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா"


அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்


இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது


புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்


இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது


அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது


இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்


இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு


சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம்  அதனை தொடர்ந்தது


சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்

இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று


இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்


தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்


சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?


ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது


பின்குறிப்பு: யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு.


(நன்றி: திரு ஸ்டான்லி ராஜன்)

Tuesday, May 19, 2020

தேவாரம் நான்காம் திருமுறை முதற் பதிகம் பாடல் 1.

அப்பர் என்று அழைக்கப் படும் திருநாவுக்கரசர் யாத்த பாடல்கள் 4, 5 மற்றும் 6ம்  திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன.

அவர் எழுதிய முதல் பதிகத்தை இப்பதிவில் காண்போம். 

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்; கொடுமை பல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன், அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.

பொருள்:

திருக்கெடில ஆற்றின் வடகரை  திருவதிகை என்னும் வீரட்டானத் தலத்தில்  எழுந்தருளியிருக்கும் தலைவனே! இந்தப் பிறவியில் அறிந்து கொடுஞ் செயல்களைச் செய்ததாக  எனக்குத் தோன்றவில்லை. அப்படியும் கொடிய சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வண்ணம்  என் வயிற்றினுள் குடலாடு ஏனைய உறுப்புக்கள் செயற்படாமல் முடக்கி பெரும் வழி ஏற்படுத்துகிறது.  அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போன்ற  அந்நோயைக்  நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். 
******************************************

திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று.
அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது.
அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன்.

இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்.
`
வேற்றுச் (சமண) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்.

இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது;

பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை
மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?

``வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`

என்று அருளினார் பின்னர்  சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார்

முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்.
திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?
மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?

இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?
மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)
இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?
மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!.
இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?
மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்.
இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?
மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்.

கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்.

கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து.

கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி.

கொடுமை - கொடுஞ்செயல்.
ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; `

சூலை நோய் (வயிற்று வலி) நீங்க அருள் புரியும் திருவதிகை. நடுநாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 7-வது தலமாக விளங்குவது திருவதிகை. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு திருவதிகை இறைவனை மனமுருகி பதிகம் பாடி, திருநாவுக்கரசர் தனது வயிற்று வலி நீங்கி அருள் பெற்ற தலம்.

தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவாமூர் என்ற ஊரில் ஒரு சைவக் குடும்பத்தில், புகழனார் -  மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலகவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர்.

மருள்நீக்கியார் வளர்ந்து தனது இளமைப் பருவத்தில் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து, தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். 

தமக்கை திலவதியாரோ, தனக்கு மணம்புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார், ஒரு போரில் இறந்துபோக, இனி தனக்குத் திருமணம் வேண்டாம் என்று வெறுத்து, சைவ சமயம் சார்ந்து திருவதிகை சிவஸ்தலத்தில் இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.

தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரியவேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. அவர் தங்கியிருந்த சமண மடத்தில் செய்யப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல், தன்னுடைய தமக்கை இருக்கும் திருவதிகை சென்று முறையிடுகிறார்.

தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி, திருவதிகை இறைவனிடம் அழைத்துச் சென்று, அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி, இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும், கூற்றாயின வாறு விலக்ககிலீர் என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப்பெற்றார்.

Sunday, May 17, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம், பாடல் 11.

முதல் திருமுறை, முதல் பதிகம், பதினொன்றாவது பாடல்:

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய    
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை    
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த    
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே.    


அருஞ்சொற்பொருள்:

 அலர்=மலர், இங்கே தாமரை மலரைக் குறிக்கும்;
அருநெறி=அருமையான நெறி.

அருநெறியமறை வல்லமுனி - அருமையான நெறி களை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். 
ஒருநெறியமனம் - ஒன்றுபட்ட மனம். 
மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள்.  
திரு நெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். 

தொல் வினை - பழமையாகிய வினை; "போய  பிழையும் புகுதருவான் நின்றனவும் " என்று ஆண்டாள் சொன்னது போல ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக கூடிய  பிராரத்த சேடத்தையும். பழ வினைகள்  தீரினும் பிராரத்த சேடம் அனுபவித்தே தீர  வேண்டியதாக உள்ளதால், நான் அனுபவிக்கிறேன்  என்ற எண்ணமின்றிக் கழிக்கப்படும்  என்பதால் பழ வினை களைதலே இப்பாடலின் பலனாய் கொள்ளலாம்.

மேற்கூறிய பாடல்களில் பெருமானின் பல பெருமைகளை எடுத்துரைத்த சம்பந்தர், இந்த பாடலில் மனம் ஒன்றி பெருமானை வழிபட வேண்டுமென்று உணர்த்துகின்றார்.

இந்த பாடலில் சம்பந்தர், பதிகத்தைப் பாடுவதால் விளையும் பலன்களை எடுத்துக் கூறுகின்றார். இவ்வாறு அனைத்துப் பதிகங்களிலும், அந்த பதிகங்களைப் பாடுவதால் விளையும் பலன்களை குறிப்பிடுவதால், சம்பந்தர் அருளிய பதிகங்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப் படுகின்றன.

பல வடமொழி தோத்திரங்களில் பலஸ்ருதி என்று அந்த தோத்திரங்களைச் சொல்வதால் விளையும் பலன்கள் உணர்த்தப் பட்டுள்ளதை நாம் அறிவோம். காரைக்கால் அம்மையாரும் தனது பதிகங்களில் கடைப் பாடலில், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பயனை குறிப்பிடுகின்றார்.தேவாரப் பதிகங்களுக்கு காலத்தால் முந்தையது காரைக்கால் அம்மையார் அருளிய பாடல்கள். அம்மையார் அருளிய கொங்கை திரங்கி என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் நட்டபாடை பண்ணிலும் எட்டியிலவம் என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் இந்தளம் பண்ணிலும் அமைக்கப் பட்டுள்ளன. அம்மையாரை பின்பற்றி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தரும் சுந்தரரும், அவர் அருளிய நட்டபாடை மற்றும் இந்தளம் பண்களில் தத்தமது முதல் பாடல்களை அமைத்துள்ளது அம்மையாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

பொருள் :



அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் அவனை உணர்ந்து தியானித்து ஞானாசம்பந்தர் உரைத்த சிறந்த தமிழ் வேதமாகிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களின் பழவினைகள் எளிதினில் தீர்ந்துவிடும்.  

ஞானசம்பந்தரின் தந்தையார் கேட்ட கேள்விக்கு, யார் கொடுத்த எச்சில் பாலினை உண்டாய் என்ற கேள்விக்கு, விடை அளிக்கும் முகமாக மொழிந்த பதிகம் என்பதால், தனது  தந்தையார் கேட்ட கேள்வியையோ, பால் கொடுத்தவர் என்று குறிப்போ இந்த பதிகத்து பாடல்களில் காணப்படவில்லை.

இந்த பதிகத்தை நாம், பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தந்தையார் கேட்ட கேள்வியுள் பாலைக் குடித்த விடயம் அடங்கியுள்ளது எனவே அந்த கேள்வியுடன் நாம் இந்த பதிகத்தில் சொல்லப்படும் பதிலை இணைத்துக் கொள்ளவேண்டும்.

உமையம்மை தனக்கு அளித்த பொன் கிண்ணத்தில் இருந்த பால் பற்றியும், அயலாரிடம் பால் உண்டதற்காக கோபித்துக்கொண்ட தந்தை பற்றியும் கூறி தன்னை ஆட்கொண்ட அப்பனையும் அம்மையையும் நினைவு கூறுகிறார்.

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள் என்ற தலைப்பின் கீழ் தோடுடைய செவியன் என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் பதிகமும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகமும் பித்தா பிறைசூடி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும்  வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பதிகங்களும் தேவார ஆசிரியர்கள் பாடிய முதல் பதிகங்கள் ஆகும்.

இவை முறையே முதல், நான்காம் மற்றும் ஏழாம் திருமுறைகளில் முதல் பாடலாக அமைந்துள்ளன. கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர் அப்பர் பிரானுக்கு உலகத்தின் குருவாகிய இறைவனின் அருள் கிடைத்து, சூலை நோய் அவரை விட்டு நீங்கியது; சுந்தரரும் திருஞான சம்பந்தரும் இறைவன் அருள் பெற்ற பின்னர் பாடிய முதல் பதிகங்கள் மற்ற இரண்டு பதிகங்கள். எனவே இந்த மூன்று  பதிகங்களையும் தினமும் பாடினால் குருவருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது., 

இயற்கை காட்சிகளை கவினுறக் கூறுவதில் சம்பந்தர்க்கு இணை சம்பந்தர் தான் என்று கருதும் அளவுக்கு, இயற்கைக் காட்சிகளை நயமாக எடுத்துரைப்பதை நாம் பல பாடல்களில் காணலாம். பாடலின் இரண்டு அடிகளில் பெருமானது பண்பு, மாண்பு, அவருடன் தொடர்பு கொண்ட பல புராண நிகழ்சிகளை ஆகியவற்றை குறிப்பிடும் சம்பந்தர் இரண்டு அடிகளில் இயற்கைக் காட்சிகளை குறிப்பிடுகின்றார்.

பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடிய பின்னர் திருக்கடைக்காப்பு பாடி, பதிகம் நிறைவு பெற்றதை உணர்த்தும் வண்ணம், பதிகம் அளிக்கும் பயன் மற்றும் தனது பெயரையும் சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டு இறைவனைத் தொழுது நின்றார்.

அப்போது வானத்தில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள், கின்னரர்கள் ஒன்று கூடி மலர்மாரி பொழிந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் திருஞானசம்பந்தர் திருக்கோயிலின் உள்ளே செல்ல, அவரது தந்தையாரும் அவரைத் தொடர்ந்து பின் சென்றார். அவரது கையில் இருந்த சிறு கொம்பு, பிள்ளையாரை மிரட்டுவதற்காக எடுத்த கொம்பு, அவரையும் அறியாமல் கீழே விழ, ஆனந்தக் கூத்து ஆடியவராய் பிள்ளையார் அருளிய பாடலினைக் கேட்கும் விருப்பும் வியப்பு கலந்த உணரவும் உடையவராய், சிவபாத இருதயர் இருந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.

உமையன்னை பால் ஊட்டிய நிகழ்ச்சியை நேரில் காணும் பேற்றினை பெறவில்லை எனினும், மூன்று வயதுக் குழந்தை பதிகம் பாடியதையும், தான் கேட்ட கேள்விக்கு பதிலாக இறைவன் அடையாளங்களை உணர்த்தி பாடியதையும் உணர்ந்த, சிவபாத இருதயர் நடந்த அதிசயம் இறைவனின் அருளால் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டார்.

விவரம் அறிந்த ஊர் மக்கள் பலரும், திருஞானசம்பந்தரை நேரில் காணும் விருப்பம் உடையவர்களாய்  திருக்கோயிலின் முன்னர் சூழ்ந்தனர். சம்பந்தப் பெருமான் மூலம் இறைவனது பண்புகளையும் பெருமையினையும் அறிந்து கொண்ட நாம், உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்பதை உணர்ந்து, திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் சென்று, பெருமானை வணங்கி, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.