Tuesday, August 18, 2026

மரம் வைத்தவன்

எங்கள் அலுவலகத்திற்கு இரண்டு கட்டிடங்கள் உண்டு. அன்றைய தினம், எதிரே இருந்த கட்டிடத்திற்கு சந்திரனைச் சந்திக்கச் சென்றேன்.


அவர்தான் என்னை இந்த நிறுவனத்திற்குப் பரிந்துரைத்து அழைத்து வந்தவர். வந்த சில நாட்களிலேயே அவரும் இதே நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக (Sr. VP) வந்து சேர்ந்துவிட்டார். நான் டெலிவரி தலையாகப் (Delivery Head) பணியாற்றிக் கொண்டிருந்தேன்.


அவர் வந்த நேரம், வேலைகள் எதிர்பார்த்தபடி வரவில்லை. அலுவலகத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. "பரவாயில்லை சார், பார்த்துக்கலாம், இதையெல்லாம் கடந்து வந்துடுவோம்" என்று நான் அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால், நான் எதையுமே பதற்றப்படாமல் 'கூல்' ஆகக் கையாளுவதால், எனக்குப் பொறுப்பு போதாது என்று அவர் எப்போதுமே நினைப்பதுண்டு.


இன்றும் அதே நிலைமைதான். நான் அவர் அறைக்குள் நுழைந்தபோதே அவர் முகம் பதற்றத்தைக் காட்டியது.


"ஆவணங்கள் எல்லாம் அனுப்பியாச்சா?" என்று கேட்டார்.

"அனுப்பியாச்சு சார்" என்றேன்.

"முதல் புராஜெக்ட் என்ன ஆச்சு?"

"இன்னும் மூணு நாள்ல முடிஞ்சிடும். போன வெள்ளிக்கிழமைதான் டெட்லைன், ஆனா திடீர்னு ஒரு கன்சல்டன்ட் விலகிட்டதால ஒரு வாரம் அவகாசம் கேட்டிருக்கோம் சார்..."


அடுத்து இன்னொரு புராஜெக்ட், அப்புறம் வேறொன்று... கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. என்னிடம் அனைத்துக்கும் தெளிவான பதில்கள் இருந்தன.


ஒரு கட்டத்தில், தன் வழக்கமான அறிவுரை மோடிற்கு மாறினார். நான் மெதுவாகச் சிரித்தபடியே, "நீங்க அதையெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க சார்... எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்றேன்.


அவருக்கு என் பதில் எரிச்சலையூட்டியது. "சரி வாங்க சார், கீழே போய் ஒரு கப் காபி குடிச்சுட்டு வருவோம்" என்று அவரை அழைத்தேன்.


காபி ஷாப்பில் காபி கோப்பையைக் கையில் ஏந்தியபடி டிவி யில் ஓடிக்கொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்தபடி அவரிடம் கேட்டேன்: "சார், உங்க வாழ்க்கையில நீங்க திட்டம் போட்டபடி எல்லாமே அப்படியே கச்சிதமா நடந்துடுச்சா?"


"ஆமாம், எல்லாமே நான் திட்டமிட்டபடிதான் நடந்தது" என்றார் பெருமையாக.


"அப்படியா? நீங்க முதல்ல வேலைக்குச் சேரணும்னு எவ்வளவு நாள் பிளான் பண்ணீங்க?"


"இல்லை... அது கேம்பஸ் இன்டர்வியூல கிடைச்சது. ஆனா நான் கேம்பஸுக்குத் தயாரா இருந்தேன்..."


"சரி, நீங்க படிக்கணும்னு ஆசைப்பட்ட காலேஜ் இதுதானா?"


"இல்லை... நான் ஐ.ஐ.டி-ல எனக்குப் பிடிச்ச குரூப் கிடைக்கும்னு நினைச்சேன், கிடைக்கல. அதனாலதான் இந்த காலேஜ்ல சேர வேண்டியதா போச்சு..."


"சரி, ரஜினியைக் கல்யாணம் பண்ணிப்போம்னு முன்னாடியே திட்டமிட்டீங்களா?"


"ச்சே ச்சே... அது திடீர்னு முடிவான கல்யாணம். பொண்ணு பார்த்து ரெண்டு வாரத்துல கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு. என் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததால அவசரமா முடிச்சோம்..."


நான் சிரித்தேன். "இந்த மூணு உதாரணத்துலயும், நிகழ்வுகள் அது பாட்டுக்கு அதற்கென ஒரு வழியில நடந்திருக்கு. இதுல உங்க திட்டம்னு எதுவுமே இல்லை, நடப்பது நடந்த பிறகு அதற்கு ஒரு காரணத்தைச் சொல்லிக் கொள்கிறீர்கள், அவ்வளவுதான். அப்புறம் ஏன் சார் சின்னச் சின்ன விஷயத்துக்கும் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? இதுனால பி.பி ஏறும்... அது ஒண்ணுதான் மிஞ்சும்."


அவர் என்னை ஒரு மாதிரி ஏற இறங்கப் பார்த்தார்.


வயதில் அவர் என்னை விடப் பத்து வருடங்கள் சிறியவர். நான் ஓய்வுபெறும் வயதைக் கடந்த பிறகு இங்கே வந்திருப்பவன்.


"வாழ்க்கையில நாம எதையுமே நகர்த்துவது இல்லை சார். நாம எல்லாரும் தலைவிதி என்கிற பாதையில பயணிச்சுக்கிட்டு இருக்கிற பயணிகள், அவ்வளவுதான். நாம செய்யுற நல்ல காரியங்கள் அடுத்தடுத்து வர்ற சோதனைகளைக் கொஞ்சம் தளர்த்தலாம். நாம செய்யுற தவறான காரியங்கள் அடுத்தகட்டப் பயணத்தைக் கடினமாக்கலாம்.


நான் அடிக்கடி சொல்வது உண்டு—நான் எப்போதெல்லாம் மது அருந்துகிறேனோ, அப்போதெல்லாம் புராஜெக்ட்டை விட்டு சீக்கிரமே வெளியேறி விடுவேன். யாரையாவது தேவையே இல்லாம கத்தி திட்டினா, அடுத்த நகர்வுல என் உடம்புல ஏதோ ஒரு இடத்துல அடிபடும். அதுவே யாருக்காவது ஒரு உதவி செஞ்சா, அன்னைக்கு நாள் அமைதியா ஓடும். நாம செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான்... மத்தபடி நடப்பதெல்லாம் நடக்கும், நாம அதைக் கடந்து போய்க்கிட்டே வேண்டியதுதான்" என்றேன்.


"உங்களை திருத்தவே முடியாது!" என்றார் சற்றே சலிப்புடன். "உங்களுக்கு ஜெயிக்கணும்ன்ற வெறியோ, போராடுற மனப்பாங்கோ இல்லை. முயற்சியும் உழைப்பும் தான் ஒருத்தனை ஜெயிக்க வைக்கும். உங்களுக்கு ரொம்பவே லேசி (laid-back) ஆட்டிட்யூட்!". பு ம் ரா தொலைக்காட்சியில் பந்து வீச வந்தார்.


நான் புன்னகையுடன், "பும்ராவையும் பந்தையும் யோசிச்சுப் பாருங்க சார்..." என்றேன்.


அவர் புருவங்களை உயர்த்தினார்.


"பும்ரா கையில இருந்து பந்து கைமாறி காத்துல பறக்கும்போது, 'நான் இன்ஸ்விங் ஆகப்போறேனா இல்ல அவுட்ஸ்விங் ஆகப்போறேனா'ன்னு அந்தப் பந்து யோசிக்குமா என்ன? பந்தை வீசினது பும்ரா... அது எப்படி நகரணும்னு தீர்மானிச்சதும் பும்ராதான், பந்து இல்ல. நாம வெறும் பந்துதான் சார்... அதை வீசுற பவுலர் கடவுள்."


"அப்போ நாம முயற்சி செய்யவே கூடாதா? வாழ்க்கையை வாழ நாம என்னதான் முயற்சி செய்றது? அப்புறம் நாம செய்யுற நல்ல காரியங்கள் அடுத்தகட்ட சோதனையைக் குறைக்கும், கெட்ட காரியங்கள் கஷ்டமாக்கும்னு சொன்னீங்களே... அது இந்த பும்ரா - பந்து உதாரணத்துல எங்க வருது?" என்று யோசனையுடன் கேட்டார்.


"சொல்றேன்..." என்றேன். "புதுப் பந்தா இருக்கும்போது அதுக்கு வீரியமும் சக்தியும் அதிகமா இருக்கும். அது இயல்பாவே ஸ்விங் ஆகும். அதுவே 45 ஓவர் பழைய பந்தா மாறும்போது, பவுலருக்குத் தெரியும்—இனி இதை சாதாரணமா ஸ்விங் செய்ய முடியாது, ரிவர்ஸ் ஸ்விங் தான் பண்ணணும்னு.


அந்தப் பந்தோட தற்போதைய நிலைமை என்னவோ (State of the ball), அதற்கு ஏத்தபடிதான் பவுலரோட நகர்வு இருக்கும். அதேபோலத்தான் நாம செய்யுற நல்வினைகளும் தீவினைகளும் நம்முடைய நிலையை (State) தீர்மானிக்குது. அந்த நிலைதான் நாம சந்திக்கப் போற அனுபவத்தின் ஆழத்தையும்—அது இன்பமா அல்லது துன்பமா என்பதையும் தீர்மானிக்கிறது. நாம நல்ல விஷயங்களைச் செய்யும்போது நம்ம அனுபவத்தின் பாரம் மென்மையாகுது; தவறான காரியங்களைச் செய்யும்போது அதன் வேதனை அதிகமாகுது.


வாழ்க்கையில ரெண்டு விதமான சூழல்கள் வரும். சில நேரம் காரியங்கள் கைைகூடாமல் போகும்போது, இறைவன் நம்மைக் கூடுதல் சோதனைகளுக்கு உள்ளாக்குகிறான் என்பதை உணர்ந்து, அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு அந்தச் சோதனையைக் கடக்க வேண்டும். இன்னொரு பக்கம், நமக்கு அதிக அதிகாரமும் செல்வமும் கிடைக்கும் இடத்தில நம்மை வைக்கும்போது, தலைக்கணம் கொண்டு தவறான வழியில் நடந்தாலோ அல்லது இறைவனைத் தூற்றினாலோ, வாழ்க்கை இன்னும் கடினமாகி ஆட்டமே கைமீறிப் போய்விடும்.


அதனால் எந்தச் சூழலிலும் உணர்ச்சிவசப்படாமல், 'சும்மா இரு' என்ற மத்திய வழியைப் (Middle Path) பின்பற்றுவதுதான் மிக முக்கியம். இன்பம் வந்தாலும் சரி, துன்பம் வந்தாலும் சரி... இரண்டிற்கும் தேவையின்றி எதிர்வினை ஆற்றாமல் (React பண்ணாமல்) அமைதியாகக் கடந்து போவதே சிறந்தது.


நமக்கு என்ன தேவை என்பதை இறைவன் அறிவான் என்ற நம்பிக்கையோடு வழியில் பயணிப்பதுதானே தவிர, அவனிடம் அடம் பிடிப்பதோ, கிடைக்கவில்லை என்று அவனைத் தூற்றுவதோ இல்லை. 'ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?'ன்னு எல்லாருமே கேட்குறாங்க. ஆனா, இறைவன் நம்மளை சந்தோஷமா வச்சிருந்தப்போ 'ஏன் எனக்கு மட்டும் இவ்ளோ சந்தோஷம்?'னு யாராவது கேட்டோமா? அவர் கொடுத்தப்போ ஏத்துக்கிட்டோம்... கொடுக்காதப்போ திட்ட ஆரம்பிச்சுடுறோம்."


அவர் என்னை ஒரு விசித்திரமான பார்வையோடு பார்த்தார். "எங்கிருந்துடா இவனை கூப்பிட்டு வந்தோம்னு இருக்கு!" என்பது போலிருந்தது அவர் முகம்.


"கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க... உங்களை இந்த வேலையிலயாவது தொடர்ந்து வைத்திருக்கட்டும். பாஸ் உங்களால கம்பெனிக்கு லாபம் இல்லை, பிரயோஜனம் இல்லைனு நினைச்சா, வேலை போயிடும்" என்றார்.


நான் சிரித்துக் கொண்டே, "அதுவும் அவன் விருப்பம்னா, அதுதான் நடக்கும் சார். ஆனா அப்பவும் என் மனநிலையை சரியா வச்சுக்கிட்டு, 'கடவுள் பெரியவன், என்னை கைவிட மாட்டான்'னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்" என்றேன்.


அவர் என்னை மேலும் விசித்திரமாகப் பார்த்தார். இருவரும் அமைதியாக அவரவர் அலுவலகக் கட்டிடங்களை நோக்கி நடந்து சென்றோம்.


எனக்குத் தெரியும்... அடுத்த வாரமும், அதற்கு அடுத்த வாரமும் இதே உரையாடல் மீண்டும் நடக்கும். இது ஒரு தொடர்கதை!

No comments: