Wednesday, July 29, 2026

சபலம்

திரு காலையிலிருந்தே கொஞ்சம் பரபரப்பாக இருந்தான். இன்று அவன் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். பார்த்துப் பார்த்து செய்த திருமணம் இன்று முடிந்து விடக் கூடும். காதலித்தது, கனவு கண்டது, குடும்பம் நடத்தியது எல்லாம் கண் முன் வந்து சென்றது. இவனுக்கு அனுராதாவை விட ஒரு நல்ல மனைவி கிடைத்து விட முடியாது. அவனும் அதை உணர்ந்திருந்தான். ஏதோ செய்யப் போய் ஏதோ ஆகி விட்டது.


திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆசை, காமம், வேலை, வெளிநாட்டுப் பயணம் என்று ஓடி விட்டது. ஒரு சலிப்பு தட்டும் அளவு இருவரும் சந்தோஷமாவே இருந்தார்கள். அப்போது தான் திடீரென்று சனியன் வாழ்க்கையில் எட்டிப் பார்த்தது ஒரு செயலி வடிவத்திலே.


அவனுடைய கல்லூரி நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு நண்பன் திருமணம் கடந்த அனுபவங்கள் பற்றி பேசப் போக, தீவிரமான தலைப்பாக மாறி, அவர் அவர்கள் யாரை எல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டார்கள் என்றும் வேறு என்ன முயற்சி செய்தார்கள் என்றும் இரண்டு மூன்று மணிநேரம் அதைப் பற்றி உரையாடினார்கள். தாய்லாந்து நாட்டில் மசாஜ், மாட்டாமல் தப்பிப்பது என்றெல்லாம் பேசும் போது, ஒரு செயலி  பற்றி ஒரு நண்பன் சொன்னான்... பக்கத்து வீட்டிலிருந்தாலும் மாட்டாமல் இருக்கலாம், உன் பெயர் கூட யாருக்கும் தெரியாது என்று சொன்னான். ஆசை யாரை விட்டது!


அது “கடித்த மாம்பழம்” என்று இந்தியில் பெயர் கொண்டிருந்தது. அணில் கடித்த மாம்பழமோ என்று நினைத்தேன். மாற்றான் வீட்டு மல்லிகை. சிரித்துக் கொண்டே திறந்து பார்த்தேன். காமம் ஒரு முறை ஒரே முறை என்று எழுதியிருந்தது. முயற்சி செய்து பாருங்கள், முழுவதும் அனுபவம். அனுபவமே கடவுள், அனுபவமே வாழ்க்கை. நண்பன் சொன்னான்... "எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது, தங்கமணி என்ஜாய்!"


மடிக்கணினியில் தரவிறக்கம் செய்து ஒளித்து வைத்தான். பிறகு மனைவி ஊருக்குப் போகப் போகிறாள் என்ற போது பயன்படுத்தினான். அவளும் அவன் போனது போலவே அவளது தோழிகளுடன் சேர்ந்து பெண்கள் மட்டுமான ஒரு சுற்றுலா திட்டமிட்டிருந்தாள். "ஒரு வாரம் உன் தொல்லை இல்லாமல் இருப்பேன்" என்று சொல்லி விட்டு, போகும் இடம் சொல்லாமல் காணாமல் போனாள்.


அந்த செயலியில் நான் கொடுத்த தேவைகளுக்கேற்ப ஒரு பெண் இருந்தாள். அவளுடன் பேசியதில் நிறைய பொருத்தங்கள் இருந்தன. முகத்தில் எமோஜி போட்ட புகைப்படம் நன்றாக இருந்தது. பெரிதாக மறைக்கவில்லை. வெள்ளி இரவு சந்திக்கலாம் என்று முடிவு... மகாபலிபுரம் தாண்டி ஒரு ரிசார்ட் பெயர் வந்தது. நான் இதுவரை போனதில்லை... கூகிளிடம் கேட்டதில் அது ஒரு கடற்கரை சார்ந்த தனியார் ரிசார்ட் என்று தெரிந்தது. ஆபத்து எதுவும் இருக்காது என்று முடிவு செய்து கிளம்பினேன்.


ஒரு இரண்டு மணிநேரம் வண்டியை ஓட்டிய பிறகு, ரிசார்ட் வாசலில் நின்றேன். காவலாளி அறை எண் கேட்டான். சொன்னேன். ஸ்பீக்கரில் போட்டிருந்த தகவலை பேசியில் "அனுராதா ஹியர்" என்று கேட்டது. அவன் தொலைபேசியை எடுத்து நான் வந்திருப்பதாக சொன்னான். (செயலியில் என் பெயர்: ராஜமகேந்திரன் 😊). காரை நிறுத்தி விட்டு நடந்து சென்று அறைக் கதவைத் தட்டினேன். ஒரு பெண் திறந்தாள். "அமருங்கள் மேடம் வந்து விடுவார்" என்று சொன்னாள். நான் தொலைக்காட்சியில் விஜய்-ரஷ்மிகாவை 'ரஞ்சிதமே' என்று கொஞ்சி கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என்மேல் ஏதோ விழுந்தது... தலையில் பட்டதும் மயக்கமானேன்.


இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் கண் விழித்த போது என் நண்பன் தான் அருகில் நின்றிருந்தான். "என்னடா?" என்று வினவினேன். “மச்சி, உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடிச்சிடா” என்றான். வரிசையாக எல்லாம் நினைவுக்கு வந்தது. அவனிடம் எதுவும் சொல்லி விடக் கூடாது என்று "அப்படியா?" என்று கேட்டு முடித்துக் கொண்டேன். இவனும் அந்த குழுவில் இருப்பவன்தான். தெரிந்தால் கிண்டல் செய்வான் என்று மறைத்து விட்டேன். அல்லது அப்படித் தான் நினைத்திருந்தேன்.


நினைவு வந்து விட்டது என்று தெரிந்த அடுத்த அரை மணியில் அகில உலகத்தில் இருந்த என்னுடைய அத்தனை பேரும் நேராகவோ, தொலைபேசி மூலமாகவோ என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்கள்... “மச்சி எப்படிடா?” அது விபத்து எப்படி என்பதல்ல, அந்த பெண்ணிடம் போனது எப்படி என்று. பிறகு நண்பன் சொன்னான்—அந்த ரிசார்ட் நிர்வாகி இவனுக்கு தொலைபேசி, நான் நினைவில்லாமல் கிடப்பதாகவும், அருகிலுள்ள சிறு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் சொன்னாராம். இவன் உடனே கிளம்பி இன்னும் இரண்டு பேரை துணைக்கழைத்துக் கொண்டு என்னை மீட்டு வந்த கதையை சொன்னான். அதில் துணைக் குறிப்பாக, எனக்கு பொறுப்பேற்று அந்த ரிசார்ட்டின் ஒரு பணிப்பெண் இருந்தாள் என்றும், அவள் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டாள் என்றும் சொன்னான்.


இது இப்படி இருக்க, மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். வீடு துடைத்தாற்போல் சுத்தமாக இருந்தது. என் பொருள்கள் எல்லாம் இருந்தது. அப்போது தான் கேட்டேன்... "என் மனைவிக்கு சொல்லவில்லையா?" என்று. "அவள் உன் எண்ணை பிளாக் செய்திருக்கிறாள்" என்று சொன்னான். நானும் என்முறையாக ஒரு முறை முயற்சி செய்தேன்; தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளுடைய ஒரு வாரம் முடிவடையவில்லை என்பதால் கிடைக்கவில்லை என்று நினைத்தேன்.


என் குடும்பத்தினர் ஊரிலிருந்து வந்து என்னை கவனித்துக் கொண்டனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் அவளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. திங்கள் கிழமை காலையில் கூரியரில் இடி வந்து இறங்கியது. திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதால் என்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றும், விவாகரத்து கோரியும் அவளது வக்கீல் விலாவாரியாக விளக்கி அறிக்கை அனுப்பி இருந்தார். 'தலை சுற்றியது' என்பது ஒரு மிக குறைந்த விளக்கம்!


என்னுடைய அம்மா உடனே அந்த கடிதத்தைப் படித்து விட்டு... "பரதேசி நாயே, லட்சணமா கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் உனக்கு ஒரு குரங்கு கேட்குதோ?" என்று அந்த கோப்பாலேயே இரண்டு அடி போட்டார். நான் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டேன். அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஒரு பெரிய சம்பந்தி சண்டையின் எல்லா வகைகளும் எங்கள் வீட்டில் காணக் கிடைத்தது. என் அம்மா தொலைபேசியிலேயே முழு சண்டையையும் துவக்கி விட்டார்கள். “உன் பொண்ணு ரொம்ப ஒழுங்கா? என் பிள்ளையை குத்தம் சொல்ல வந்துட்டீங்க... உன் பொண்ணுக்கு ஒரு சேலை கட்டத் தெரியாது!”


"சண்டை போடாதே அம்மா... எல்லாம் சரியாகி விட்டால், அப்புறம் முகம் பார்த்துக் கொள்ள முடியாது" என்று கூறினேன். அதற்கு அம்மா, "நீ அமைதியாக இருந்தால் எல்லா தப்பையும் உன்னுடையது என்று ஒப்புக் கொண்டதாகி விடும். இறங்கி அடி, சரியாகப் போனதும் எல்லாம் மன்னிக்கப்படும்" என்றாள். அக்கா வந்தாள், "இவர்களை எல்லாம் கவனிக்காதே... உன் மனைவி நல்லவள் என்று நம்பினால் அவள் காலில் விழுந்து விடு. அவள் தப்பைச் சொல்லாதே... உன் பேரில்தான் தவறு என்று கூறிவிடு, அவள் திரும்ப வருவாள். உன் பேரிலும் மரியாதை அதிகமாகும்" என்றாள்.


இரண்டு மணிநேரம் கழித்து என் மாமியார், மாமனார் உட்பட ஒரு 10 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். என்னை வாயில் வந்தபடி எல்லாம் திட்டினார்கள். அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது...


அன்றைக்கு என்னை அழைத்தது என் மனைவிதான்! நான் அந்த ரிசார்ட்டிற்கு அவளைப் பார்க்கத்தான் போயிருக்கிறேன். அவள் மறுபுற வாசல் வழியாக உள்ளே வந்து என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு, அங்கிருந்த ஏதோ ஒரு கனமான பொருளை என் மீது கோபத்தில் வீசியிருக்கிறாள். அதன் பிறகு கதை உங்களுக்குத் தெரியும். அவர்கள் என் மனைவியைக் கையும் களவுமாக எவளுடனோ பிடித்து விட்டதாகத்தான் சொன்னார்கள். எனக்குத் தெரியுமே என்ன நடந்திருக்கும் என்று...


ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்த அனுபவம் அப்போது அங்கே உதவியது. "நான் ஒரு பெண்ணைத் தேடிப் போனேன்... அவள் எதற்கு அந்த இடத்திற்கு வந்தாள்?" என்று ஒரே ஒரு கேள்வி கேட்டேன். பதில இல்லாமல் அனைவரும் திரும்பிப் போனார்கள்.


---


சிறிது நேரம் கழித்து நீதிமன்ற வளாகத்தில் அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நான் மெதுவாக அவள் அருகில் சென்று, தோளைத் தொட்டு, "அனு... ஒரு நிமிஷம் கேளு" என்றேன்.


அவளுடைய உறவினர்கள் குறுக்கிட வந்தனர். ஆனால், அவள் கை உயர்த்தி அவர்களைத் தடுத்து நிறுத்தினாள்.


நான் அவள் கண்களை நேராகப் பார்த்து மிருதுவாகப் பேசத் தொடங்கினேன். "நான் பண்ணது தப்புதான் அனு... ஏதோ ஒரு சபலம், யாரோ சொன்ன பேச்சுன்னு வழிமாறிட்டேன். ஆனா... நாம ரெண்டு பேருமே வெவ்வேற காரணத்துக்காக வெளியில ஏதோ ஒரு தேடல்ல இருந்திருக்கோம், இல்லையா? நான் பண்ண தப்புல ஒரு சின்ன ஆறுதல் என்னன்னா... அந்த செயலில தேடி நான் கடைசியா வந்து நின்னது உன்கிட்டதான். ஆனா..."


சிறிது இடைவெளி விட்டு, குரலை இன்னும் தாழ்த்தி, நுட்பமாகக் கேட்டேன்:


"*நான் தான் தப்புப் பண்ணி அந்த ஆப் வழியா உன்னைத் தேடி வந்தேன்னு வச்சுப்போம்... ஆனா, நான் தேடுற அளவுக்கு நீ எப்படிடி அதே ஆப்ல வந்து நினன?*"


அவள் அப்படியே உறைந்து போனாள். பதில் பேச முடியாமல் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.


நான் மெல்லிய புன்னகையுடன் தொடர்ந்தேன்: "நாம ரெண்டு பேருக்குமே ஏதோ ஒரு சலிப்பு இருந்திருக்கு. ரெண்டு பேருமே எல்லை மீற நினைச்சோம்... ஆனா நல்லவேளையா, அங்கே நாம ரெண்டு பேரும் மட்டும்தான் இருந்தோம்! நாம பண்ண போற தப்பிலிருந்து நாமளே ஒருத்தரையொருத்தர் காப்பாத்திக்கிட்டோம். உனக்கும் என் மேல கோபம் வர உரிமையிருக்கு, எனக்கும் இருக்கு. ஆனா, இந்த கோர்ட்டு, விவாகரத்துன்னு எதுக்குடி? நான் என்ன தினமும் தப்புப் பண்ணியா உன்னை வதைச்சேன்? இல்ல நீதான் பண்ணியிருக்கியா?"


அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. தன் தவறும் அவளுக்குப் புரிந்தது. சுற்றிலும் இருந்த குடும்பத்தினரை விடுத்து, என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து, என் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டாள்.


"இனிமே இந்த மாதிரி சபலம் எதுவும் வராதுடி..." என்று அவள் தலையைக் கோதினேன்.


"நம்பிட்டேன்..." என்று என் சட்டையைப் பலமாகப் பற்றிக்கொண்டாள்.


தூரத்தில் இருந்து இதைப் பார்த்த என் அம்மா, நிம்மதியுடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.


சந்தேகம் மட்டுமல்ல... சபலமும் சந்தோஷமான வாழ்க்கைக்கு எதிரிதான்!

No comments: